வள்ளல் ஹாத்தீம்!
ஹாத்தீம் அரபு நாட்டின் ஒரு பகுதிக்குச் சர்தாராக இருந்தான். இரக்கமும், தாராள குணமும் கொண்டவன். குடிமக்கள் அவன் மீது அன்பு கொண்டிருந்தனர்.


ஹாத்தீம் அரபு நாட்டின் ஒரு பகுதிக்குச் சர்தாராக இருந்தான். இரக்கமும், தாராள குணமும் கொண்டவன். குடிமக்கள் அவன் மீது அன்பு கொண்டிருந்தனர்.
அருகில் இருந்த மற்றொரு பகுதிக்கு "நவுபலன்' என்பவன் சர்தாராக இருந்தான். அவன் ஹாத்தீமின் புகழைக் கேட்டுப் பொறாமை கொண்டான்.
ஒரு பெரும் படையுடன் ஹாத்தீமின் நாட்டை வளைத்துக் கொண்டான்.
ஹாத்தீம் யோசித்தான்..... ""போர் பல உயிர்களைப் பலி வாங்குகிறது!.... குடிகள் காரணமின்றி ரத்தம் சிந்த வேண்டியிருக்கிறது. இவையெல்லாம் நாம் ராஜ்ஜியத்தின் மீது வைத்திருக்கும் ஆசையால்தானே?.... அரசை யார் ஆண்டால் என்ன?.... குடிகள் சுகமாக வாழ்ந்தால் போதும்!.... நான் கண் எதிரே இருந்தால் குடிகள் போரிடுவார்கள்... அது கூடாது! '' என்று நினைத்தான் ஹாத்தீம். எனவே, ஹாத்தீம் காட்டிற்குப் புறப்பட்டுப் போய்விட்டான். தலைமறைவாக இருந்து கனி, கிழங்குகளை உண்டு ஒரு குகையில் வசித்து வந்தான்.
இதற்கிடையே நவுபலன், ஹாத்தீமின் ராஜ்யத்தைப் பிடித்துக் கொண்டான். அப்போதும் அவனுக்கு ஹாத்தீமிடம் பயம் இருந்தது. அவனை எப்படியாவது கொன்றுவிட வேண்டும் என்று திட்டமிட்டான்.
ஹாத்தீமைப் பிடித்துக் கொடுப்பவர்களுக்கு ஏராளமாகப் பரிசுப் பொருள் தருவதாக நாட்டில் பறை அறிவித்தான்.
காட்டில் ஒருநாள் விறகு வெட்டி ஒருவனும், அவனுடைய மனைவியும் தற்செயலாக ஹாத்தீம் மறைந்திருந்த குகையருகே வந்தார்கள். அங்கே ஹாத்தீம் இருப்பது அவர்களுக்குத் தெரியாது.
களைப்பினால் அவர்கள் அங்கேயே உட்கார்ந்து பேசத் தொடங்கினார்கள். விறகு வெட்டியின் மனைவி, நம் வாழ்க்கையே வறுமைக்கு இருப்பிடமாகிவிட்டது. சரியான உணவு இல்லை.... உடை இல்லை.... விறகு விற்று வரும் பணம் நம் குழந்தைகளுக்கே போதாது.... அந்த ஹாத்தீமாவது நம் கையில் அகப்பட்டால் சர்தாரிடம் பிடித்துக் கொடுத்து, பெரிய பரிசு வாங்கலாம்!.... '' என்றாள்.
விறகுவெட்டி கோபத்துடன், "" வாயை மூடு!.... ஹாத்தீம் நமக்கு என்ன தீமை செய்தான்?.... தவிர அவன் யாரிடமும் அகப்பட மாட்டான்! '' என்று அவளை அடக்கினான்.
இவர்களது உரையாடலைக் கேட்ட ஹாத்தீமின் மனம் இரங்கியது. அவன் குகையிலிருந்து வெளியே வந்து அவர்களிடம் சென்றான்.
""ஐயா, நான்தான் ஹாத்தீம்!.... என்னை சர்தாரிடம் கொண்டுபோய் ஒப்படைத்து, பரிசை வாங்கிக் கொள்ளுங்கள்!.... உங்கள் கஷ்டம் தீரும்!'' என்றான்.
விறகுவெட்டிக்கு ஒரே ஆச்சரியம்! அவன் அந்தச் செயலுக்கு ஒப்பவில்லை. அதே நேரத்தில் வழியோடு போய்க்கொண்டிருந்த சிலர் "திபு திபு' வென்று வந்து ஹாத்தீமைப் பிடித்துக் கொண்டார்கள்.
எல்லோரும் சேர்ந்து புதிய சர்தார் நவுபலனிடம் சென்றார்கள். நவுபலன் மகிழ்ச்சியுடன், ""ஹாத்தீமைப் பிடித்தது யார்?... அவர்களுக்குப் பரிசு தருகிறேன்!'' என்றான்.
எல்லோரும், ""நான்!... நான்!'' என்று முன்வந்தார்கள். ஹாத்தீம், என்னை இவர்கள் யாரும் பிடிக்கவில்லை.... இந்த விறகுவெட்டிதான் என்னைப் பிடித்தான்! இவனுக்கு வேண்டிய பொருளைப் பரிசாகக் கொடுங்கள்!'' என்றான்.
நவுபலன் விறகுவெட்டியைப் பார்த்து, "" அப்படியானால் இந்தா வெகுமதியைப் பெற்றுக்கொள்!'' என்றான்.
அதைக் கேட்ட விறகுவெட்டி துக்க்தால் "ஓ' வென்று அழுதான். கண்ணீரைத் துடைத்துக்கொண்டு சொன்னான்.
""சர்தார் அவர்களே!.... சத்தியமாகச் சொன்னால் யாருமே இவரைப் பிடிக்கவில்லை.... எங்களுடைய வறுமை நிலைக்கு இரங்கி இவர் தாமாகவே எங்கள் எதிரில் வந்தார்!...'' என்று நடந்ததைக் கூறினான்.
ஹாத்தீமின் கருணை உள்ளம் சர்தாரை நெகிழ வைத்துவிட்டது. தன் தவறுக்கு மன்னிப்புக் கோரினான். அவனுடைய நாட்டை அவனுக்கே திருப்பிக் கொடுத்துவிட்டு அவரை உற்ற நண்பனாக்கிக் கொண்டான்.
(..."இவர்களைத் தெரியும்ô?'.... என்ற நூலிலிருந்து....)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...