/

மேடை நாயகன்!

பேரிடர் காலங்களில் பாதிப்புக்குள்ளானோரை நேரடியாகச் சந்தித்து உதவிகளைச் செய்பவர், ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவிகள் செய்பவர், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மேடைகளில் பேசியவர்

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 6:46 pm

பொ. ஜெயசந்திரன்

பேரிடர் காலங்களில் பாதிப்புக்குள்ளானோரை நேரடியாகச் சந்தித்து உதவிகளைச் செய்பவர், ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவிகள் செய்பவர், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மேடைகளில் பேசியவர், பேராசிரியர், பட்டிமன்ற நடுவர்.. என்று பல்வேறு பரிணாமங்களைக் கொண்டவர் முனைவர். தங்க.இரவிசங்கர்.

புதுக்கோட்டை மாவட்டத்துக்கு உட்பட்ட குழந்திரான்பட்டு கிராமத்தைப் பூர்விகமாகக் கொண்டவர். ஆனால் வளர்ந்தது ஆவணத்தான்கோட்டை என்ற ஊர்.

அவரிடம் பேசியபோது:

"விவசாயக் குடும்பத்தில் பிறந்தேன். என்னுடைய ஆரம்பக் கல்வியை அறந்தாங்கி டிஇஎல்சி நடுநிலைப் பள்ளியிலும், உயர்நிலை, மேல்நிலைக் கல்வியை பூவை மாநகர் எனும் ஊரில் உள்ள பள்ளிகளிலும் படித்தேன். இளங்கலை, முதுகலை பொருளாதாரப் படிப்புகளை புதுக்கோட்டை மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரியிலும்,, ஆய்வியல் நிறைஞர் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்திலும், முனைவர் பட்டம் திருநெல்வேலி சுந்தரனார் பல்கலைக்கழகத்திலும், கூட்டுறவு மேலாண்மை பட்டயப் படிப்பை தஞ்சாவூரிலும் படித்தேன்.

பள்ளி, கல்லூரி மேடைகளில் இனிமையாகப் பாடுவது, பலகுரலில் பேசுவது, பறவைகள்- விலங்குகள் போல் சத்தம் செய்வது என எனது கலைப்பயணத்தை 1996-ஆம் ஆண்டு முதல் தொடங்கினேன். நாடு முமுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மேடைகளைக் கடந்து பயணம் தொடர்கிறது.

2000-ஆம் ஆண்டு முதல் முதல் 2003 வரை புதுக்கோட்டை மாவட்டத்தில் தன்னார்வத் தொண்டு நிறுவன தலைவராகப் பொறுப்பேற்று, கிராமப்புற மேம்பாடு, மகளிர் மேம்பாடு,அரசு விழிப்புணர்வு தொடர்பான திட்டப்பணிகளைச் செயல்படுத்தினேன்.

2004-இல் ஏற்பட்ட சுனாமி பேரிடரின்போது, புதுக்கோட்டையிலிருந்து ஓர் அணியாகச் சென்று ஐஏஎஸ் அலுவலர் சுப்ரியா சாகு தலைமையில் விழுந்தமாவடி, செருதூர், காமேஸ்வரம், அக்கரைப்பேட்டை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் களப் பணியாற்றினேன்.

2009-ஆம் ஆண்டு பிப்ரவரி 2-இல் பழனி அருள்மிகு பழனியாண்டவர் கலை, பண்பாட்டுக் கல்லூரியில் பொருளாதாரத் துறை பேராசிரியராக பணியில் சேர்ந்தேன். பொருளாதாரத்தில் 4 நூல்கள், இயற்கை வளமும், சமூகம் சார்ந்து 3 நூல்கள், ஒரு சிறுகதைத் தொகுப்பு, 1 கவிதை நூல் என 9 நூல்களை எழுதியுள்ளேன். பல சுய முன்னேற்ற கட்டுரைகள், சமூக விழிப்புணர்வுக் கட்டுரைகள், சமூக விழிப்புணர்வு மண்ணிசை பாடல் தொகுப்பையும் வெளியிட்டுள்ளேன்'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.