எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

பெண்கள் தயாரிக்கின்றனர்! ஆண்கள் விற்கின்றனர்!

உலகில் கடந்த காலத்தில் உருவாக்கப்பட்ட தொழிற் பிரிவுகள் எல்லாம் ஆண்களை மையப்படுத்தித்தான் இருந்தன. இப்போது ஆண்ககளுக்கு நிகராகப் பெண்கள் பல்வேறு துறைகளில் சாதனை படைத்துவருகின்றனர். கடினமான துறைகளையும்கூ

News image
Updated On :28 டிசம்பர் 2023, 4:48 pm

பி.ஜெயச்சந்திரன்

உலகில் கடந்த காலத்தில் உருவாக்கப்பட்ட தொழிற் பிரிவுகள் எல்லாம் ஆண்களை மையப்படுத்தித்தான் இருந்தன. இப்போது ஆண்ககளுக்கு நிகராகப் பெண்கள் பல்வேறு துறைகளில் சாதனை படைத்துவருகின்றனர். கடினமான துறைகளையும்கூட அவர்கள் விட்டுவைக்கவில்லை.

மரச் சாமான்கள் தயாரிக்கும் தச்சுத் தொழிலிலும் பெண்கள் ஈடுபட்டுவருவது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

தச்சுத் தொழிலில் மரம் அறுக்கும் தச்சர், தளப்பாடங்கள் செய்யும் தச்சர், தளப்பாடங்களை அழகுபடுத்தும் தச்சர் எனப் பல பிரிவுகள் உள்ளன. தச்சு வேலை என்பது ஒரு கலை சார்ந்த தொழிலாகவும் பார்க்கப்படுகின்றது. கலைநயம் மிக்க தளப்பாடங்கள் மிகவும் அதிக விலைக்கும் விற்பனையாகின்றன.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த முனியந்தாங்கல், காந்திநகர் உள்ளிட்ட பகுதிகளில் பெண்கள் தச்சுத் தொழிலில் ஈடுபட்டுவருகின்றனர். இப்பகுதிகளில் உள்ள தெருக்களின் வழியாகச் சென்றால், பெண்கள் உளியைக் கையில் எடுத்துக் கொண்டு சுத்தியால் சட்டத்தை அடித்துக் கொண்டு இருக்கும் சத்தம் மட்டுமே கேட்கிறது.

பெண்கள் தயாரிக்கும் நாற்காலி, மேஜை, பெஞ்ச் போன்ற பொருள்களின் விற்பனையை ஆண்கள் மேற்கொள்கின்றனர். இதுகுறித்து தச்சுத் தொழிலாளி சின்னபாப்பாவிடம் கேட்டபோது:

""நாங்கள் பரம்பரை பரம்பரையாக இத்தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். ஆகையால், தச்சுத் தொழிலில் ஈடுபடுவது எங்களுக்கு கடினமாகத் தெரியவில்லை.

மாதம் ஒருநாள் நாங்கள் தயாரிக்கும் பொருள்களை கடலூர், சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு லாரியில் ஏற்றிச் சென்று ஆண்கள் விற்பனை செய்கின்றனர். சிலர் சைக்கிளிலேயே எடுத்துச் சென்று ஆரணியிலும் விற்பனை செய்து வருகின்றனர். பெண்களுக்கு இயற்கையாகவே கலை நுட்பமான வேலைகளில் ஆர்வம் இருக்கும். அதனால் ஆர்வத்துடன் இத் தொழிலில் சாதனை படைக்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது. 

எல்லா கலைக்கும் ஏற்படும் முட்டுக் கட்டைதான் இதிலும் இருக்கிறது. பணம்தான் வேறு என்ன?

மூலப் பொருள்களின் விலை உயர்ந்துள்ளதால், குறைந்த வருவாயே கிடைக்கிறது. அதிக உழைப்பைச் செலுத்தி குறைந்த அளவுக்கே லாபம் ஈட்ட முடிகிறது. வருமானமும் போதவில்லை. அரசு எங்களுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும்'' என்றார்.

பெண் தச்சுத் தொழிலாளி வசந்தி கூறுகையில், ""10ஆம் வகுப்பு முடித்த நான் மேற்கொண்டு படிக்க ஆவலாக இருந்தேன். வசதி இல்லாததால் தச்சுத் தொழிலில் ஈடுபட்டுவருகிறேன். படித்துவிட்டு ஏதாவது தொழில் செய்வதற்குப் பதில் பயிற்சியால் உருவாக்கிக் கொண்ட இதிலேயே பணம் ஈட்ட முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.

அதிக உற்பத்திதான் குடும்பத்தைக் காப்பாற்ற முடியும். ஒவ்வொரு பொருளாகத் தயாரித்து அதை சைக்கிளில் கொண்டு சென்று விற்று காலம் தள்ள வேண்டியிருக்கிறது. வங்கிகள் எங்களுக்குக் கடன் உதவி செய்தால் நன்றாக இருக்கும்'' என்றார்.

இதுகுறித்து பெண்கள் மேம்பாட்டு நிறுவன செயலர் மோசஸ் ,""தச்சுத் தொழிலில் ஈடுபடும் பெண்களுக்கு வங்கிக் கடனுதவி அளிக்கலாம். தனிநபர்களிடம் அதிக வட்டிக்குப் பணம் பெற்று தச்சுத் தொழிலில் முதலீடு செய்வதால், இவர்களின் வருமானம் குறைகிறது. இவர்களை மகளிர் குழுக்களில் உறுப்பினர்களாக்கி, பர்னிச்சர் மார்ட் போன்ற கடைகளை ஏற்படுத்தித் தர அரசு முயற்சிக்க வேண்டும்'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.