பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்பு
/

18 ஆண்டுகள் உழைப்புக்கான அங்கீகாரம்!

18 ஆண்டுகள் நாட்டுக்காக கூடைப்பந்து விளையாட்டில் மேற்கொண்ட கடின உழைப்பு, திறமைக்கான அங்கீகாரமாக தமிழகத்தைச் சேர்ந்தவரும், இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான அனிதா பால்துரைக்கு நாட்டின் உயரிய

News image
Updated On :27 ஜனவரி 2024, 7:26 pm

ப. சுஜித்குமார்


18 ஆண்டுகள் நாட்டுக்காக கூடைப்பந்து விளையாட்டில் மேற்கொண்ட கடின உழைப்பு, திறமைக்கான அங்கீகாரமாக தமிழகத்தைச் சேர்ந்தவரும், இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான அனிதா பால்துரைக்கு நாட்டின் உயரிய நான்காவது விருதான பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது.

சென்னையில் கடந்த 1985-இல் பிறந்த அனிதா,  வாலிபால், தடகளத்தில் ஆர்வம் கொண்டிருந்தாலும், கூடைப்பந்து விளையாட்டை 11 வயது முதல் ஆடத் தொடங்கினார்.

சென்னை பல்கலைக்கழகத்தில் பி.காம் படித்த அனிதா, 18 ஆண்டுகள் (2000-2017) வரை இந்திய அணியில் இடம் பெற்று ஆடினார்.  தனது 19-ஆவது வயதிலேயே தேசிய சீனியர் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டவர். தொடர்ந்து 8 ஆண்டுகள் கேப்டனாக திறம்பட செயல்பட்ட அனிதா, ஆசிய, காமன்வெல்த் போட்டிகள், ஆசிய கூடைப்பந்து சாம்பியன் போட்டி உள்ளிட்ட பல்வேறு சர்வதேச போட்டிகளில் முத்திரை பதித்தார்.

30 தங்கப் பதக்கங்களை குவித்த வீராங்கனை:

தொடர்ந்து 9 முறை ஆசிய கூடைப்பந்து கூட்டமைப்பு (ஏபிசி) சாம்பியன்ஷிப் போட்டிகளில் ஆடிய ஓரே இந்திய வீராங்கனை அனிதா ஆவார். மேலும் தேசிய அளவிலான போட்டிகளில் 30 தங்கம் உள்பட பல்வேறு பதக்கங்களை தன்வசம் கொண்டுள்ளார். கடந்த 2018-இல் சென்னையில் நடைபெற்ற 68-ஆவது தேசிய கூடைப்பந்து சாம்பியன் போட்டியில் ரயில்வே அணி சார்பில் தங்கம் வென்ற அனிதாவுக்கு முதல்வரின் வாழ்நாள் சாதனையாளருக்கான சிறப்பு விருதும் வழங்கப்பட்டது. 

பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு:

தனது கூடைப்பந்து வாழ்க்கையில் பல்வேறு விருதுகளை பெற்றுள்ள அனிதா பால்துரைக்கு நாட்டின் நான்காவது உயரிய விருதான பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது. அவரின் 18 ஆண்டுக்கால கடின உழைப்பு, திறமையான ஆட்டத்துக்கு கிடைத்த கெளரவம், அங்கீகாரமாக இந்த விருது அமைந்துள்ளது. தற்போது தெற்கு ரயில்வேயில் மூத்த அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார்.

இதுதொடர்பாக அனிதா கூறியதாவது:

""நான் முதலில் தேசிய அணியில் இடம் பெற்ற போது இந்திய அணி 9-ஆவது இடத்தை வகித்தது. தற்போது ஆசிய அளவில் 5-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. 2015-இல் குழந்தைப்பேறுக்கு பின் மீண்டும் தேசிய அணியில் இடம் பெற்றேன். குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் எனது முன்னோடியாகக் கொண்டுள்ளேன்.

முதன்முதலில் சென்னையில் ரைசிங் ஸ்டார் கிளப் அணிக்காக ஆடினேன்.

விளையாட்டுக்காக குடும்பத்துடன் அதிக நேரம் செலவிடும் வாய்ப்பை இழந்துள்ளேன். கூடைப்பந்தில் பெண்களுக்கு அதிக வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும். ரயில்வேயில் தான் தொடர்ந்து வேலைவாய்ப்பு தரப்படுகிறது.

விளையாட்டு என்பது உடல், மனதை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுவதாகும். எதிர்காலத்தில் அடிமட்ட அளவில் இருந்து குழந்தைகளுக்கு பயிற்சி தர உள்ளேன். கிரிக்கெட், கால்பந்து, கபடி போன்று தொழில்முறை லீக் போட்டிகள் கூடைப்பந்திலும் இடம் பெற வேண்டும்'' என்றார் அனிதா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.