புள்ளிகள்
மகாகவி பாரதியார் மாணவராக இருந்தபோது, அவரது கவிதை எழுதும் ஆற்றலை அறிந்த ஆசிரியர் ஒருநாள், 'என்ன பாரதி.. நீ மேகம் போல் கவிதை மழை பொழிவாயாமே!


மகாகவி பாரதியார் மாணவராக இருந்தபோது, அவரது கவிதை எழுதும் ஆற்றலை அறிந்த ஆசிரியர் ஒருநாள், 'என்ன பாரதி.. நீ மேகம் போல் கவிதை மழை பொழிவாயாமே! எங்கே இப்போது கவிதை பாடு'என்று கிண்டலாகக் கேட்டார்.
இதைக் கேட்ட பாரதியார், 'மேகம் கேட்டவுடன் மழை பொழியாது'என்றார்.
ஆபிரகாம் லிங்கனிடம் ஒருவர், 'அன்பரே.. தாங்கள் படிப்பதால் பணம் கொட்டப் போவதில்லை. பின் எதற்காக, மணிக்கணக்கில் படித்துக் கொண்டிருக்கிறீர்கள்?'என்று கேட்டார். அதற்கு லிங்கன், 'அன்பரே.. நான் பணம் சேர்ப்பதற்காகப் படிக்கவில்லை. என்னிடம் பணம் சேரும்போது, பிறரிடம் எப்படி நடக்க வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்ளவே படிக்கிறேன்'என்றார்.
காவடிச் சிந்து அண்ணாமலை ரெட்டியாரைப் பார்க்க விவசாயி ஒருவர் வந்தார்.
'ஐயா... நான் ஏழை விவசாயி. எனக்கொரு ஆடும், ஒரு மூட்டை அரிசியும் பெற்றுத் தாருங்கள். எங்கள் குடும்பம் பிழைக்கும்'என வேண்டினார். இதைக் கேட்ட ரெட்டியார், 'நீங்கள் கேட்பதில் ஒன்று நடக்கும். ஒன்று நடக்காது'என்றார். உடனே ஏழையின் முகம் வாடிவிட்டது.
மெல்லச் சிரித்த ரெட்டியார், 'கவலைப்படாதீர்கள். நீங்கள் கேட்டவை கிடைக்கும். அதில் ஆடு நடக்கும். அரிசி மூட்டை நடக்காது. இதைத்தான் அப்படி சொன்னேன்'என்றார்.
அறிஞர் வ.சுப.மாணிக்கனாரின் நகைச்சுவைப் பேச்சில் தரமும் நயமும் இருக்கும். நீண்டநாள்கள் கழித்து பார்த்த நண்பர் ஒருவரின் உடல் பருத்திருந்ததைப் பார்த்ததும் வ.சுப.மா., 'என்னப்பா.. நீ வான் நோக்கி வளராமல் திசை நோக்கி வளர்கிறாயே' என்றார்.
-நெ.இராமகிருஷ்ணன், பொழிச்சலூர்.
முதல்வராக காமராஜர் இருந்தபோது, தலைமைச் செயலகத்தில் தனது கவனத்துக்கு வரும் கோப்புகளைக் காரணமின்றி நிறுத்திவைக்க மாட்டார். கோப்புகள் அவரது மேஜைக்கு வரும் முன்பாக, மூன்று விதமாகப் பிரிக்கச் சொல்வார். இந்த மாதிரி கோப்புகளை வகைப்படுத்தி, உடனே செய்ய வேண்டியதைத் தாமதமின்றி செய்தார்.
துறை அமைச்சர்கள் முடிவு செய்து, மேலொப்பத்துக்காக முதல்வருக்கு வந்தவை. அவர் தனக்குக் கீழ் நம்பிக்கையும் நேர்மையும், சுயநலம் இல்லாதவர்களாகவும் இருந்தவர்களையே அமைச்சர்களாக்கியிருந்தார்.
இதனால் அந்தக் கோப்புகளுக்கு உடனே மேலொப்பம் செய்து அனுப்பிவிடுவார். அப்படி மேலொப்பம் செய்வதாயினும் முழுவதையும் படித்துவிட்டு ஏற்புடையதாயின் ஒப்பம் இடுவார். ஏதாவது ஐயம் ஏற்பட்டால், துறை அமைச்சரையும், துறைச் செயலரையும் அழைத்துப் பேசி ஐயம் தீர்ந்தவுடனே ஒப்பம் இடுவார்.
கோப்புகள் மேல் விவரங்கள் தேவைப்படுவதால் உடனே தீர்வு செய்ய இயலாது. அதனால் உரிய துறைச் செயலர் மேல் விவரங்களைக் கேட்டுப் பெற்று வந்தவுடன் அதன் சாத்தியக் கூறுகளைப் பேசியவுடன் முடிவு செய்ய வேண்டியவை.
தானே தலையிட்டு தீர்வு செய்ய வேண்டியவை. உரிய துறைச் செயலரையும் தலைமைச் செயலரையும் கோப்பை வாசிக்கச் சொல்லி, சாதக, பாதகங்களை ஆராய்ந்து முடிவு செய்ய வேண்டியவை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...