வலம்புரிச் சங்கு
மிகவும் புனிதமாக கருதப்படுபவை வலம்புரிச் சங்கு. இதன் சிறப்புகள் குறித்து மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிரின தேசிய காப்பகத்தின் கடல் உயிரியலாளர் ர.செந்தில்குமார் தெரிவித்தது.. ""கடலில் வாழும் உயிரினங்களி


மிகவும் புனிதமாக கருதப்படுபவை வலம்புரிச் சங்கு. இதன் சிறப்புகள் குறித்து மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிரின தேசிய காப்பகத்தின் கடல் உயிரியலாளர் ர.செந்தில்குமார் தெரிவித்தது..
""கடலில் வாழும் உயிரினங்களில் மெல்லுடலிகள் இனங்களை இரு பெரும் பிரிவுகளாக பிரிக்கலாம். அவற்றில் ஒன்று ஒரு ஒட்டு உயிரி. மற்றொன்று இரு ஒட்டு உயிரி. ஒரு ஒட்டு உயிரிகளைச் சங்குகள் என்றும் இரு ஒட்டு உயிரிகளைச் சிப்பிகள் என்றும் சொல்கிறார்கள். சங்கு வகைகளில் டர்பினெல்லோ பைரம் என்ற சிற்றின வகையை சேர்ந்ததே வலம்புரிச் சங்கு. இடம்புரி, வலம்புரி என்பனவற்றில் இந்தியாவில் கிடைக்கும் எல்லா வகையுமே பெரும்பாலும் இடம்புரியாகத்தான் இருக்கின்றன. இவற்றில் ஏதேனும் லட்சத்தில் ஒன்று பிறக்கும் போதே உறுப்பு மாறி (மியூட்டேஷன்) பிறந்து விடும். அதாவது கடிகார சுற்றுக்கு எதிர் திசையில் உடற்சுற்று அமைப்புடன் உருவாகும் டர்பினெல்லோ பைரம் சிற்றினத்தை சேர்ந்த சங்குகள் வலம்புரி சங்குகள் எனப்படுகின்றன.
கடலின் ஆழத்தில் மணற்பாங்கான இடத்தில் வாழ்பவை. ஒரே சமயத்தில் லட்சம் முட்டைகள் இட்டாலும் அவற்றில் சில மட்டும் குஞ்சுகளாக பொரிந்து சங்குகளாக வளர்ச்சி அடைகின்றன. கடல்நீரில் உள்ள மனித கண்களுக்குக்கூட புலப்படாத நுண்ணிய தாவர மிதவைகள், விலங்கு மிதவை உயிரிகள்தான் இவற்றின் உணவு. கடலின் அடிப்பரப்பு மிகவும் பாதுகாப்பாக இருந்த காலத்தில் பல பேர் இதை நம்பி கடலுக்குள் மூழ்கி சங்கு குளித்து அதை நம்பியே வாழ்க்கையும் நடத்தி வந்திருக்கின்றனர். அவர்களை சங்கு குளிப்பவர்கள் என்றார்கள்.
கடலில் தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தும்போது கடலின் அடிப்பரப்பில் உள்ள இதன் முட்டைகள், குஞ்சுகள் போன்றவை அழித்து விடுகின்றன. பெரும்பாலான மீன்களும் சங்குக்குஞ்சுகளின் இறைச்சி சுவையாக இருப்பதால் அவற்றைத் தின்று விடுகின்றன. இக்காரணங்களால் இவற்றின் வாழிடங்கள் அழிக்கப்பட்டு இன்று இந்த இனமே முற்றிலும் இல்லை என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது.
வலம்புரிச் சங்குகள் குறித்த விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதைப் பயன்படுத்தி இயற்கையிலேயே அனைத்துமே வலம்புரிகளாக பிறக்கும் மற்ற சிற்றினத்தை சேர்ந்த சாதாரண சங்கு வகைகளை (ஆப்ரிக்காவில் கிடைப்பவை) வலம்புரிச் சங்கு என்று விற்று விடுகின்றனர்.
இவ்வகைச் சங்குகள் புனிதம் இல்லாதவை. உண்மையான வலம்புரிச் சங்குகளைக் காதில் வைத்துக் கேட்டால் கடலின் ஒலி போன்ற ஓசை வரும். மகாலெட்சுமியின் பேரருளைப் பெற்றிருப்பதாக நம்புவதால் இவற்றை பலரும் வீடுகளில் வாஸ்து பார்த்து வைக்கிறார்கள். வலம்புரிச் சங்குகள் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.1.50லட்சம் வரைக்கும் விற்பனையாகின்றன'' என்கிறார்.
சி.வ.சு.ஜெகஜோதி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...