/

பதினேழு வயது தமிழக மாணவருக்கு பத்மஸ்ரீ...!

இறகுப் பந்தாட்ட வீராங்கனை பி.வி. சிந்துதான் "பத்மஸ்ரீ' விருது பெற்றவர்களிலேயே வயதில் மிகச் சிறியவர்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:35 pm

பிஸ்மி பரிணாமன்

இறகுப் பந்தாட்ட வீராங்கனை பி.வி. சிந்துதான் "பத்மஸ்ரீ' விருது பெற்றவர்களிலேயே வயதில் மிகச் சிறியவர். பத்தொன்பதாம் வயதில் சிந்துவுக்கு "பத்மஸ்ரீ' விருது அளிக்கப்பட்டது. இந்த சாதனையை முறியடித்திருக்கிறார், செங்கல்பட்டைச் சேர்ந்த மாணவர் ஃபஸூல் ரஹ்மான். 
பதினேழு வயதாகும் ஃபஸýல், 2018 -2019 ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருதுக்காக மத்திய அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஃபஸýல் செங்கல்பட்டில் செவன்த் டே பள்ளியில் "பிளஸ் ஒன்' படித்துக் கொண்டிருக்கும் மாணவர். இத்தனை சிறிய வயதில் பத்மஸ்ரீ விருது ஃபஸூலைத் தேடி வரத் துணை புரிந்தது எது? ஃபஸýல் ரஹ்மான் விளக்குகிறார்:
""என் குடும்பம் நடுத்தரக் குடும்பம்தான். அப்பா சிராஜுதீன். தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார். அம்மா நஸீமுனிஸா பி.ஏ படித்தவர். வீட்டை நிர்வகிப்பவரும் அவர்தான். ஆறாவது படிக்கும் தங்கை. பள்ளியில் படிக்கும் போதே மத போதனை வகுப்புகளுக்குச் சென்று "ஆலிம்' பட்டம் வாங்கியுள்ளேன். இதர மதங்களைப் போலவே "ஏழைகளுக்கு உதவவேண்டும்' என்று இஸ்லாம் வலியுறுத்துகிறது. வசதியில்லை என்ற ஒரு காரணத்திற்காக பள்ளிக்கு வர முடியாத சிறுவர் சிறுமியர் ஏராளம். பட்டணங்களில் சேரிப் பகுதிகளில், கிராமங்களில் பள்ளியில் சேராத சிறுவர் சிறுமியர் இன்றைக்கும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஒரு பைசா வாங்காமல், வாழ்க்கையில் நலிந்தவர்களின் குழந்தைகளுக்கு பள்ளிக் கல்வி அளிக்க ஒரு திட்டம் இருந்தால் பல்லாயிரக்கணக்கான சிறுவர் சிறுமியர் கல்வியின் பக்கம் வருவார்கள். அதற்கு என்ன செய்யலாம்..? என்று என் மனம் யோசித்தது. ஒரு மாணவனிடமிருந்து மாதம் ஒரு ரூபாய் இந்தியா முழுவதும் வசூல் செய்தால் வரும் பணத்திலிருந்து, வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் குடும்பங்களின் குழந்தைகள் பள்ளிக் கல்வி பெற உதவலாம் என்று தீர்மானித்தேன். அப்போது நான் ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். இந்த திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதும் சுமார் எண்ணூறு கோடி நிதி திரட்ட முடியும். அதை எழுதி பாரதப் பிரதமர் மோடி அவர்களுக்கு அனுப்பி வைத்தேன். எனது யோசனை ஏற்றுக்கொள்ளப்பட்டால் அந்தத் திட்டத்திற்கு "ஏழை மாணவர்களுக்கான டாக்டர் அப்துல் கலாம் இலவச சேமிப்பு திட்டம்' என்று பெயர் வையுங்கள் என்றும் கேட்டுக் கொண்டிருந்தேன். கடிதத்தில் பள்ளி முகவரி கொடுத்திருந்தேன். பதில் ஏதும் வரவில்லை. நானும் அது பற்றி மறந்து போனேன். 
ஒன்பதாம் வகுப்பு ஆண்டுத் தேர்வு தொடங்கு முன்பு, பள்ளி ஆண்டு விழா நடந்தது. அன்று விழாவில் திடீரென்று அறிவிப்பு செய்தார்கள். ""நம் பள்ளி மாணவன் ஒருவர் நலிந்தவர்களின் குழந்தைகள் பள்ளியில் ஒரு பைசா கூட தராமல் கல்வி கற்க வகை செய்யும் ஒரு திட்டம் குறித்து பாரதப் பிரதமருக்கு தெரிவிக்க... அந்தத் திட்டம் மத்திய அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. பிரதமர் அந்த மாணவனைப் பாராட்டி கடிதம் எழுதியுள்ளார். அந்த மாணவரால் பள்ளிக்கும் பெருமை கிடைத்திருக்கிறது. அந்த மாணவன் ஒன்பதாம் வகுப்பில் படிக்கும் ஃபஸýல் ரஹ்மான்'' என்றார்கள். அந்த அறிவிப்பு வந்ததும் எனக்கு சந்தோஷ அதிர்ச்சி. மனசுக்குள் மத்தாப்பூ. எனது கோரிக்கை ஏற்கப்பட்டது ஒரு அபூர்வ நிகழ்ச்சியாகவே எனக்குப் பட்டது. பிறகு, அந்தத் திட்டம் குறித்து வேறெந்த தகவலும் இல்லை.
"சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் பிரதமர் அலுவலகத்திலிருந்து ஒரு கடிதம். "25 அக்டோபர் அன்று பிரதமர் உங்களை சந்திக்க விரும்புகிறார்.. வரவும்" என்று கடிதம் வர அம்மாவுடன் தில்லி புறப்பட்டேன். பிரதமரைச் சந்தித்தேன். "மழைக்குக் கூட பள்ளிக்கூடம் பக்கம் வராமல் இருக்கும் குழந்தைகளிடம் கல்வியைக் கொண்டு செல்லும் அற்புதத் திட்டத்தைத் தந்ததற்காகப் பாராட்டுகிறேன்' என்று கைகுலுக்கி பாராட்டினார். தொடர்ந்து நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் போன்றோரையும் கண்டு பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் பெற்றேன். சென்ற குடியரசு தின விழாவில் செங்கோட்டையில் சொற்பொழிவின் போதும் பிரதமர் மோடி டாக்டர் அப்துல் கலாம் இலவச கல்வித்திட்டம் குறித்துப் பேசி என்னையும் குறிப்பிட்டார். 
இந்த ஆண்டு (2018) ஜனவரி மாதம் 15-இல் ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் குடியரசுத் தலைவரையும் சந்தித்து வாழ்த்துக்கள், பாராட்டுதல்களை பெற்றேன். அந்த தருணத்தில் குடியரசுத் தலைவர் முன்னிலையில் "இந்தியாவின் தலைசிறந்த பள்ளி மாணவன்' என்ற பட்டமும் வழங்கப்பட்டது. என்னை குடியரசுத் தலைவரின் விருந்தினராக நடத்தினார்கள்.
நாடாளுமன்றத்தில் டாக்டர் அப்துல் கலாம் இலவச கல்வித்திட்டம் சட்டமாகவும் நிறைவேற்றப்பட்டுள்ளது. 2018-2019 ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருத்திற்காக என்னைத் தேர்ந்தெடுத்துள்ளனர் என்று செய்தி தெரிந்ததும் புதுச்சேரி முதல்வரும், ஆளுநரும் என்னை புதுச்சேரி வரச் சொன்னார்கள். சென்றேன். பூங்கொத்துகளைத் தந்து பாராட்டினார்கள். அடுத்து தமிழக துணை முதல்வர் பன்னீர்செல்வம், உயர்க்கல்வி அமைச்சர் அன்பழகன், கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அனைவரும் 
பாராட்டினார்கள்'' என்கிறார் ஃபஸýல் ரஹமான்.
மகனுக்கு கிடைத்திருக்கும் அங்கீகாரத்தைக் கண்டு மலைத்துப் போயிருக்கும் ஃபஸýல் ரஹ்மானின் தாயாரான 
நஸீமுனிஸா தனது மகனைப் பற்றிச் சொல்கிறார்: 
""சிறுவயதிலிருந்தே ஃபஸýல் நலிந்த குழந்தைகளுக்கு காசு ஏதும் தர மாட்டான். சாப்பிட ஏதாவது வாங்கித் தருவான். "ஏம்மா.. இவங்களால பள்ளிக்கூடம் போய் படிக்க முடியலைன்னு..' சீரியசாகக் கேட்பான். நானும் ஏதோ காரணம் சொல்லி சமாளிப்பேன். அந்தக் கேள்வி அவனுக்குள் அலைபாய்ந்து கொண்டிருந்திருக்க வேண்டும். அதன் காரணமாகத்தான் கடிதம் ஒன்றை பிரதமருக்கு எழுதியிருக்கிறான். எங்களிடம் அது பற்றி ஒன்றுமே சொல்லவில்லை. ஆண்டுவிழாவில் பள்ளியில் அறிவிப்பு செய்த போதுதான் எவ்வளவு பெரிய சாதனையை மகன் செய்திருக்கிறான் என்பது தெரியவந்தது. "பத்மஸ்ரீ' விருதிற்கு ஃபஸýல் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் செய்தியும் எனக்கும் எங்கள் குடும்பத்தினருக்கும் பலமடங்கு மகிழ்ச்சியைத் தந்திருக்கிறது. வீட்டில் டிவி இருந்தாலும் அநாவசியமாக பார்க்க மாட்டான். ரொம்பவும் அடக்கமாக இருப்பான். சமூகப் பணிகளில் கலந்து கொண்டு வருகிறான். அவைதான் ஃபஸýலைப் பண்படுத்தி பக்குவப்படுத்தி நலிந்தவர்களைப் பற்றி சிந்திக்க வைத்து உயர்த்தியிருக்கிறது...''.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.