/

கோலிவுட் ஸ்டூடியோ!

நடிகை குஷ்பு சமீபத்திய நேர்காணல் ஒன்றில் திரைத்துறை சார்ந்த சில விஷயங்களைப் பகிர்ந்திருக்கிறார்.

News image
குஷ்பு
Updated On :22 மார்ச் 2025, 6:37 pm

டெல்டா அசோக்

சினிமா குறித்து குஷ்பு!

நடிகை குஷ்பு சமீபத்திய நேர்காணல் ஒன்றில் திரைத்துறை சார்ந்த சில விஷயங்களைப் பகிர்ந்திருக்கிறார். அவர், 'பெண்களை மையமாகக் கொண்ட படம் எப்போதுமே பிளாக்பஸ்டர் ஆகாது. நான் என் வார்த்தைகளைத் திரும்பப் பெறப் போவதில்லை.

இப்போது காலம் மாறிவிட்டது என்றும் சொல்லப் போவதில்லை. உண்மைகளை ஏற்றுகொண்டாக வேண்டும். பெண்களை மையமாகக் கொண்ட 'அரண்மனை 4', 'மூக்குத்தி அம்மன் 2' போன்ற படங்கள் எப்போதாவதுதான் வரும். இப்போதும் கான்கள், சூப்பர் ஸ்டார்கள், உலக நாயகன் ஆகியோருக்குதான் திரையரங்குகள் திறந்துள்ளன. எல்லோருக்கும் திரையரங்குகள் கிடைக்க இன்னும் காலம் ஆகும்' என்று பேசியிருக்கிறார்.

தொடர்ந்து ஓ.டி.டி. தளம் குறித்து பேசிய அவர், 'ஓ.டி.டி. தளத்தில் பெண்கள் மிகச் சிறப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறார்கள். டிம்பிள் கபாடியாவை ( பாலிவுட் நடிகை) எல்லாம் பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். பெண்கள் பணியாற்றுவதற்கு நிறைய ஸ்பேஸ் இருக்கிறது. 'டார்லிங்ஸ்', 'சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ்', 'டப்பா கார்டெல்', 'மகாராணி' என எதுவாக இருந்தாலும், பெண் நடிகர்கள் பெரிய திரையில் செய்ய முடியாதவற்றை ஓ.டி.டி.யில் செய்கின்றனர்.

சிலம்பரசன் விதித்த நிபந்தனை; கதாநாயகி யார்?

சிலம்பரசனின் 49- ஆவது படத்துக்கான ப்ரீ புரொடக்ஷன் வேலைகள் ஜரூராக நடைபெறுகின்றன. சிம்புவுடன் இன்னொரு ஹீரோவும் இணைகிறார். கல்லூரியின் பின்னணியில் நடக்கும் கதை இது என்பதால், படத்துக்கான லொகேஷன் தேடுதல்கள் ஒருபுறம் நிறைவு பெறும் தருணத்தில் உள்ளது. இதற்கிடையே கமலுடன் நடித்திருக்கும் 'தக் லைஃப்' படத்துக்கான புரொமோஷன்களும் ஆரம்பிக்கின்றன.

மணிரத்னத்தின் இயக்கத்தில் கமலுடன் நடித்திருக்கும் 'தக் லைஃப்' ஜூன் மாதத்தில் வெளியாகிறது. சிம்புவின் 48-ஆவது படமாக இருக்கும் இந்தப் படத்தின் புரொமோஷன் மே மாதத்தில் இருந்து தொடங்குகிறது. இதற்கு அடுத்த படமான சிம்புவின் 49-ஆவது படத்தை 'பார்க்கிங்' ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குகிறார்.

இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மிரட்டலாக இருந்தது. கல்லூரியின் பின்னணியில் இன்றைய தலைமுறை கொண்டாடும் வகையில், விண்டேஜ் எஸ்.டி.ஆரின் அனைத்து மேனரிசங்களுடன், இளமை துள்ளும் கலக்கலான கமர்ஷியல் படமாகவும், முழுக்க முழுக்க சிம்புவின் ரசிகர்களுக்கான படமாகவும் உருவாகிறது.

இந்தப் படத்தின் இயக்குநர் ராம்குமார், சிம்புவிடம் கதை சொல்லும்போதே, 'உங்களுடன் சந்தானமும் இணைந்து நடித்தால் சூப்பராக இருக்கும்' என்று சொல்லியிருக்கிறார். ஆச்சரியமான சிம்பு உடனே, 'சந்தானம் இப்போ ஹீரோவாக கலக்குறார். அவரை என்னுடன் நடிக்கக் கூப்பிட்டால் கண்டிப்பாக நடிப்பார். அதே சமயம், என் படம் அவருக்கு பலம் சேர்க்கிற மாதிரியான கதாபாத்திரமாக இருக்க வேண்டும்.

அப்படி இருந்தால் நானே அவரைக் கூப்பிடுறேன்' என்றார். 'பேசப்படக் கூடிய படமாக அமையுமாறு இருக்க வேண்டும்' என்ற நிபந்தனையுடன் தான் சந்தானத்தை அழைத்ததாக தகவல். அதேபோல், சிம்பு நடிக்கக் கேட்டதும், உடனே க்ரீன் சிக்னல் காட்டியிருக்கிறார் சந்தானம் என்ற தகவலும் வருகிறது. படத்தில் சந்தானத்தின் கதாபாத்திரம், அவரது ஹீரோ இமேஜை எந்த விதத்திலும் பாதிக்காது என்கிறார்கள்.

சிம்புவின் ஜோடியாக இதுவரை நடித்திராத காம்போவாக திட்டமிட்டு வருகின்றனர். இன்றைய டிரெண்டிங் ஹீரோயினான கயாடு லோஹர், மிருணாள் தாக்கூர் என சிலரை பரிசீலனை செய்து வருகின்றனர். மற்ற, நடிகர்கள், தொழில் நுட்ப டீமின் தேர்வு இன்னும் முடிவாகவில்லை.

இதற்கு முன் வெளியான சில ஹீரோக்களின் கல்லூரி சப்ஜெக்ட் படங்களின் படப்பிடிப்புகள் எல்லாம் சென்னையில் உள்ள சில கல்லூரிகளில் படமாக்கப்பட்டிருக்கும். அப்படி பார்த்து பார்த்து சலித்துபோன கல்லூரிகளில் இல்லாமல், ஃப்ரெஷ்ஷான ஒரு கல்லூரியில் படப்பிடிப்பு நடக்க உள்ளது என்றும், இதற்காக ஹைதராபாத், கேரளா என பல இடங்களுக்கு கல்லூரி லொக்கேஷன் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். ஏப்ரல் இரண்டாம் வாரத்தில் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டு வருகின்றனர்.

Story image

நயன்தாரா - விக்னேஷ் சிவன் தொடங்கிய பிரமாண்ட ஸ்டூடியோ!

நயன்தாரா - விக்னேஷ் சிவன் இருவரும் சேர்ந்து புதிதாக ஸ்டூடியோவை தொடங்கி இருக்கின்றனர்.

நயன்தாரா நடிப்பில் தற்போது 'டெஸ்ட்' படம் ஓ.டி.டி. தளத்தில் வெளியாக இருக்கிறது. சித்தார்த், மாதவன் ஆகியோர் நடித்திருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து 'மூக்குத்தி அம்மன் 2' படத்தில் நடிக்க இருக்கிறார்.

20 ஆண்டுகளாக நடித்து வரும் நயன்தாரா, பெண்களுக்கான அழகு சாதன பொருள்கள், நாப்கின் தயாரித்தல் உள்ளிட்ட சில தொழில்களை நடத்தி வருகிறார். அது மட்டுமின்றி 'ரவுடி பிக்சர்ஸ்' நிறுவனம் மூலம் படங்களைத் தயாரித்தும் வருகிறார்.

தற்போது சென்னை தேனாம்பேட்டை வீனஸ் காலனியில் உள்ள தங்களது பங்களாவை நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் ஹோம் ஸ்டூடியோவாக மாற்றி இருக்கிறார்கள்.

இதுதொடர்பான புகைப்படத்தையும், காணொலியையும் சமூக வலைதளங்களில் இருவரும் பகிர, அவை வைரலாகிவருகின்றன. 7 ஆயிரம் சதுர அடி பரப்பளவு கொண்ட இந்த ஸ்டூடியோவை நிகிதா ரெட்டி என்பவர் சிறப்பான உள்கட்டமைப்புடன் கைவினைப் பொருள்களால் பிரமாண்டமாக வடிவமைத்திருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.