அசத்தும் அரசுப் பள்ளி
பொதுவாக அரசுப் பள்ளி ஆசிரியர்கள் என்றாலே சரியாகக் கற்றுக் கொடுக்க மாட்டார்கள் என்ற மனநிலை பெரும்பாலானோருக்கு உண்டு.


பொதுவாக அரசுப் பள்ளி ஆசிரியர்கள் என்றாலே சரியாகக் கற்றுக் கொடுக்க மாட்டார்கள் என்ற மனநிலை பெரும்பாலானோருக்கு உண்டு. ஆனால் அந்த எண்ணத்தைத் தங்களது செயல்பாடுகளால் மாற்றிய மைத்து சாதனை படைத்திருக்கிறார்கள் ஈரோடு மாவட்டம் பவானிசாகர் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த கோடேபாளையம் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள்.
இந்தப் பள்ளியைப் பார்த்தால் தனியார் பள்ளி என்று சொல்லுமளவுக்கு, சுவர்களில் சித்திரங்கள் வரையப்பட்டுள்ளன. திறனறித் தேர்வுக்குத் தயாராவதற்காக குழுவாக அமர்ந்து மடிக்கணினியில் கேள்வி, பதில்களைக் கேட்டு விவாதித்துக் கொள்ளுமளவுக்கு அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய ஆசிரியர்கள் உள்ளனர்.
திறனறித் தேர்வில் சாதனை: 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை 231 மாணவ, மாணவியர். இதில் சரிபாதி மாணவியர்.
ஒவ்வோராண்டும் நாடு முழுவதும் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8-ஆம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு தேசிய வருவாய் வழி திறனறித் தேர்வுகளை மத்திய அரசு நடத்தி வருகிறது. மாநில மக்கள் தொகைக்கேற்ப மாணவ, மாணவியரைத் தேர்வு செய்து அவர்களுக்கு 9, 10, பிளஸ் 1, பிளஸ் 2 வரை 4 ஆண்டுகளுக்கு ரூ.48 ஆயிரத்தை (மாதம் ரூ.1,000 வீதம்) வழங்குகிறது. பல லட்சம் பேர் எழுதும் இந்தத் தேர்வில் கடந்த ஆண்டு தமிழகத்தில் 5,500 பேர் தேர்ச்சி பெற்றனர். இதில் கோடேபாளையம் பள்ளியில் இருந்து மட்டும் 6 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இப்பள்ளியைப் பொருத்தவரையில் படிப்பவர்களில் 95 சதவீதத்தினர் முதல் முதலாகப் பள்ளி வாசலை முத்தமிடுபவர்கள். அவர்களின் பெற்றோர் கல்குவாரிகளிலும், கட்டடத் தொழிலிலும் ஈடுபட்டுள்ளவர்கள்.
இந்தக் குடும்பங்களில் வந்த பிள்ளைகளை உயர்த்த வேண்டும் என்ற உன்னத லட்சியத்துடன் பள்ளி நிர்வாகத்தினர் பாகுபாடில்லாமல் செயல்பட்டு வருகின்றனர்.
2013-14-ஆம் கல்வியாண்டில் 3 மாணவர்கள் தேசிய வருவாய் வழி திறனறித் தேர்வில் தேர்ச்சி பெற்று உதவித் தொகை பெற்றனர். அன்று முதல் தொடர்ந்து இப்பள்ளி மாணவர்கள் தேர்ச்சி பெற்று வருகின்றனர். அதிகபட்சமாக 2018-19-இல் 11 மாணவர்களும், 2029-20-இல் 10 மாணவர்களும் உதவித் தொகைக்குத் தேர்ச்சி பெற்றனர்.
இதற்காக, மாநிலத்தில் சிறந்த பள்ளியாகத் தேர்வு செய்யப்பட்டு விருதும் வழங்கப்பட்டது.
ஜனநாயக முறைப்படி மாணவர் தேர்தல்:
பள்ளியில் மாணவர் தலைவர் தேர்தல் நடத்தப்படுகிறது. வேட்பு மனுத் தாக்கல், பரிசீலனை, வாபஸ் பெறுதல், இறுதி வாக்காளர் பட்டியல், பிரசாரம், வாக்குப் பதிவு, வாக்கு எண்ணிக்கை- இப்படி ஜனநாயகத்தின் அனைத்து அம்சங்களும் நேரடியாகக் கற்றுத் தரப்படுகின்றன.
இறுதியில் வெற்றி பெற்றவர்களுக்குப் பொன்னாடை போர்த்தி சான்றிதழ் அளிக்கப்பட்டு, பல்வேறு குழுக்களும் அமைக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகின்றன.
போட்டித் தேர்வுகளுக்குத் தயார்படுத்துதல்: முன்னாள் மாணவர்களுக்கென (8-ஆம் வகுப்புக்கு மேல்) வாட்ஸ் ஆப் குழு அமைக்கப்பட்டு போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வருவதுதான். இதற்காக அரசுப் பள்ளி ஆசிரியர்களே வாட்ஸ் ஆப் குழு) தேனி திண்ணை அமைப்பு) ஏற்படுத்தி இயங்கி வருகின்றனர்.
இதுகுறித்து பள்ளித் தலைமை ஆசிரியையும், நல்லாசிரியர் விருது பெற்றவருமான என்.சித்ரா கூறியதாவது:
மாணவர்களுக்கு கராத்தே, சிலம்பம் உள்ளிட்டவை கற்றுத் தரப்படுகின்றன. சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் தேசிய திறனறித் தேர்வு சமயத்தில் சிறப்புப் பயிற்சி அளிக்கிறோம். ஆசிரியர்களின் முயற்சியும் ஒத்துழைப்பும் பாராட்டத்தக்கது என்றார்.
ஆசிரியர்கள் நினைத்தால் சமுதாயத்தில் கல்விப் புரட்சியை ஏற்படுத்த முடியும் என்பதற்கு இப்பள்ளியின் ஆசிரியர்கள் ஓர் உதாரணம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...