நான் கவிஞனானது... - கவிஞர் வாலி!
""நான் ஓவியக் கலையில் முன்னேறிக் கொண்டிருந்தேன். அரை ஆண்டு விடுமுறை வந்தது. என் சொந்த ஊருக்குப் புறப்பட்டேன்.


""நான் ஓவியக் கலையில் முன்னேறிக் கொண்டிருந்தேன். அரை ஆண்டு விடுமுறை வந்தது. என் சொந்த ஊருக்குப் புறப்பட்டேன்.
ஓரிரு நாள் கழித்து வெளியே போய்விட்டு வீடு திரும்பிய என்னை என் தந்தை ஸ்ரீனிவாச ஐயங்கார் படு கோபமாக வரவேற்றார்.
""இதுதான் நீ படிக்கும் படிப்பா?'' என்று கர்ஜித்தார். அப்பொழுது அவர் கையில் நான் வரைந்த சில நிர்வாணப் படங்கள் இருந்தன.
என்னை அவர் தவறாகப் புரிந்து கொண்டு விட்டார். எவ்வளவோ சமாதானம் சொல்லிப் பார்த்தேன்.
படித்தது போதும் வீட்டிலேயே இரு என்று கட்டளை பிறப்பித்தார். என்னால் அவரை மீற முடியவில்லை. ஓவியத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு வீட்டிலிருந்தவாறே கதைகள் எழுதத் துவங்கினேன்.
எழுத்தாளர் ஸ்ரீரங்கம் ராமகிருஷ்ணனின் திருமணம் குளித்தலையில் நடைபெற்றது. கலைமகள் ஆசிரியர் கி.வா.ஜெகந்நாதனை அங்கே சந்தித்து கதை எழுதும் என் ஆற்றலை சொன்னேன். அவர் தபாலில் கதையை அனுப்பி வைக்கும்படியும் நன்றாக இருந்தால் பிரசுரிப்பதாகவும் சொன்னார்.
மகிழ்ச்சிக்குக் கேட்கவா வேண்டும். மறுநாள் தபால் அலுவலகம் நோக்கி நடை போட்டேன். எழுதித் தள்ளினேன். மாதங்கள் கடந்தது. என் பேனா ஓயவில்லை.
ஒரு நாள் என் கண்களையே என்னால் நம்ப முடியவில்லை. என் கதை "பிராந்தி' என்ற தலைப்பில் பிரசுரமாகியிருந்தது. நான் பிற்காலத்தில் கவிஞனாகப் போகிறேன் என்பதற்கு இத்தலைப்புதான் முன்னோடியாக இருந்தது.
தொடர்ந்து "என்ன பதில் சொல்வது' என்ற தலைப்பில் "குமுதம்' வார இதழில் என் கதை வெளியாயிற்று.
ஏட்டில் எழுதியதை என் நண்பர்களிடம் எடுத்துக் கூறும் போது நாடகமாகப் போட்டால் நன்றாக இருக்குமே என்று பலர் அபிப்பிராயம் கூறினர். சும்மாயிருப்பேனா நான்?
நாடக உலகில் தலையைக் காட்ட ஆரம்பித்தேன். அலைபாயும் என் ஆசைகளை நாடகம் என்னும் கலைக்குள் பத்தாண்டு காலம் அடக்கி வைத்தேன். நானே கதை எழுதுவேன்; நடிப்பேன்; நாடகம் நடத்துவேன்.
"வைரம் நாடக சபா' வில் சில வருடங்கள் நிரந்தரக் கதாசிரியராக இருந்தேன்.
அப்பொழுது திருச்சி வானொலி நிலையத்தில் பணியாற்றி வந்த துறைவன் ரேடியோ நாடகங்களில் நடிக்க வாய்ப்பளித்தார். மூன்று வருட காலம் நிலைய நடிகனாக இருந்து சுமார் 300 நாடகங்களில் நடித்தேன்.
மாலை தோறும் ஒலிபரப்பாகும் கிராம நிகழ்ச்சிகள் பகுதியில் நானும் எழுத்தாளர் சுகி சுப்பிரமணியமும் எழுதிப் படித்து நடிப்போம்.
அப்பொழுது செய்த ஒரு தவறை இன்றைக்கும் நான் நினைத்துக்கொள்கிறேன். மேட்டூர் அணை நீர்த்தேக்கத்தை 100.5 அடி என்று படிப்பதற்கு பதிலாக 1005 அடி என்று படித்துவிட்டேன். ஒரே பரபரப்பு.
முதல் நாடகத்தில் நடிக்கும் பொழுது ஸ்கிரிப்டைப் பார்த்து படிக்க வேண்டும். "என்னடா ராமு ஹி ஹி. ஹி எனத் தமிழில் டைப் செய்யப்பட்டிருந்தது. தமிழில் "உறி' என்னும் இரு எழுத்துகளால் சேர்த்து அச்சடிக்கப்பட்டிருந்தது. ஹி...ஹி என்று சிரிப்பதற்கு பதிலாக உறி.. உறி.. உறி என்று படித்துவிட்டேன்.
மெல்லிசைப் பகுதிக்குப் பொங்கல் விழாவன்று ஒலிபரப்ப ஒரு பாட்டு கேட்டனர்.
""நிலவுக்கு முன்னே நீ வர வேண்டும்
நீ வந்த பின்னே நிலவெதற்கு வேண்டும்?''
எனத் துவங்கும் இப்பாடல் தான் முதன் முதலாகப் பலர் கேட்க ஒலிபரப்பானது. இப்பாட்டைப் பாடியவர் டி.எம்.எஸ்.
இப்பாட்டைப் பாட அவர் நிலையத்திற்கு வந்த பொழுதுதான் முதன் முதலாக எனக்குப் பரிச்சயம் ஏற்பட்டது. முருகனுக்காகப் பாட சில பாடல்களை அவர் என்னைக் கேட்டிருந்தார்.
இதே மாதிரி பி.பி சீனிவாஸ் என்னைக் கேட்டிருந்தார். அவருக்கு சில லவ் டூயட் பாடல்களை சுசீலாவுடன் இணைந்து பாட எழுதிக் கொடுத்தேன்.
நான் காதலித்துத் திருமணம் செய்து கொண்ட மனைவி பெயர் ரமண திலகம். "பணம் தரும் பரிசு' படத்திலே நடித்திருக்கிறார் என்று தம் அனுபவங்களை விவரித்தார் கவிஞர் வாலி.
(திரைஞானி தொகுத்த "அவரவர் வாழ்வில் ஆயிரம் அர்த்தங்கள்' என்னும் நூலிலிருந்து)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...