/

பெண் நம்மாழ்வார்!

பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்க  அச்சாணியாக இருந்து,  இயற்கை விவசாயம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தியவர் நம்மாழ்வார்.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 10:10 am

சி.வ.சு. ஜெகஜோதி

பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்க  அச்சாணியாக இருந்து,  இயற்கை விவசாயம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தியவர் நம்மாழ்வார். இவரைப் போலவே,   எம்.எஸ்சி, பி.எட் பட்டம் பெற்ற பெண் ஒருவரும் தனி நபராக, இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். அவர்தான் முனைவர் ந.மகாலட்சுமி.

சென்னை-  திருவான்மியூர் திருவள்ளுவர் நகரில் வசித்து வரும் இவரது மாமனாரின் சொந்த ஊர் காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு உள்பட்ட உத்தரமேரூர் அருகேயுள்ள மலையாங்குளம் எனும் சின்னஞ்சிறு அழகிய கிராமம்.

இந்தக் கிராமத்தில் 5 ஏக்கர் பரப்பளவில் பாரம்பரிய நெல் ரகங்களை பயிரிட்டிருப்பதுடன் அதன் அருகிலேயே ஒரு பண்ணைக்குட்டையும் அமைத்து 
விவசாயம் செய்து வருகிறார். 

இவரிடம் ஓர் சந்திப்பு:

இயற்கை விவசாயத்தின் மீது ஆர்வம் ஏன்?

பெரும்பாலான மக்கள் ரசாயனம் கலந்த உணவையே உண்பதால் இளம் வயது மாரடைப்பு மரணங்கள் அதிகரித்து வருவதும், சர்க்கரை நோய், மூட்டுவலி, வாத நோயால் அவதிப்படுவதையும் நினைக்கும்போதே வேதனையாக இருக்கிறது. இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க,  நம்மால் முடிந்த உதவியை இந்தச் சமுதாயத்துக்குச் செய்ய வேண்டும்.

நோயில்லாத சமுதாயத்தை உருவாக்க, இயற்கை விவசாயம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன்.  

நம்மாழ்வார் இருக்கும்போது அவரோடு உடன் செல்வேன். அவர் விழிப்புணர்வு ஏற்படுத்தியதைப் பார்த்து அதனால் ஈர்க்கப்பட்டேன். அவருக்குப் பிறகு தன்னம்பிக்கையுடன் தனி ஒருத்தியாகப் பிரசாரம் செய்கிறேன்.   என் சொந்த நிதியிலிருந்து தான் இயற்கை விவசாயமும்,அதற்கான பயிற்சிகளையும் கொடுத்து வருகிறேன்.

மலையாங்குளத்தை இயற்கை விவசாயத்துக்காக தேர்வு செய்யக் காரணம் என்ன?

எனது மாமனார் பொன்னுரங்க நாயக்கர், பல ஆண்டுகள் ஊராட்சி மன்றத் தலைவராகப் பதவி வகித்து வந்தவர். சொந்தமான நிலமாக இருந்ததால் 5 ஏக்கரில் மட்டும் சீரகச் சம்பா, கிச்சடி சம்பா, கருப்புக் கவுனி உள்ளிட்ட பாரம்பரிய நெல் ரகங்களை பயிரிட்டுள்ளேன். 

உற்பத்தி செய்யும் அரிசி ரகங்களுக்கு விற்பனை வாய்ப்புகள் எப்படி இருக்கின்றன?

நெல்,  எள், வேர்க்கடலை ஆகியவற்றை இயற்கை முறையில் விளைவித்து செக்கில் ஆட்டி சுத்தமான எண்ணெயாக விற்பனை செய்கிறேன்.  மகத்துவம் தெரிந்தவர்கள் என் வீட்டுக்கே வந்து விலைக்கு வாங்கிச் செல்கிறார்கள். விற்பனை வாய்ப்புகள் அதிகமாக இருந்தும் பலரும் உற்பத்தி செய்ய யோசிப்பது தான் வருத்தமான செய்தி. மக்களுக்கு இயற்கை விவசாயத்தின் மீது போதுமான விழிப்புணர்வு ஏற்படவில்லை. மண்ணை மலடாக்காத இயற்கை விவசாயத்துக்கு மக்கள் மாறியே ஆக வேண்டும்.

உங்கள் குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு எப்படி உள்ளது?

என் கணவர் நரசிம்மன்,  சென்னைப் பல்கலைக்கழகத்தில் துணைப் பதிவாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். எனக்கு ஒரு மகள், ஒரு மகன். இருவரும் மருத்துவர்கள்.  மருமகனும் மருத்துவர் இவர்கள்  எனது பணிக்கு உறுதுணையாக இருக்கின்றனர். 

நீங்கள் பெற்ற விருதுகள்?

"சுய சக்தி விருது' என்ற விருதை பிராண்ட் அவதார் அமைப்பு வழங்கியது. மெக்சிகோவில் உள்ள தொலேசா பல்கலை முனைவர் பட்டம் வழங்கியுள்ளது.நேச்சுரல்ஸ் அமைப்பின் சார்பில் சிறந்த விவசாயி விருதை முதல்வர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் வழங்கினார்.

எந்த அரிசி எந்த நோய்க்கு நல்லது?

பால்குடவாழை-குழந்தை பிறந்து 6 மாதத்துக்குப் பிறகு உணவு கொடுக்கத் தொடங்கும்போது இந்த அரிசியில் செய்த உணவைக் கொடுத்தால் குழந்தைக்கு குடல்கள் உள்பட அனைத்து உடல் உறுப்புகளும் நன்றாக பலப்படும்.

ரத்தசாலி அரிசி-இரும்புச்சத்து குறைவாக இருக்கும் பெண்கள் உள்பட அனைவரும் சாப்பிடலாம். இந்த அரிசியில் சமைத்து சாப்பிட்டால் ரத்த அணுக்கள் கூடும்,நரம்பு மண்டலத்தை பலப்ப்டுத்தும் பூங்கார் அரிசி-பூவை என்றால் பெண் என்று பொருள்.பெண்கள் சுகப்பிரசவம் ஆவதற்கு இந்த அரிசி சாதத்தை சாப்பிடலாம்.கருப்பையை பலப்படுத்துவதால் சுகப்பிரசவமாகி விடும். தாய்ப்பால் நன்றாக சுரக்கும் கல்லுண்டைச்சம்பா-அந்தக்காலத்தில் போருக்கு செல்லும் வீரர்களுக்கு வழங்கப்பட்டது.இப்போது மல்யுத்த வீரர்களுக்கு இந்த அரசி சாதம் வழங்கப்படுகிறது.

சீரகச்சம்பா-அகத்தை சீர்படுத்துவதால் இந்த அரிசிக்கு சீரகச்சம்பா என்ற பெயர் வந்துள்ளது. உடல் உறுப்புகளை சீர்படுத்துகிறது.

இதே போல வாத நோய் உள்ளவர்கள் கிச்சடி சம்பா அரிசி சாதமும்,நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பிசினி அரிசியையும் சாப்பிடலாம்.

பாரம்பரிய அரிசி வகைகளில் எனக்குத் தெரிந்து சுமார் 150க்கும் மேற்பட்ட ரகங்கள் உள்ளன. இவையனைத்துமே நோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடியதாகவும், மனிதன் நோயில்லாமல் வாழவும் பேருதவியாக இருக்கின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.