/

துல்லிய விவசாயம்..

'துல்லிய விவசாயம்' எனும் முறையில் நவீன விவசாய நடைமுறைகளைப் பயன்படுத்தி, பயிர்களைப் பயிரிட்டு அதிக விளைச்சலை அறுவடை செய்துள்ளார் தருமபுரி மாவட்டத்துக்கு உள்பட்ட மோளையனூர் கிராமத்தைச் சேர்ந்த முற்போக்கு விவசாயி வி. சாமிக்கண்ணு.

News image
Updated On :22 மார்ச் 2025, 6:38 pm

பிஸ்மி பரிணாமன்

'துல்லிய விவசாயம்' எனும் முறையில் நவீன விவசாய நடைமுறைகளைப் பயன்படுத்தி, பயிர்களைப் பயிரிட்டு அதிக விளைச்சலை அறுவடை செய்துள்ளார் தருமபுரி மாவட்டத்துக்கு உள்பட்ட மோளையனூர் கிராமத்தைச் சேர்ந்த முற்போக்கு விவசாயி வி. சாமிக்கண்ணு.

அவரிடம் பேசியபோது:

'நாங்கள் விவசாயக் குடும்பம் என்பதால், எனக்கு 42 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயத்தில் அனுபவம் இருக்கிறது. பள்ளியில் படிக்கும்போதே வேளாண்மைப் பணியில் ஈடுபட்டுவந்தேன். ஆரம்பத்தில், காய்கனிகள், கிழங்குகளைப் பயிரிடுவதில் கவனம் செலுத்தினேன். உள்ளூரிலேயே கிடைத்த விலைக்கு விற்றேன். கடின உழைப்பு இருந்தாலும் சந்தை தொடர்பான தகவல்கள் சரிவர கிடைக்கப் பெறாததால், நியாயமான லாபத்தைப் பெற முடியவில்லை.

2003-இல் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட 'துல்லிய விவசாய நுட்பங்கள்' குறித்து அறிந்தேன்.

நிலத்தின் வள மேலாண்மையை மேம்படுத்தவும், பயிர் விளைச்சலை அதிகரிக்கவும் தொழில்நுட்பத்தை முறையாகப் பயன்படுத்தும் அறிவியல் அணுகுமுறையாகும். அதனால் பயிரிடுதலில், பயிர்களைக் காப்பதில் பல நுணுக்கங்கள் தெரிந்தது.

எனக்குச் சொந்தமான 4.6 ஏக்கர் நிலத்தில் தக்காளி, கத்திரிக்காய், புடலங்காய், தர்ப்பூசணி, முலாம்பழம், முருங்கைக்காய், மரவள்ளிக்கிழங்கு. நெல், கரும்பு, வாழை, விரல் தினை போன்றவற்றை துல்லிய விவசாய முறையைப் பின்பற்றி பயிரிட்டேன். இதனால் விளைச்சல் அதிகரித்தது. கதலி வாழை ஏக்கருக்கு 12 டன், முருங்கை ஏக்கருக்கு 16 டன், மரவள்ளிக்கிழங்கு ஏக்கருக்கு 23 டன், முலாம்பழம் 18 டன், தக்காளி ஏக்கருக்கு 58 டன் விளைச்சல் கிடைக்கிறது. ஆண்டுக்கு சில ஆயிரம் ரூபாயாக இருந்த வருமானம், 5 லட்சம் ரூபாயாக உயர்ந்தது.

எனது விவசாயச் சாதனைகளால், 'மாவட்ட லட்சாதிபதி விவசாயி‘ என்ற விருது 2023-இல் வழங்கப்பட்டது. இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்திடமிருந்து 5 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசும் கிடைத்தது.

இனி விவசாய செயல்முறைகளை மாற்றி மேம்படுத்துவேன். காய்கனிகளுக்கு விலையை நிர்ணயித்து விளைவித்து அளிக்கும் வகையிலான ஒப்பந்த விவசாயத்தை விரிவாக்கம் செய்ய இருக்கிறேன். ஒப்பந்த விவசாயிகள் சங்கத்தை உருவாக்குதல், பால் வேன்கள் போன்ற தினசரி போக்குவரத்து வசதிகளை கிராமத்துக்கு உறுதி செய்தல், விவசாயிகளுக்கு நேரடி வங்கி வைப்புத்தொகை, பிற மாநிலங்களுக்கு விவசாயிகளின் சந்தை வரம்பை விரிவுபடுத்துதல் உள்ளிட்டவை குறித்து திட்டமிட்டு வருகிறேன்.

நுகர்வோரின் விருப்பத்தின் அடிப்படையில் வழக்கமான பயிர்வகைகளைப் பயிர் செய்வதை நிறுத்தி, விருப்பப் பயிர் உற்பத்தி செய்யவும் போகிறேன். வேளாண் விஞ்ஞானிகளால் புதிதாக அறிமுகம் செய்யப்படும் வேளாண்மை தொழில்நுட்பங்களை ஏற்பதுடன் சக விவாசாயிகளையும் ஏற்றுக் கொள்ள வலியுறுத்துவேன்.

வேளாண்மைத் துறையில் ஏற்படும் மாற்றங்களை உள்வாங்கிக் கொண்டு நடைமுறைப்படுத்தினால் விவசாயிகள் லாபத்தை அதிகரிக்கலாம்'' என்கிறார் சாமிக்கண்ணு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.