ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: பாத எரிச்சலுக்கு மருந்து என்ன?
நீரிழிவுக்கு பித்தநீர் மட்டும்தான் காரணமா? மன அழுத்தமும் காரணமாகலாமா? தண்ணீர் அதிகம் குடிக்காவிட்டாலும்கூட, அவ்வப்போது சிறுநீர் வருகிறதே?


நீரிழிவுக்கு பித்தநீர் மட்டும்தான் காரணமா? மன அழுத்தமும் காரணமாகலாமா? தண்ணீர் அதிகம் குடிக்காவிட்டாலும்கூட, அவ்வப்போது சிறுநீர் வருகிறதே? காபி, டீயில் உள்ள கசப்பு நீரிழிவை கட்டுப்படுத்த உதவுமா? குடிக்கலாமா? கூடாதா? பாத எரிச்சல், மதமதப்புக்கு பொதுவான மருந்து உள்ளதா?
வாரண்ட் பாலா,
கோவை.
இருபது வகையான நீரிழிவு நோய்களை ஆயுர்வேதம் கண்டறிந்துள்ளது. அதில், கபதோஷத்தின் மூலமாக பத்து வகைகளிலும், பித்த நீரினால் ஆறுவகைகளும், வாத தோஷத்தினால் நான்கு வகைகளும் ஏற்படும் என்று "அஷ்டாங்க ஸங்கிரஹம்' எனும் ஆயுர்வேத நூல் கூறுகிறது.
மனம் சார்ந்த ரஜஸ் தமஸ் எனும் இரு தோஷங்களின் வாயிலாக ஏற்படும் சீற்றங்கள், உடல் சார்ந்த வாத பித்த கப தோஷங்களின் தாக்குதலுக்கு ஏற்பட, அவற்றின் துணையோடு, மன அழுத்தம் ஏற்பட்டு நீரிழிவு நோய்க்குக் காரணமாகலாம்.
அதனால் நீரிழிவு நோயாளிகளின் ரத்தம் மற்றும் சிறுநீர் வாயிலாக அறியப்படும் சர்க்கரையின் உயர்ந்த அளவுக்கு ஏற்ப அளிக்கப்படும் பொதுவான மருந்துகளால் அளவு குறையலாம். ஆனால் குணமாவதில்லை.
தனி மனிதனாகச் சார்ந்த வாழ்க்கை முறை உண்ணும் முறை மனதில் ஏற்படும் கோப தாபங்கள் போன்றவற்றின் அடிப்படையில் சிகிச்சை செய்து சர்க்கரையின் அளவை நிரந்தரமான கட்டுக்குள் வைக்கும் சிகிச்சை முறைகளே சிறந்தவை.
தண்ணீர் அதிகம் குடிக்காமலேயே அவ்வப்போது சிறுநீர் வருவதற்குக் காரணமாக, சிறுநீரகங்களில் ஏற்படும் அழற்சி, கிருமித் தொற்று போன்றவை காரணமாகலாம். அதிக உடல் அசைவுகள் இல்லாமல் ஓரிடத்தில் அதிகம் அமர்ந்து இருந்தால், வியர்வை கோளங்கள் சுறுசுறுப்பில்லாமல் வியர்வையை வெளியேற்றுவதில்லை. அப்போதும் வியர்வை மூலம் வெளியேற வேண்டிய நீரை, சிறுநீரகம் வெளியே தள்ள வேண்டிய நிலைக்கு ஆளாவதால், அவ்வப்போது சிறுநீர் வெளியேறும். உணவில் அதிகம் சேர்க்கப்படும் திரவத்தின் அளவு கூடினாலும், சிறுநீர் வெளியேற்றம் அதிகரிக்கக் கூடும்.
இனிப்பினால் ஏற்படும் உபாதைகளுக்கு, காரமான சுவை கொண்ட உணவும், மருந்துமே தீர்வாகும் என்றும் புளிப்புச் சுவையினால் ஏற்படும் உபாதைகளுக்குக் கசப்புச் சுவையும், உப்பினால் ஏற்படும் உபாதைகளுக்கு துவர்ப்புச் சுவையும் எதிராகவும் அதிரடியாகவும் வேலை செய்து குணப்படுத்தும் தன்மையுடையவை என ஆயுர்வேதம் பரிந்துரைப்பதால், நீங்கள் குறிப்பிடுவதுபோல, காபி, டீயில் உள்ள கசப்புச் சுவையினால் நீரிழிவு கட்டுப்படுவதில்லை.
இனிப்பு உபாதையான நீரிழிவிற்கு கசப்புச் சுவையைவிட காரமான சுவையே தீர்வாகும் என்பதை நாம் இதிலிருந்து நன்கறியலாம். அதனால் அவற்றை கசப்பாகக் குடித்து நீரிழிவை கட்டுப்படுத்தலாம் என்று நீங்கள் நினைத்தால் அது நடவாது என்பதை அறியவும்.
சர்க்கரையின் அளவு வேண்டுமானால் கூடாமல் இருக்கலாம்; அதுவும் நீங்கள் வாத கப தோஷங்களால் உடலமைப்பு உடையவராக இருந்தால் மட்டும் சாத்தியமாகும்.
பாத எரிச்சல் பித்த சீற்றத்தையும் மதமதப்பு, வாயுவின் சீற்றம் நரம்புகளில் ஏற்பட்டுள்ளதையுமே காட்டுகின்றன.
மஞ்சள், வெட்டிவேர் ஆகியவற்றை முக்கியமான மூலிகை சேர்க்கையாகப் பயன்படுத்திக் காய்ச்சப்படும் தைல மருந்தை, கால் பாதங்களில் பகல் நேரத்தில் உணவுக்கு முன் நன்கு தேய்த்து, அரை முக்கால் மணி நேரம் ஊறிய பிறகு தண்ணீரால் கழுவி விடுவதை வழக்கமாக்கிக் கொண்டால் பாத எரிச்சலையும், மதமதப்பையும் வெகுவாகக் குறைக்கலாம்.
நீரிழிவினால் உடல் சோர்ந்து, இளைப்பு, தண்ணீர் தாகம், தீவிர பசி, படி ஏறினால் மூச்சிரைப்பு, வரட்டு இருமல், தோல் வரட்சி, மலச் சிக்கல், குடலில் வாயுவின் சீற்றம், பித்த எரிச்சல் போன்றவை ஏற்படும் நிலையில், அவை அனைத்தையும் மாற்றக் கூடிய சிறந்த கஷாய மருந்துகள் உள்ளன. மருத்துவரின் ஆலோசனைப்படி சாப்பிடுவதே நல்லது.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...