/

சுற்றுலா செல்ல வயது தடையில்லை!

புல்லட் பைக்கில் அமர்ந்து ஊர் சுற்றுவது  இளைய தலைமுறைக்குப்  பிடித்த விஷயம்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 8:11 pm

சுதந்திரன்


புல்லட் பைக்கில் அமர்ந்து ஊர் சுற்றுவது இளைய தலைமுறைக்குப் பிடித்த விஷயம். .ஒரு நாள். பல நாள்கள் பயணம் முதல் பல மாதங்கள் வரை பயணிக்கும் தீவிர பயணப் பிரியர்களும் பிரியைகளும் மாநிலத்திற்கு மாநிலம் இருக்கிறார்கள்.

எழுபது பிளஸ் ஜோடி ஒன்று முப்பதாயிரம் கி. மீ பயணம் செய்து வந்திருக்கிறார்கள். அதுவும் 1974 மாடல் புல்லட் பைக்கில். சென்ற ஆண்டு கரோனாவாலும் இவர்களது பயணத்தை முடக்க முடியவில்லை. ஆனால் 2021 கரோனா இந்த ஜோடியின் பயணத்தை நிறுத்தியிருக்கிறது.

குஜராத் வடோதராவைச் சேர்ந்த மோகன்லால் செளஹான், (77) அவர் மனைவி லீலாபென் (71) இந்தியாவில் இதுவரை நான்கு நெடும் பயணங்களை மேற்கொண்டு இருக்கிறார்கள்.

"ஷோலே' படத்தில் தர்மேந்திரா- அமிதாப் பச்சன் தனித்தனியாக பயணிக்கும் இணைப்புடன் கூடிய பைக், மோகன்-லீலாவின் பயணக் கனவுகளுக்கு சிறகுகள் முளைக்கச் செய்தது. "எங்கள் பயணக் கதையை வாசித்தால் தர்மேந்திரா -அமிதாப் ஜோடியை மறந்து விடுவீர்கள். இணைப்பு பைக் என்றாலே மோகன் - லீலா ஜோடிதான் நினைவுக்கு வரும்' என்று அடித்துச் சொல்கிறார்கள் மோகன்-லீலா.

""2011 -இல் எனக்கு மாரடைப்பு வந்தது. கடவுள் புண்ணியத்தில் எப்படியோ தப்பித்துவிட்டேன். மாடிப்படிகள் ஏறக் கூடாது என்று சொல்லிவிட்டார்கள். பார்த்த வேலையிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றேன். வீட்டில் சும்மா முடங்கிக் கிடக்க விருப்பம் இல்லை. வாழ்க்கையை எனது விருப்பப்படி வாழ்ந்து முடிக்கலாம் என்று தீர்மானித்தேன். 2015 லிருந்து தனியாக சிறிய தூரங்கள் பைக்கில் பயணித்தேன். பிறகுதான் லீலாவையும் அழைத்துக் கொண்டு போகலாம் என்று தீர்மானித்தேன்.

ஆனால் அதில் ஒரு சிக்கல் இருந்தது. 2010-இல் லீலா கீழே விழுந்து காலில் முறிவு ஏற்பட்டது. அதனால் லீலாவுக்கு அடிக்கடி காலில் வலி ஏற்படும். நடக்கவும் சிரமப்பட்டார். பிறகு எப்படி லீலாவை பயணத்தில் உடன் அழைத்துப் போவது என்று யோசித்தேன். லீலாவை பின்னால் அமரச் செய்து நீண்ட தூரம் பயணிப்பதில் லீலாவுக்கு சிரமம் ஏற்படும். அதனால் உடன் வரும், லீலா வசதியாக அமர பக்கவாட்டில் சக்கரத்துடன் கூடிய இருக்கையை பைக்குடன் இணைத்தேன். அதில் லீலா அமர்ந்து பயணிக்கலாம். லீலாவும் இந்த ஏற்பாட்டிற்கு ஒப்புக் கொண்டார்.

2016-இல் வடோதராவிலிருந்து புறப்பட்டு மஹாராஷ்டிரா, கோவா, கர்நாடக, கேரளா, தமிழ்நாடு சுற்றி திரும்பினோம். 2018-இல் இரண்டாம் சுற்றுலா பயணம். தரை வழியாக தாய்லாந்து செல்ல முடிவு செய்தோம். முதலில் மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், ஜார்க்கண்ட், ஒடிசா, மேற்கு வங்காளம், அஸ்ஸாம், மேகாலயா வரை சென்றுவிட்டோம். மேகாலயாவில் நிலச் சரிவு ஏற்பட்டதால் மேற்கொண்டு பயணிக்க அனுமதி கிடைக்கவில்லை. அதனால் ஏமாற்றத்துடன் திரும்பினோம். வரும் வழியில், மத்திய பிரதேசத்தின் "சித்ரகூட்' என்னும் இடத்தில் லீலா கீழே விழுந்து கணுக்காலில் முறிவு ஏற்பட்டது. அறுவை சிகிச்சை செய்து கொண்டு அங்கேயே இரண்டு வாரம் மருத்துவமனையில் தங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பிறகு வடோதரா திரும்பினோம். 2019 -இல் ராஜஸ்தான், பஞ்சாப், ஹிமாச்சல் பிரதேசம், ஜம்முவை சுற்றி வந்தோம். 2020 இல் ஆந்திரப் பிரதேசம் சென்றோம். பயணத்தில் ஒவ்வொரு நாளுக்கும் ரூபாய் 3500 செலவு செய்யலாம் என்று தீர்மானித்திருந்தோம். இதில் உணவு, பெட்ரோல் தங்கும் செலவுகள் எல்லாம் அடக்கம். இப்படி ஒவ்வொரு பயணத்திற்கும் இரண்டு லட்சம் செலவு செய்தோம்.

எல்லா மாநிலங்களையும் சுற்றி பார்த்த வகையில் எந்த மாநிலமும் ஒன்றுக்கொன்று குறைந்ததில்லை என்றே தோன்றுகிறது. வீட்டில் அதிக நாட்கள் இருப்பது போர் அடிப்பதால் இந்தத் தரை வழி சுற்றுலா எங்களுக்கு ஒரு வடிகாலாக அமைந்தது. இந்த ஆண்டு கரோனா தாக்கம் அதிகமாக இருப்பதால் பயணத் திட்டத்தை ஒத்தி போட்டுவிட்டோம். பயணத்தின் போது பைக்கில் பயணிக்கும் இதர சுற்றுலாப்பயணிகளைச் சந்தித்தோம். எங்கள் பயணங்களைப் பற்றி அறிந்து கொண்டதும் எங்களைவிட சுற்றுலாவில் ஆர்வமுள்ள இளைஞர்கள் நீங்கள்தான் என்றனர். ''என்கிறார் மோகன்லால் செளஹான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.