எனக்கு வேகம்தான் விவேகம்!!!
விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதும் வெற்றி பெறுவதும் வழக்கமான ஒன்றுதான். ஆண்கள்- ஆண்களுக்கான பிரிவில் பங்கேற்பர், பெண்கள்- பெண்களுக்கன பிரிவில் பங்கேற்பார்கள். ஆனால் ஒரு சில விளையாட்டுகளில் மட்டுமே


விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதும் வெற்றி பெறுவதும் வழக்கமான ஒன்றுதான். ஆண்கள்- ஆண்களுக்கான பிரிவில் பங்கேற்பர், பெண்கள்- பெண்களுக்கன பிரிவில் பங்கேற்பார்கள். ஆனால் ஒரு சில விளையாட்டுகளில் மட்டுமே ஆண்களும் பெண்களும் சேர்ந்து போட்டியிடுவார்கள். அந்த மாதிரிப் போட்டிகளில் ஆண்களுக்கு சளைத்தவர்கள் இல்லை என்று பல்வேறு தருணங்களில் பெண்கள் நிரூபித்துள்ளார்கள்.
மோட்டார் பைக், கார் பந்தயங்கள் வீரசாகசங்கள் நிறைந்த விளையாட்டு. விபத்துகளும் ஆபத்துகளும் அதிகம் நிறைந்த இந்தப் பந்தயத்தில் வெகு சில ஆண்கள் மட்டுமே பங்கேற்பார்கள். ஆனால் தமிழகத்தைச் சேர்ந்த அலிஷா அப்துல்லா ஆண்களுடன் போட்டியிட்டு பல வெற்றிகளை ருசித்துள்ளார்.
அண்மையில் கோவையில் நடைபெற்ற போலோ ஆர் கோப்பைக்கான பந்தயத்தில் இரண்டாம் இடத்தைப் பிடித்தவர் அலிஷா அப்துல்லா(22). பலரின் கவனத்தை ஈர்த்த அலிஷாவை சந்தித்தோம்:
""சென்னை எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூரியில் பி.ஏ. சோஷியாலஜி படித்துள்ள நான் 15-வது வயதில் இருந்தே மோட்டார் பைக் பந்தயங்களில் பங்கேற்று வருகிறேன். எனது தந்தை அப்துலா மோட்டார் பைக் வீரர்தான். சுமார் 25 ஆண்டுகள் அவர் இந்தத் துறையில் கால் பதித்துள்ளார். மோட்டார் பைக் பந்தயங்களில் பங்கேற்று 7 முறை தேசிய சாம்பியன் பட்டமும் பெற்றுள்ளார்.
சிறுவயதில் இருந்தே தந்தையின் சாகசங்களைப் பார்த்து எனக்கும் மோட்டார் பைக் பந்தயங்களில் பங்கேற்கும் ஆவல் உண்டானது. ஒரு பெண்} அதுவும் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த நான் } ஆண்கள் பங்கேற்கும் வீரசாகச பந்தயங்களில் பங்கேற்கப் போகிறேன் என்றதும் என் வீட்டில் எனக்கு எதிர்ப்பே கிளம்பவில்லை; மாறாக ஆதரவு அலைதான் அடித்தது.
முதன்முதலில் சென்னையில் 600 சி.சி. பிரிவு மோட்டார் பைக் பந்தயத்தில் பங்கேற்றேன். அதில் சாம்பியன் பட்டம் பெற்றேன். மேலும் ஆசிய அளவில் பந்தயங்களில் பங்கேற்ற முதல் பெண்ணும் நான்தான்.
2009-ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற ஒரு பந்தயத்தில் எனக்கு விபத்து ஏற்பட்டு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. அதன் பின்பு ஓராண்டு என்னால் பந்தயங்களில் பங்கேற்க முடியவில்லை. அந்த விபத்தை என்னால் மறக்கவே முடியாது.
மோட்டார் பைக் பந்தயங்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோதே எனது கவனம் கார் பந்தயங்களுக்குத் திரும்பியது. அதற்கும் என் பெற்றோர் தடை விதிக்கவில்லை. 2010-ம் ஆண்டில் மோட்டார் பைக் பந்தயங்களில் இருந்து கார் பந்தயத்துக்குத் தடம் மாறினேன். என்னுடைய திறமையைப் பார்த்து பிரபல கார் நிறுவனமான வோல்க்ஸ்வோகன் எனக்கு ஸ்பான்சர் செய்தது. அதன்படி அந்த நிறுவனத்தின் காரைத்தான் நான் பந்தயங்களில் பயன்படுத்துகிறேன். அதேபோன்று ரேடியன்ட் குழுமம் பந்தயங்களில் பங்கேற்பதற்கான ஸ்பான்சர் செய்கின்றது. அக்பர் இப்ராஹிம் என்பவரிடம் பயிற்சி எடுத்து வருகிறேன்.
2010-ம் ஆண்டு முதல் வோல்க்ஸ்வாகன் நிறுவனத்தின் சார்பில் சென்னை, கோவை, புணே ஆகிய இடங்களில் நடந்த கார் பந்தயங்களில் பங்கேற்றுள்ளேன். அந்த ஆண்டில் ஆண்களுடன் போட்டியில் பங்கேற்று 10-வது இடம் பெற்றேன்.
2011-ம் ஆண்டில் தேசிய அளவில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று 6-வது இடத்தைப் பிடித்தேன்.
இந்த ஆண்டில் நான் பங்கேற்கும் அனைத்து போட்டிகளிலும் முதலிடம் பெற வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்துள்ளேன். அதற்காக மிகத் தீவிரமாக பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறேன். என்னைப் பொருத்தவரை பந்தயங்களில் "வேகம்தான் விவேகம்'.
வெளிநாடுகளில் நடைபெறும் போட்டிகளிலும் பங்கேற்று இந்திய நாட்டின் பெருமையை உயர்த்த வேண்டும் என்பதே என் முக்கியக் குறிக்கோள்'' என்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...