ஊராட்சி ஒன்றியத்தின் வார்டுகளிலிருந்து ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அதாவது இரண்டு பெரிய கிராமங்கள் சேர்ந்ததுதான் ஒரு ஊராட்சி ஒன்றிய "வார்டு' ஆகும். சிறிய கிராமங்களாக இருந்தால் நான்கு அல்லது ஐந்து குக்கிராமங்கள் சேர்ந்தது ஒரு வார்டு ஆகும். இப்படி வைத்துக்கொள்ளலாம், ஏறத்தாழ மூவாயிரம் வாக்காளர்கள் கொண்ட பகுதி ஒரு வார்டு. இங்கிருந்து, ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இந்த உறுப்பினர் தன் வார்டு மக்களின் தேவைகளை அறிந்து, அந்தத் தேவைகளை நிறைவேற்றுபவராக இருப்பார். தன் வார்டு வளர்ச்சிக்கான திட்டங்களை இவர் ஊராட்சி ஒன்றியத் தலைவரிடம் கேட்டுப் பெற்று, அந்தத் திட்டங்களைத் தன் வார்டு மக்களுக்காகச் செயல்படுத்துவார்.