/

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: குமட்டலை போக்க வழி என்ன?

எட்டாம் வகுப்பு படிக்கும் என் மகன், பள்ளிப் பேருந்தில் செல்கிறான்.

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 3:06 am

எஸ். சுவாமிநாதன்

எட்டாம் வகுப்பு படிக்கும் என் மகன், பள்ளிப் பேருந்தில் செல்கிறான். காலையில் உண்ணும் உணவு அவனுக்கு சரிவர செரியாமல் பேருந்தில் செல்லும்போது குமட்டல் ஏற்படுவதாகவும், மற்ற பிள்ளைகள் கிண்டல் செய்வார்களே என்று பயந்து வாந்தியை அடக்கிக் கொள்வதாகவும் கூறுகிறான். இதனை எப்படி குணப்படுத்துவது?

லூர்துமேரி,
புதுச்சேரி.

வாந்தியாக வெளியேற்றப்பட வேண்டிய உணவை உங்கள் மகன் அடக்குவதால், பல உடல் உபாதைகளை பின்னாளில் சந்திக்க வேண்டி வரலாம். விஸர்ப்பம் எனும் தீக்காயம் போன்ற எரிச்சலுடன் கூடிய அரிப்பை உடலெங்கும் தோலில் தோன்றும் உபாதை, கோடம் எனும் உடலில் நமைச்சலுடன் தோன்றும் சிவந்த பல வட்டங்கள், வீக்கங்கள் போன்ற உபாதைகளை அவர் சந்திக்கக் கூடிய அபாயம் காத்திருக்கிறது.

கருங்காலிக்கட்டை, நால்பா மரப்பட்டை, வேலம்பட்டை ஆகியவற்றை வகைக்கு பத்து கிராம் எடுத்து, ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டுக் காய்ச்சி, அரை லிட்டராகக் குறுகியதும் , சிறிது சிறிதாக ஒரு நாளில் பல தடவை, வாய் கொப்பளிக்கப் பயன்படுத்த வேண்டும்.  இதனால் வாய், தொண்டை, வயிறு சார்ந்த குமட்டலை ஏற்படுத்தும் கண்களுக்குப் புலப்படாத  நுண்கிருமிகளை அழிப்பதுடன் துர்நாற்றத்தை  ஏற்படுத்தும் சளி, பித்த தோஷங்களை முழுவதுமாக நீக்கி, இப்பகுதிகளில் சுத்தத்தை ஏற்படுத்தும்.

ஊமத்தம் இலையைச் சுருட்டி, சருகு போலக் காய்ந்ததும், முனையைக் கொளுத்தி வெளிப்படுத்தி வெளிப்படுத்தும் புகையை, வாயினுள் புகைப்பதாலும் நுண் கிருமிகள் அழிந்து, வாய் சுத்தமாகும்.  ருசி கோளங்களிலுள்ள அடைப்புகள் நீங்கி, வாய் மொறமொற வென்றிருக்கும். பள்ளி செல்லாத நாள்களில், காலையில் உபவாஸம் எனும் பட்டினி இருத்தலும் நலம்.

குமட்டலை அடக்கும் செரிமானக் கோளாறுகளில் சிறிதும் நெய், எண்ணெய் போன்றவை தாளிதம் செய்யப்படாத வரண்ட உணவைச் சாப்பிட்டு, வாந்தி செய்வதன் மூலம் வயிறு சார்ந்த உட்புற அழுக்குகள் நன்கு வெளியேறிவிடும்.

உடல்சூட்டை அதிகப்படுத்தும் உடற்பயிற்சிகளைத் தொடர்ந்து செய்வதன்மூலமாக, செரிமானத்துக்கு உதவும் ஜீரணத் திரவங்கள் நன்கு சுரக்கும். குமட்டல்லை அடிக்கடி அடக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு, அதனால் வயிற்றில் கிளர்த்தெழும் விஷப் பொருள்களின் வரவு, ரத்தத்தைக் கெடுத்துவிடும் நிலையில் தோன்றும் தோல் உபாதைகளை, காரிரத்தக் குழாய்களைக் கீறி வெளியேற்றப்படும் சிகிச்சை முறையே சிறந்த வழியாகும்.

திரிவிருத் லேஹியம், கல்யாண குலம், மாணிபத்ரம் லேஹியம் போன்றவற்றின் உட்புற வரலால், குடல், வயிறு சார்ந்த அழுக்குகள், பித்த சீற்றம், கெட்டுப் போன குடல் காற்று போன்றவை பேதி மூலம் நீக்கப்படுவதுடன் நுண் கிருமிகளும் வெளியேறிவிடும்.

ஏலாதி கேர தைலம், நால்பாமரக் கேர தைல தினேச வல்யாதி தைலம் போன்றவற்றில் ஒன்றுடன் சிறிது கல்யாணக்ஷôரம் எனும் மருந்தும், சிறிது உப்பும் கலந்து, இளஞ்சூடாக உடலெங்கும் தேய்த்து குளிப்பதால், தோல் சார்ந்த உபாதைகளை நீக்கிவிடும் சிறந்த சிகிச்சையும் இதுபோன்ற உபாதைகளைக் குணப்படுத்தலாம்.

குமட்டலைக் குணப்படுத்தும் வில்வாதி லேஹியம், வில்வாதிகுளிகை, ஜீரகாரிஷ்டம், மாதீபலரஸாயனம் போன்ற ஆயுர்வேத மருந்துகளை உங்கள் மகன் பயன்படுத்தலாம்.

 (தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.