புறா முட்டை சங்கு
கடலடி மட்டத்தில் மணற்பாங்கான பகுதிகளில் குறிப்பிட்ட பகுதிகளில் கூட்டம்,கூட்டமாக சங்குகள் வாழ்கின்றன. இவற்றை சங்குப் படுகைகள் என்றும் அழைக்கிறார்கள். சங்கில் பல வகைகள் இருந்தாலும் புறா முட்டைச் சங்கின்


கடலடி மட்டத்தில் மணற்பாங்கான பகுதிகளில் குறிப்பிட்ட பகுதிகளில் கூட்டம்,கூட்டமாக சங்குகள் வாழ்கின்றன. இவற்றை சங்குப் படுகைகள் என்றும் அழைக்கிறார்கள். சங்கில் பல வகைகள் இருந்தாலும் புறா முட்டைச் சங்கின் சிறப்புகள் குறித்து ராமநாதபுரத்தில் செயல்படும் மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக அறக்கட்டளையில் ஐக்கிய நாடுகள் சபையின் திட்ட ஒருங்கிணைப்பு அலுவலரான டாக்டர்.தீபக் சாமுவேல் தெரிவித்ததாவது..
""சங்குகளில் ஆணும்,பெண்ணும் தனித்தனியானதாக இருந்தாலும் வெளித்தோற்றத்தில் ஆணா அல்லது பெண்ணா என்று எளிதில் அடையாளம் காண இயலாது.பொதுவாக பெண் சங்குகள் ஆண் சங்குகளை விட பெரியவையாகத்தான் இருக்கும்.பெண் சங்கு இனச்சேர்க்கைக்குப் பின்னர் வெளியிடும் முட்டைக்கூடு சங்குப்பூ எனப்படுகிறது.இது ஓரளவு கேள்விக்குறி போன்ற அமைப்பில் காணப்படுகின்றன.
புறா முட்டைச் சங்குகளும் மெல்லுடலிகள் வகையை சேர்ந்தவையாகும்.இவை புறா முட்டைகளின் அளவாகவும்,மிக அழகாகவும் இருப்பதால் இதனைப் புறா முட்டைச் சங்குகள் என அழைக்கிறார்கள்.இதன் உருவம் ஒரு கப் வடிவத்தில் (மது அருந்துவோர் வைத்திருக்கும் மாடலைப் போல)கீழே ஒரு தண்டு மூலமாக கடலின் ஆழத்தில் உள்ள கடினமான பகுதியில் ஒட்டியிருக்கும்.
இந்த நத்தையின் முட்டைக் கூடுகள் அழகிய பூக்கள் போலவே ஒரே இடத்தில் நூற்றுக் கணக்கில் பெரும் பூந்தோட்டமாகவே காணப்படுகின்றன.
பாபிலோனியா ஸ்பைரேட்டா,பாபிலோனியா சிலேனிக்கா என இரு வகைகள் இந்தியக் கடல் பகுதியில் உள்ளன.பாபிலோனியா ஏரியோலேட்டா என்ற மற்றொரு வகையும் இந்தியாவில் இருப்பதாகப் பதிவு செய்யப்பட்டிருந்தாலும் இந்தோ-பசிபிக் பெருங்கடலில் தான் இந்த 3 வது வகை அதிக எண்ணிக்கையில் காணப்படுகின்றன.கடலில் 10 மீட்டர் முதல் 50 மீட்டர் ஆழம் வரை உள்ள கடலடி மட்டத்தில் அழகிய பழுப்பு நிறத்தில் புள்ளிகளுடன் காணப்படும் இப்புறா முட்டைச் சங்குகளின் ஒரே முட்டைக் கூட்டுக்குள் நூற்றுக்கும் மேற்பட்ட முட்டைகள் இருக்கும். இவை பருவம் அடைந்தவுடன் கூடுகளை உடைத்துக் கொண்டு இளம் குஞ்சுகளாக வெளியில் வருகின்றன.
இதனை வெளிஜர் என்கிறார்கள். இக்குஞ்சுகளின் மீது சங்குகள் உருவாகி கடலின் தரைப்பகுதியில் அமர்ந்து உணவு உண்ண ஆரம்பிக்கின்றன.கடலுக்கடியில் கிடக்கும் புழுக்கள்,அழுகிய மாமிசங்கள் ஆகியனவற்றை விரும்பி உண்பதால் கடலின் அடிப்பகுதியை சுத்தமாக வைத்திருக்கவும் இவை காரணமாக இருக்கின்றன.
இதன் அதீத சுவை காரணமாக சீனா,தாய்லாந்து,ஹாங்காங் மற்றும் வியட்நாம் மக்கள் இதனை விரும்பி சாப்பிடுகின்றனர்.இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்குப் பை கே என்ற பெயரில் ஏற்றுமதியாகிறது.தமிழகத்தில் சில கடலோர கிராமங்களில் மட்டும் புரதச்சத்து நிறைந்த உணவுப் பொருளாகவும் இருப்பதால் இதை விரும்பிச்
சாப்பிடுகின்றார்கள்.
இச்சங்குகளின் கால் பகுதியில் உள்ள ஒப்பர்குளம் என அழைக்கப்படும் சதையை மட்டும் பிரித்து எடுத்து அகர்பத்திகள் தயாரிக்க முக்கிய மூலப்பொருளாக இதைச் சேர்க்கின்றனர்.
இதனால் அகர்பத்தி மிக மெதுவாக எரிந்து மணம் வீசுகிறது. இச்சங்கின் கூடுகள் அழகாக இருப்பதால் சாவிக்கொத்துகள்,விளக்கு ஸ்டாண்டுகள் என அழகு சாதனப் பொருட்கள் தயாரித்து மதிப்புக் கூட்டப்பட்ட பொருளாக மாற்றி சங்கு வியாபாரிகள் விற்பனை செய்வதுடன் வெளிநாடுகளுக்கும் அதிக அளவில் ஏற்றுமதி செய்கின்றார்கள்'' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...