/

பெரிய்...ய பூங்கா...

கிரீன்லாந்தில் உள்ள வட கிழக்கு தேசிய பூங்கா 9.72 லட்சம் சதுர கி.மீ. பரப்பளவுடன் உலகின் மிகப் பெரிய பூங்காவாகத் திகழ்கிறது.

News image
Updated On :4 ஜனவரி 2026, 12:29 pm

தினமணி செய்திச் சேவை

ரா. ரா.

கிரீன்லாந்தில் உள்ள வட கிழக்கு தேசிய பூங்கா 9.72 லட்சம் சதுர கி.மீ. பரப்பளவுடன் உலகின் மிகப் பெரிய பூங்காவாகத் திகழ்கிறது. 1974-இல் தொடங்கி, 1988 வரை விஸ்தரிக்கப்பட்ட இந்தப் பூங்காவானது 10-ஆவது பெரிய பாதுகாக்கப்பட்ட பகுதியாகும்.

தேசிய பூங்காவில் உள்ள பனிப்பாறையானது கடற்கரையை ஒட்டியுள்ளது. இதன் பெரிய உள்புறம் பனிக்கட்டியின் ஒரு பகுதி. இதனுள் பனியே இல்லாத பகுதிகளும் உள்ளன. இதனை 'சர்வதேச உயிர் கோள காப்பகம்' எனவும் கூறுகின்றனர். இங்கு கோடை கால ஆராய்ச்சி நிலையமும் உள்ளது.

கஸ்தூரி எருதுகள், துருவக் கரடிகள், வால்ரஸ்கள், ஆர்க்டிக் நரிகள், முயல்கள், ஓநாய்கள், பெனு காது திமிங்கிலங்கள் உள்ளிட்டவைகளும், இனப்பெருக்கம் செய்யும் பறவைகளும் நிறைய உள்ளன.

ஃபிளமிங்கோ....

இளம் சிவப்பு நிறத்தில் உள்ள ஃபிளமிங்கோ பறவையை 'பெரும் பூ நாரை' எனவும் அழைப்பர். 100 முதல் 150 செ.மீ. உயரம் கொண்டவை. சில பெரிய ஃபிளமிங்கோக்கள் 187 செ.மீ. வரையும் இருப்பதுண்டு.

இவற்றின் பெரும்பாலான இறகுகள் இளம்சிவப்பு வெள்ளை நிறத்திலும், அலகு இளம் சிவப்பு நிறத்திலும் வரையறுக்கப்பட்ட கருப்புமுனையுடன் இருக்கும். கால்கள் முற்றிலும் இளம் சிவப்பு நிறத்தில் இருக்கும். வட ஆப்பிரிக்கா உள்பட பல நாடுகளில் காணப்படும்.

இந்தியாவில் குளிர்காலம் தொடங்கியுள்ள நிலையில், ஃபிளமிங்கோவின் தோற்றம் ஈரமான நிலங்களை துடிப்பான ரோஜா நிறங்களால் சூழப்பட்ட இயற்கை பிரமிப்புக் களமாக மாற்றுகிறது. இப் பறவைகளின் வருடாந்தர இடப்பெயர்வு ஊட்டச்சத்து நிறைந்த சதுப்பு நிலங்கள், உப்பு ஏரிகளில் இறங்க வைக்கிறது.

இந்தப் பறவைகள் இருக்கும் இடங்கள்:

புலிகாட் ஏரி: ஆந்திரா - தமிழ்நாடு எல்லையில் அமைந்துள்ள புலிகாட் ஏரியில், ஏராளமான ஃபிளமிங்கோக்கள் உள்ளன. நாட்டின் இரண்டாவது பெரிய உப்பு ஏரி இதுவேயாகும். உயரமான கிரேட்டர் ஃபிளமிங்கோக்கள் கூடுகட்டுகின்றன.

வெண்டோடு, இருக்கம் தீவுகளைச் சுற்றியுள்ள ஆந்திரப் பகுதி மிகவும் அடர்த்தியான கூட்டங்களுக்கு பெயர் பெற்றது. இங்கு வருடாந்தர ஃபிளமிங்கோ திருவிழாகூட நடக்கிறது.

சிலிகா ஏரி: ஆசியாவின் மிகப் பெரிய கடலோர ஏரியான சிலிகாவில் குளிர்காலங்களில் ஆயிரக்கணக்கான ஃபிளமிங்கோக்கள் வருகை தருகின்றன. நலபனா தீவு பறவைகள் சரணாலயத்தில் குவிகின்றன. இந்தப் பறவைகள் உப்பு நீரில் நடந்து செல்கின்றன.

அவற்றின் இருப்பு, நீலநிறக் குளத்தை ரோஜா நிறத்தில் மாற்றுகிறது. தொலைதூர மலைகள், மீன்பிடி கிராமங்களின் பின்னணியில் அமைந்துள்ள இந்தச் சரணாலயம் சுத்தம், அழகு, அமைதி போன்றவற்றுக்குப் பெயர் பெற்றது.

சம்பார் ஏரி: ராஜஸ்தானின் ஜெய்ப்பூருக்கு அருகேயுள்ள மிகப் பெரிய உள் நாட்டு உப்பு நீர் ஏரியான சம்பார் உப்பு ஏரியில் குளிர்காலத்தில் இரண்டு லட்சம் ஃபிளமிங்கோக்கள் வருகை தருகின்றன. சைபீரியா போன்ற தொலைதூர இடங்களிலிருந்தும் கூட ஃபிளமிங்கோக்கள் வருகின்றன. இங்கு சூரிய உதயம், சூரிய மறைவுக் காட்சிகள் அற்புதமாய் இருக்கும்.

கட்ச் (குஜராத்): வெள்ளை உப்பு பாலைவனத்துக்குப் புகழ் பெற்ற கட்ச்சில் பெரிய, சிறிய ஃபிளமிங்கோக்கள் குவிவதுடன், இனப்பெருக்கும் செய்யும் இடமாகவும் உள்ளது.

மும்பை: மும்பையின் ஃபிளமிங்கோக்களைக் காண மிக முக்கியமான இடம் சேவரி மட் பிளட்ஸ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.