கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

ஊக்கமளித்தோருக்கு வெற்றி சமர்ப்பணம்! - மேரி கோம்

ரியோ ஒலிம்பிக்ஸ் பெண்களுக்கான குத்துச் சண்டை போட்டிக்கான தேர்வில் தோல்வி அடைந்ததும் மேரி கோமின் குத்துச் சண்டை வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டதாக பலரும் ஆருடம் சொன்னார்கள்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 6:11 pm

பனுஜா

ரியோ ஒலிம்பிக்ஸ் பெண்களுக்கான குத்துச் சண்டை போட்டிக்கான தேர்வில் தோல்வி அடைந்ததும் மேரி கோமின் குத்துச் சண்டை வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டதாக பலரும் ஆருடம் சொன்னார்கள். ஆனால் அந்த ஆரூடத்தைப் பொய்யாக்கி ஆசிய மகளிர் குத்துச் சண்டைப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார் 35 வயதாகும் மேரி கோம். 
வியட்நாமில் நடைபெற்ற ஆசிய மகளிர் குத்துச் சண்டை போட்டியில் தென் கொரியாவைச் சேர்ந்த கிம் ஹயாங் மியுடன் மோதினார் மேரி. எதிராளியைத் திணறடித்து ஒரு புள்ளி கூட எடுக்க விடாமல் செய்து, 5 - 0 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றார். 
""எனது 17 ஆண்டு கால அனுபவம்தான் இந்த வெற்றிக்குக் காரணம். ஆசிய அளவில், குத்துச் சண்டை மிகவும் கடினமாக மாறி வருகிறது. 48 கிலோ எடைப் பிரிவில், கடந்த ஏழு ஆண்டுகளாக எதிராளிகள் சம எடையுடன் சம உயரத்தில் இருந்தனர். இப்போது போட்டியாளர்கள் என்னைவிட உயரமாக இருக்கின்றனர். குத்துச் சண்டையில் உயரமாக இருப்பவர் எதிராளியை எளிதாகக் கையாளலாம் என்றாலும் எனது அனுபவம்தான் எதிராளி என்னைவிட உயரமாக இருந்தாலும், எளிதாக வீழ்த்த உதவியது. 
இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குத்தான் இந்தியா சார்பாக என்னால் களம் இறங்க இயலும் என்று நினைக்கிறேன். எனது அடுத்த கவனம் 2018-இல் நடக்கவிருக்கும் காமன்வெல்த், ஆசிய விளையாட்டுப் போட்டிகள்தான்'' என்று கூறும் மேரியின் ஆசிய மகளிர் குத்துச்சண்டை போட்டியில் வென்ற தங்கப் பதக்கங்களின் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது. 48 கிலோ பிரிவுக்கு மாறிய பிறகு, மேரி கோம் வென்ற முதல் தங்கப் பதக்கம் இதுதான். இவர், ஐந்து முறை உலகச் சாம்பியன் பட்டத்தையும், ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கத்தையும் இந்தியாவுக்காக வென்றவர். 
மேரியின் இப்போதைய கவலை, அவருடைய மூன்று ஆண் குழந்தைகள் பற்றியதுதான். 
""தில்லியில் ஒரே புகை மூட்டம். வீட்டை விட்டு வெளியே போக வேண்டாம் என்றும் அறிவுறுத்தியிருக்கிறார்கள். நானோ சுவிட்சர்லாந்து வரை உடனே போக வேண்டும். அங்கே ஒலிம்பிக்ஸ் குத்துச் சண்டை தொடர்பாக ஒரு மீட்டிங் உள்ளது. அதில் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும். பாவம் என் குழந்தைகள். என்னைப் பார்த்து சில வாரங்கள் ஆகிவிட்டன. வியட்நாமிலிருந்து தில்லிக்கு வந்து விட்டாலும், வீட்டுக்குப் போய் குழந்தைகளைப் பார்க்கக் நேரம் இல்லை. போனில் மட்டுமே பேச முடிந்தது'' மேரியின் தாய் உள்ளம் பரிதவிக்கிறது.
மேரி கோம் மாநிலங்களவை எம்.பி.யாக இருக்கிறார். தாய், குடும்பத் தலைவி. குத்துச் சண்டை வீராங்கனை, எம்.பி என்று பன்முகம் கொண்டவராக இயங்கி வரும் இவர், என்ன வேலை இருந்தாலும் குத்துச் சண்டை பயிற்சியை மட்டும் மறப்பதில்லை. நாடாளுமன்றத்தில் மேலவை கூட்டங்களில் கூடுமானவரை கலந்து கொள்கிறார். நாடாளுமன்றம் பக்கம் எட்டிக் கூட பார்ப்பதில்லை என்று நடிகை ரேகா, கிரிக்கெட் வீரர் சச்சனின் குறித்து விமர்சனங்கள் எழுந்தபோதும், மேரி கோம் குறித்து புகார் எதுவும் ஏழவில்லை.
""நான் எம்.பி. ஆன பிறகு கிடைக்கும் முதல் வெற்றி இது. சொந்த மாநிலத்தில் ஒரு குத்துச் சண்டை பள்ளி ஒன்றை கணவருடன் சேர்ந்து நடத்தி வருகிறேன். முன்பெல்லாம் நான் 48 கிலோ எடை இருந்தாலும், 51 கிலோ பிரிவு போட்டிகளில்தான் கலந்து கொண்டேன். இப்போது எனது வயதுக்கும் உயரத்துக்கும் பொருத்தமான எடையான 48 கிலோ பிரிவை நிரந்தரமாக்கிக் கொண்டிருக்கிறேன். ரியோ ஒலிம்பிக்ஸில் கலந்து கொள்ள தேர்ச்சி பெறாத நிலையில் என் சகாப்தம் முடிந்தது என்று பலரும் சொன்னார்கள். அதையும் மீறி சாதித்ததற்கு என்னை விரும்புகிறவர்கள் என்மேல் வைத்த நம்பிக்கைதான் காரணம். என் மீது வைத்த நம்பிக்கைக் காரணமாக இந்திய குத்துச் சண்டை சம்மேளனம் எனது பயிற்சிக்காக அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தது. அதனால் இந்த வெற்றியை என்னை ஊக்குவித்தவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்'' என்கிறார் மேரி கோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.