கிருஷ்ணன் பஞ்சு பற்றிய நினைவுகளைப் பகிர்கிறார் திரையுலகப் பிரமுகர் காரைக்குடி நாராயணன்...
தங்களது இறுதிக் காலம் வரை இணை பிரியாமல் இருந்தனர் இரட்டை இயக்குநர்களான கிருஷ்ணன் பஞ்சு. கிருஷ்ணன் சென்னையில் 1909-ஆம் ஆண்டு, ஜூலை 18-ஆம் தேதியும், பஞ்சு 1915-ஆம் ஆண்டு, ஜனவரி 24 -ஆம் தேதி கும்பகோணத்துக்கு அருகேயுள்ள உமையாள்புரத்திலும் பிறந்தனர்.
ராஜா சாண்டோவிடமும் எல்லீஸ் ஆர் டங்கனிடமும் உதவியாளர்களாகப் பணிபுரிந்து ஏவி.எம்.மின் வரலாற்றுப் படங்களை இயக்கினார்கள். பின்னாளில் ராஜா சாண்டோ பெயரில் விருதுகளை வழங்கினார் எம்.ஜி.ஆர்.
இவர்கள் 1944-இல் 'பூம்பாவை' படத்தில் அறிமுகமாகி, கலைவாணரின் படங்களை இயக்கினர். 1949-இல் அண்ணாவையும், 1952-இல் பராசக்தி மூலம் மு. கருணாநிதியையும், நடிகர் சிவாஜி கணேசனையும் அடையாளம் காட்டினார்கள்.
இவர்கள் இயக்கிய படத்தில் சிறு வேடத்தில் நடித்த எம்.ஜி. ஆர்., 'பெற்றால்தான் பிள்ளையா' படத்தில் வித்தியாசமான பாத்திரத்தில் நடித்து, பின்னர் பல படங்களில் இவர்கள் இயக்கத்தில் நடித்தார். எம். ஆர். ராதாவுக்கு 'ரத்தக் கண்ணீர்' ஒரு மைல் கல்.
'பராசக்தி' படத்தில் நீதிமன்றக் காட்சிகள் மெருகேற கடுமையாக உழைத்தனர். 'பெற்றால்தான் பிள்ளையா?' படப்பிடிப்பின் போது எம். ஜி. ஆர். வந்தததும் எழுந்து நின்ற கிருஷ்ணனிடம், 'நான் நடித்த முதல் படம் 'சதிலீலாவதி'யில் நீங்கள் உதவி இயக்குநர்' என்று கூறி உட்கார வைத்தார்.
ஏ. பீம்சிங் என்னை அழைத்து 'உன்னிடம் மயங்குகிறேன்' நாடகத்தைப் பார்த்து படமாக்கிய சில நாள்களில் உடல் நலம் குன்றினார்.
படப்பிடிப்பு நடத்த வேண்டிய கட்டாயத்தில் என்னை பஞ்சுவிடம் அனுப்பி, படப்பிடிப்பை நடத்தச் சொன்னார். நான் பாண்டி பஜாரில் இருந்த பஞ்சுவிடம் சென்று விவரத்தைச் சொன்னேன். நான் எழுதிய படங்களைப் பற்றி விசாரித்து, அதில் சில படங்களைச் சொல்லி பாராட்டினார். நான் மகிழ்ச்சி அடைந்தேன். அவருக்கு என் மரியாதை கலந்த நன்றியைச் சொன்னேன்.
சில விநாடிகள் யோசித்து விட்டு, ' பீம்முக்கு உடல் நிலை சரியில்லைன்னா, ஷூட்டிங்கை கேன்சல் பண்ணச் சொல்றாரு. இதென்ன எம்.ஜி.ஆர். படமா, சிவாஜி படமா... புதுசா வந்திருக்கிறவங்க படம்தானே' என்று கோபப்பட்டார். நான் செய்வதறியாது நின்றேன். பீம்சிங்கிடம் போனிலே பேசினேன். அவர் பத்து நிமிடங்களில் பஞ்சுவை சமாதானப்படுத்தி சம்மதிக்க வைத்தார்.
படப்பிடிப்பு விஜயா வாஹிணியில் நடந்த போது எதிர்பாராமல் பீம்சிங் வாக்கிங் ஸ்டிக்குடன் செட்டுக்குள் வந்து ஓர் ஓரமாக உட்கார்ந்து படப்பிடிப்பை கவனிப்பார். திடீரென என்னைக் கூப்பிட்டு, இந்த ப்ரேமில் விஜயகுமாரும் மஞ்சுளாவும்தான் வர வேண்டும். ரஜினி வரக் கூடாது என்று பஞ்சுவிடம் சொல்லச் சொல்லுவார்.
நான் நடுங்கியபடி பஞ்சுவிடம் சென்று சொல்லுவேன். 'இதுக்குதான் நான் வேண்டாம்னு சொன்னேன். நீங்க முன்னால எடுத்தது எவனுக்குத் தெரியும்' என்று என்னிடம் கோபித்து விட்டு, 'பீம் இங்கே எதுக்கு வந்தார்? உடல்நிலை சரியில்லைன்னா ரெஸ்ட் எடுத்துக்கச் சொல்லு. ஏதாவது தப்பாயிடுச்சுன்னா நானும் எடிட்டர் பீமும் அங்கே சரி பண்ணிக்கலாம்' என்பார். நான் இரண்டு ஜாம்பவான்களிடமும் மாட்டிக் கொண்டு விழித்தேன்.
ஒரு நாள் வள்ளுவர் கோட்டம் அருகே கிருஷ்ணன் பஸ் ஸ்டாப்பில் பைலுடன் நின்று கொண்டிருந்தார். நான் ஸ்டூடியோவுக்கு காரில் போய்க் கொண்டிருந்தேன். அவரைப் பார்த்து காரை விட்டு இறங்கி 'சார் வாங்க...' என்று கூப்பிட்டேன். 'தினமும் என்னைக் காரில் கூட்டிக்கிட்டுப் போவியா?' என்றார். நான் பதில் சொல்லவில்லை. 'நீ பாட்டுக்கு போ. டாக்ஸி கிடைக்கலன்னா பஸ்ல ஸ்டூடியோவுக்குப் போவேன்' என்றார்.
இன்றைய ஆடம்பர இயக்குநர்களுக்கு மத்தியில் சாதித்த இவரெல்லாம் போதித்ததெல்லாம் புத்தரைப் போன்ற எளிமை.
கிருஷ்ணனின் தங்கை பீம்சிங்கின் மனைவி என்பதாலும், பல படங்களை இயக்கிக் காலமான இயக்குநரும் கிருஷ்ணனின் மகனுமான சுபாஷ் பஞ்சுவிடம் ஒரு நாவலை படமாக்க என்னை எழுதச் சொல்லி அனுப்பினார். அதை அவர் விருப்பப்படி எழுதி, அந்தத் தயாரிப்பாளரிடம் கொடுத்தேன். அந்தத் தயாரிப்பாளர் எனக்கு முன் பணமாக ஆயிரம் ரூபாய் தந்து விட்டு அதில் நூறு ரூபாய் கமிஷன் கேட்டார். நான் விருப்பமில்லாமல் கொடுத்தேன்.
இதை பஞ்சுவிடம் நான் சொன்னதுதான் தெரியும். அடுத்த நிமிடமே அவரிடம் போனில் தொடர்பு கொண்டு, 'உன் பணம் எனக்கு வேண்டாம். திரையுலகில் முதலில் தேவைப்படுபவன் கதாசிரியன். ஆனால், அவன்தான் கேவலமான சம்பளம் வாங்குகிறான்' என்று எனக்காகக் கோபப்பட்டார். அடுத்தப் படம் வரும் என்று சொல்லி, என்னை அனுப்பினார்.
திரையுலகின் இரட்டை இலைகளாக இருந்தவர்களில் கிருஷ்ணன் 1997, ஜூலை 17-ஆம் தேதியும், பஞ்சு 1984, ஏப்ரல் 6-ஆம் தேதியும் உதிர்ந்து போனார்கள்.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சாவித்திரி - நான் சந்தித்த பிரபலங்கள் - 53
எஸ். பாலசுப்பிரமணியம் - நான் சந்தித்த பிரபலங்கள் - 52
பயணம் தொடர்கிறது...

ராணி சந்திரா - நான் சந்தித்த பிரபலங்கள் - 49
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

