டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

"யூ டியூப்'  மூலம்  சம்பாதிக்கும் கிராமம்!

ஒவ்வொரு நாட்டிலும் ஒரு  கூட்டம்  "யூ டியூப்'   நிகழ்ச்சிகளைப்  பார்த்து பொழுதைப்  போக்கிக்கொண்டிருக்க,  மறுபுறம் லட்சக்கணக்கானோருக்கு மாதம்தோறும்  நல்ல வருமானத்தை வழங்கிவருகிறது.  

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 10:53 am

சக்ரவர்த்தி


ஒவ்வொரு நாட்டிலும் ஒரு கூட்டம் "யூ டியூப்' நிகழ்ச்சிகளைப் பார்த்து பொழுதைப் போக்கிக்கொண்டிருக்க, மறுபுறம் லட்சக்கணக்கானோருக்கு மாதம்தோறும் நல்ல வருமானத்தை வழங்கிவருகிறது. உண்மைதான். "யூ டியூப்' பலருக்கும் பணம் காய்க்கும் மரம்.

ஒரு கிராமமே "யூ டியூப்'பை வைத்து எக்கச்சக்கமாகச் சம்பாதிக்கிறது. அந்தக் கிராமத்துக்கு இளைஞர்கள் வேலை தேடி வெளியூர் செல்ல வேண்டிய தேவை இல்லை.

துளசி கிராமம் சத்திஸ்கர் மாநிலத்தில் ராய்ப்பூர் மாவட்டத்தில் உள்ளது. இங்கு வசிக்கும் சுமார் 1200 பேர் யூ டியூப் நிகழ்ச்சி மூலம் கிடைக்கும் வருமானத்தில் வாழ்க்கை நடத்துகின்றனர். சிலர் நிகழ்ச்சி தயாரிப்பாளர்களாக, நடிகர்- நடிகைகளாக, பங்களிப்பவர்களாக இருக்கின்றனர். அதனால் மாதம் சராசரியாக நாற்பதாயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கின்றனர்.

இந்த இளைஞர்களின் பிரதான வேலை நிகழ்ச்சிகளை உருவாக்க கருவைத் தீர்மானிப்பதும், அந்தக் கருவை எப்படி படம் பிடிப்பது என்பது குறித்துதான்! 40 யூ டியூப் சானல்களை இந்தக் கிராமத்தினர் தொடங்கியிருக்கிறார்கள்.

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் வேலை பார்த்த ஞானேந்திர சுக்லா வங்கி வேலையை உதறிவிட்டு காமிராவைக் கையில் எடுத்துக் கொண்டு களத்தில் இறங்கி ஏனைய இளைஞர்களுக்கு வருமானம் பெருக்க வழிகாட்டினார். சுக்லாவுடன் அவரது நண்பர் ஜெய் வர்மாவும் இணைந்தார்.

சுக்லா தனது அனுபவங்கள் குறித்து கூறியதாவது:

""நான் வேலையில் இருந்தபோது, ஓய்வு நேரத்தில் யூடியூப்பில் பல்வேறு நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டே இருப்பேன். சில நிகழ்ச்சிகளை இன்னும் தரமான முறையில் தயாரிக்கலாமே என்று தோன்றும். வேலையை ராஜிநாமா செய்தேன். என்னுடன் நண்பர் ஜெய் வர்மாவும் இணைந்தார். சானல் ஒன்றை தொடங்கினோம். இதுவரை 250 காணொளிகளைத் தயாரித்து வெளியிட்டிருக்கிறோம். சுமார் ஒரு லட்சம் சந்தாதாரர்கள் எங்கள் சேனலுக்கு இருக்கின்றனர்'' என்றார்.

இன்னொரு பிரபலம் பிங்கி சாஹு யூடியூபராகவும், நடிகையாகவும் தயாரிப்பாளராகவும் கலக்கிவருகிறார். அவர் கூறியது:

""யூடியூப் பெண்களிடையே தன்னம்பிக்கையை அதிகரித்துள்ளது. எங்கள் ஊரில் பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரமாட்டார்கள். வெளியே வருவதற்கும் அனுமதி இல்லை. ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது. நான் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் யூடியூபராக மாறினேன். தொடக்கத்தில் எனது கிராமப் பெண்கள் காமிரா முன் நடிக்க வெகுவாகத் தயங்கினர். "ராம லீலா' நாடகம் ஏற்பாடு செய்து அதில் நடிக்கச் சொல்லி, அவர்களது தயக்கங்களைப் போக்கினோம். உள்ளூர் நடிகர் நடிகைகளை தயார் செய்தோம். இப்போது கிராமத்து பெண்களுக்கும், இளைஞர்களுக்கும், முதியோர்களுக்கும் நடிப்பு அத்துப்படியாகிவிட்டது.

எங்கள் கிராமத்தைச் சேர்ந்தவர்களுக்கு கிராமிய கலைகள் அபாரமான வரும். ஆனால் அந்தத் திறமையை வெளிக்காட்ட சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. அத்தகையவர்களுக்கு யூடியூப் ஒரு வரப்பிரசாதமாக மாறியுள்ளது. அவர்கள் நடிப்பை பல லட்சம் பேர் பார்க்கின்றனர். நடிப்பதன் மூலம் அவர்களுக்கு வழக்கமாகக் கிடைக்கும் வருமானத்தைவிட கூடுதல் வருமானம் கிடைக்கிறது'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.