/

நம்மைச் சுற்றி நடப்பது என்ன? - 15: பேரூராட்சி என்பது எப்படி இருக்கும்?

பேரூராட்சி என்பது பெரிய கிராமம்போல இருக்கும். அதே நேரம் சிறு நகரத்திற்குரிய அடையாளங்களும் அதற்கு இருக்கும். ஒரு வளர்ந்த கிராமத்தில் அல்லது நகரத்தில் இருப்பதுபோலவே அரசு மருத்துவமனை, சிறு பூங்காக்கள், வ

News image
Updated On :28 டிசம்பர் 2023, 5:44 pm

கூத்தலிங்கம்

பேரூராட்சி என்பது பெரிய கிராமம்போல இருக்கும். அதே நேரம் சிறு நகரத்திற்குரிய அடையாளங்களும் அதற்கு இருக்கும். ஒரு வளர்ந்த கிராமத்தில் அல்லது நகரத்தில் இருப்பதுபோலவே அரசு மருத்துவமனை, சிறு பூங்காக்கள், வங்கிகள், அரசு அலுவலகங்கள்,  திரையரங்குகள், காவல் நிலையங்கள், பல விதமான கடைகள் என எல்லாமும் பேரூராட்சியில் இருக்கும்.

   உதாரணமாக மதுரைக்குப் பக்கத்தில் உள்ள திருபுவனம் என்னும் ஊர், பேரூராட்சியாகும்.

அதுபோல தஞ்சை மாவட்டத்தில் இருக்கும் மதுக்கூர், பேராவூரணி ஆகிய ஊர்கள் பேராவூரணி என்னும் பிரிவின் கீழ் வரும்.   பேரூராட்சியின் மக்கள் தொகையானது ஐயாயிரத்திற்கும் அதிகமாக இருக்கும். அங்கே உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு குறைந்தது ஐந்து வார்டுகள் இருக்க வேண்டியது அவசியம்.

   தமிழ்நாட்டில் இப்போது மொத்தம் 561 பேரூராட்சிகள் இயங்கி வருகின்றன. இந்தப் பேரூராட்சிகளை ஆண்டு வருமானத்தின் அடிப்படையில் நான்கு வகையாகப் பிரிக்கிறார்கள்.

1. ஆண்டுக்கு 20,00,000 (இருபது லட்சம்) ரூபாய்க்கும் அதிகமான வருமானம் வந்தால் அது "சிறப்பு நிலை பேரூராட்சி'. இப்படிப்பட்ட சிறப்பு நிலைப் பேரூராட்சிகள் தமிழ் நாட்டில் 13 மட்டும்தான் உள்ளன.

   2. ஆண்டு வருமானம் 16, 00, 000 (பதினாறு லட்சம்) ரூபாய்க்கும் அதிகமாக வந்தால் அது "தேர்வு நிலைப் பேரூராட்சி'. இதுபோன்ற தேர்வு நிலைப் பேரூராட்சிகள் தமிழ் நாட்டில் மொத்தம் 245 உள்ளன.

   3. ஆண்டு வருமானம் 8, 00, 000 (எட்டு லட்சம்) ரூபாய்க்கும் அதிகமாக வந்தால் அது "முதல் நிலைப் பேரூராட்சி'. இது போன்ற முதல் நிலைப் பேரூராட்சிகள் தமிழ்நாட்டில் மொத்தம் 221 உள்ளன.

   4. ஆண்டு வருமானம் 4, 00, 000 (நான்கு லட்சம்) ரூபாய்க்கும் அதிகமாக வந்தால் அது இரண்டாம் நிலைப் பேரூராட்சி. இதுபோன்ற இரண்டாம் நிலைப் பேரூராட்சிகள் தமிழ்நாட்டில் மொத்தம் 82 உள்ளன.

   ஒவ்வொரு பேரூராட்சிக்கும் ஒரு தலைவர் இருப்பார்.

   பேரூராட்சித் தலைவரைத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுப்பார்கள்.   பேரூராட்சியானது நிர்வாக வசதிக்காக பல வார்டுகளாகப் பிரிக்கப்பட்டு, அவற்றிற்கான உறுப்பினர்களும் தேர்தல் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

   உறுப்பினர் மற்றும் தலைவர் பதவிக்குப் போட்டியிடுபவர்களின் பெயர்கள், அந்தக் குறிப்பிட்ட பேரூராட்சியில் உள்ள, ஏதாவது ஒரு வார்டின் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருக்க வேண்டும்.

   பேரூராட்சித் தலைவர் ஏதாவது ஒரு அரசியல் கட்சியின் சார்பிலும் போட்டியிடுவார். அவருக்கு அந்தக் குறிப்பிட்ட கட்சியின் அரசியல் சின்னம் ஒதுக்கப்படும். தலைவர் பதவிக்கு சுயேச்சையாகவும் போட்டியிட முடியும்.

   ஆதி திராவிடர், பழங்குடியினர், மற்றும் பெண்களுக்காக சில பேரூராட்சிகள் இட ஒதுக்கீடு அடிப்படையில் ஒதுக்கப்படும்.

   பேரூராட்சித் தலைவர், அந்தப் பேரூராட்சி அமைப்பின் உறுப்பினர்களுக்கான தலைவராக இருப்பார். மேலும் அவர், பேரூராட்சி அமைப்பில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கும் மேல் அதிகாரிபோலச் செயல்பட்டு கடமையாற்றுவார்.

   பேரூராட்சியில் நடைபெறும் திட்டங்கள் அனைத்தையும் செயல்படுத்துபவர் பேரூராட்சித் தலைவர்தான். அதுபோல, மக்களுக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தருவதும் பேரூராட்சித் தலைவரின் தலையாய கடமை.

   அதற்கான பொருளாதாரம், அரசாங்கத்திடமிருந்து பேரூராட்சித் தலைவரால் பெறப்படும்.

   மேலும் பேரூராட்சித் தலைவர், சாலை வசதி ஏற்படுத்துதல், தெருவிளக்குகளை அமைத்துப் பராமரித்தல், சுகாதாரப் பணிகள், சிறு பூங்காக்களை அமைத்துப் பாதுகாத்தல், சந்தைகளை ஏற்படுத்துதல் ஆகிய பணிகளைச் செய்து அந்தப் பேரூராட்சியின் மக்களுக்காகக் கடமையாற்றுவார்.

தொடரும்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.