/

பாலிவுட் ஸ்டூடியோ!

எப்போதும் சர்ச்சைகளுக்கு ஆளாகும் நடிகை கங்கனா ரனாவத் புதிதாக 'எமர்ஜென்சி' என்ற படத்தில் மறைந்த பிரதமர் இந்திரா காந்தியாக நடித்து, தயாரித்தும் இருக்கிறார்.

News image
Updated On :18 ஜனவரி 2025, 6:38 pm

டெல்டா அசோக்

கங்கனாவின் கனவு

எப்போதும் சர்ச்சைகளுக்கு ஆளாகும் நடிகை கங்கனா ரனாவத் புதிதாக 'எமர்ஜென்சி' என்ற படத்தில் மறைந்த பிரதமர் இந்திரா காந்தியாக நடித்து, தயாரித்தும் இருக்கிறார்.

'சென்சார் போர்டு' பிடியில் சிக்கித் தவித்த இந்தப் படம், கடந்த செப்டம்பர் 8-இல் வெளியாக இருந்த நிலையில், கடைசி நேரத்தில் நிறுத்தப்பட்டது. மிகுந்த பொருள் செலவில் இந்தப் படத்தைத் தயாரித்துள்ள கங்கனா ரனாவத் வாங்கிய கடனுக்காக தனது மும்பை வீட்டை விற்பனை செய்துவிட்டார். நீண்ட இழுபறிக்குப் பின்னர்தான் படத்துக்கு ஒப்புதல் கிடைத்து, ஜனவரி 17-இல் வெளியாக இருக்கிறது.

அண்மைக்காலமாக, கங்கனா நடித்த படங்கள் சரியாக வெற்றி பெறவில்லை. எனவே, 'எமர்ஜென்சி' படமும் தோல்வி அடைந்தால் கங்கனாவுக்கு பெரிதும் பின்னடைவாக அமையும். எனவே 'எமர்ஜென்சி' படத்துக்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கங்கனா ரனாவத் பாலிவுட்டில் எதிர்காலத்தில் யாரை இயக்குவது என்பது தொடர்பாக அளித்த பேட்டி ஒன்றில், 'பாலிவுட்டில் ஆதிக்கம் செலுத்தும் மூன்று கான்களையும் இயக்க வாய்ப்பு கிடைத்தால் சரியான கதை அமைந்தால் அவர்களை இயக்க தயாராக இருக்கிறேன். அவர்களிடம் நல்ல திறமை இருக்கிறது' என்று தெரிவித்தார்.

கரண் ஜோகரின் தயாரிப்பில் நீங்கள் நடிப்பீர்களா என்று கேட்டதற்கு, 'அதற்கு வாய்ப்பில்லை. ஆனால் அவர் என்னுடன் சேர்ந்து நடித்தால் அவருக்கு நல்ல கதாபாத்திரம் கொடுக்க தயாராக இருக்கிறேன். என்னால் நல்ல படம் தயாரிக்க முடியும். அது மாமியார்- மருமகள் சண்டையை கொண்டதாக இருக்காது' என்று தெரிவித்தார்.

இதற்கு முன்பு கங்கனா ரனாவத் 2017-இல் ' காபி வித் கரண்' நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது, 'எனது வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்தால் அதில் கரண் ஜோகரை வில்லனாகப் பார்க்க விரும்புகிறேன்' என்று தெரிவித்திருந்தார்.

நின்று போன திருமணம்

சல்மான் கானுடனான உறவு குறித்து கூறுகையில் 'அழைப்பிதழ் அடித்தும் நின்று போன திருமணம்..!' என்கிறார் சங்கீதா பிஜ்லானி.

பாலிவுட்டில் திருமணமே செய்து கொள்ளாமல் முரட்டு சிங்கிளாக இருப்பவர் நடிகர் சல்மான் கான். பல நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்ட அவர், நடிகை ஐஸ்வர்யா ராயை காதலித்தார். ஆனால் சல்மான் கானுடனான காதலை விரும்பாத ஐஸ்வர்யா அபிஷேக்பச்சனை திருமணம் செய்து கொண்டார். அதேசமயம் அவரை காதலித்த சல்மான் கான் இதுவரை திருமணமே செய்து கொள்ளாமல் வாழ்ந்து வருகிறார்.

பிறகு சல்மான் கானுடன் நடிகை கேத்ரீனா கைஃப்புடன் கிசுகிசுக்கப்பட்டார். ஆனால் அவரும் நடிகர் விக்கி கௌஷல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர் தனது திருமணத்துக்குக்கூட சல்மான் கானைக்கூட அழைக்கவில்லை.

நடிகை சங்கீதா பிஜ்லானி என்பவரை சல்மான் கான் எட்டு ஆண்டுகள் காதலித்தார். இருவரும் திருமணம் செய்துகொள்ளாவிட்டாலும், இப்போதும் தொடர்ந்து நல்ல நண்பர்களாகவே இருக்கின்றனர். சல்மான் கானின் பிறந்த நாள் உள்பட அவரது வீட்டில் நடக்கும் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் முதல் ஆளாக ஆஜராகக் கூடியவர் சங்கீதா பிஜ்லானிதான்.

தற்போது சல்மான் கான் வெளிநாட்டு பெண்ணான யூலியா வந்தூர் என்பவரை காதலிப்பதாக கூறப்படுகிறது.

அந்த பெண் இப்போது மும்பையில் நிரந்தரமாக தங்கி இருக்கிறார். சல்மான் கான் திருமணம் செய்யாமல், திரைப்படங்கள், மற்றும் சமூக சேவையில் ஆர்வம் காட்டி வருகிறார்.

சல்மான் கான் நடிகை சங்கீதா பிஜ்லானியை காதலித்தபோது இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இதற்காக முடிவு செய்து திருமண ஏற்பாடுகள் முழுவேகத்தில் நடந்தன.

திருமண அழைப்பிதழ் கூட அச்சடிக்கப்பட்டு விட்டது. ஆனால் கடைசி நேரத்தில் திருமணம் நின்று போனதாக அப்போது கூறப்பட்டது.

இதுகுறித்து சங்கீதா பிஜ்லானி நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, 'உண்மைதான். அது பொய் கிடையாது' என்று தெரிவித்தார்.

ஆமீர் கான் அச்சம்

பாலிவுட் நடிகர் ஆமீர்கான் மற்ற நடிகர்களை காட்டிலும் சற்று உயரம் குறைவானவர். பாலிவுட்டுக்கு வந்த புதிதில் தான் உயரம் குறைவாக இருப்பதை நினைத்து வருத்தப்பட்டதாகவும், தாழ்வு மனப்பான்மை இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஆமீர் கான் யூடியூப் சேனல் ஒன்றில் தனது கருத்துகளை நடிகர் நானா பட்டேகருடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

'பாலிவுட்டுக்கு வந்த புதிதில் நான் உயரம் குறைவாக இருந்ததால் என்னை ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா? என்ற பயம் இருந்தது. மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் என்ன செய்வது என்ற பயமும் இருந்தது.

இதனால் பாதுகாப்பற்ற ஒரு எண்ணம் எனது மனதில் ஊடுருவி இருந்தது. ஆனால் இது ஒரு பிரச்னை இல்லை என்பதை பின்னர் புரிந்து கொண்டேன்' என்றார் ஆமிர் கான்.

உடனே நானா பட்டேகர், 'என்னை பார் நானே இந்த முகத்தை வைத்து ஐம்பது ஆண்டுகளாக நடித்துக்கொண்டிருக்கிறேன்' என்று கூறினார். தொடர்ந்து பேசிய ஆமிர்கான், 'ஆரம்பத்தில் எனக்குள் உயரம் விவகாரத்தில் மன அழுத்தம் இருந்தது. ஆனால் அது ஒரு பிரச்னை இல்லை என்பது பின்னர் தெரிந்தது. எந்த அளவுக்கு நேர்மையாக வேலை செய்கிறோம் என்பதும், நமது நடிப்பு மக்களை எந்த அளவுக்கு ஈர்க்கிறது என்பதுதான் முக்கியம். மற்றவை முக்கியமில்லை' என்றார்.

இதற்கு முன்பு அளித்திருந்த பேட்டி ஒன்றிலும், 'நான் குள்ளமாக இருப்பதாக மக்கள் நினைப்பார்கள் என்று கவலைப்பட்டேன். ஆனால் மக்கள் என்னை ஏற்றுக்கொண்டார்கள்' என்று ஆமீர் கான் குறிப்பிட்டிருந்தார்.

-டெல்டா அசோக்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.