ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: எலும்புகள் நலம் பெற...

என் வயது 70. எடை 72 கிலோ. இடது கால் மூட்டு ஜவ்வு தேய்ந்துவிட்டது. இலேசாக காலை தாங்கி நடக்க வேண்டி இருக்கிறது.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 10:45 am

எஸ். சுவாமிநாதன்

என் வயது 70. எடை 72 கிலோ. இடது கால் மூட்டு ஜவ்வு தேய்ந்துவிட்டது. இலேசாக காலை தாங்கி நடக்க வேண்டி இருக்கிறது. ஜவ்வுகள் பலப்படவும், எலும்புகள் நலம் பெறவும் மருந்துகளைத் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். வீட்டில் செய்யும் எளிய மருத்துவ முறைகள் இருக்கிறதா என்பதையும் தெரிவிக்கவும்.

-தமிழ்மணி,
திண்டுக்கல்.

உணவையே மருந்தாக்கி நோய்களை விரட்டியடிக்கும் பல யுக்திகளை கையாள்வதில் நம் முன்னோர் சிறந்த மருத்துவர்களாக விளங்கினர். மூட்டினுடைய உட்பகுதியில் புகுந்து அங்கு தேவையான வழுவழுப்பை ஏற்படுத்தும் விதமாக, அவர்கள் வலியுறுத்தும் கொள்ளு, உளுந்து மற்றும் பச்சரிசியை நீங்கள் 4:2:1 என்ற வகையில் எடுத்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, வேக வைத்து, கஞ்சிப் பதத்தில் இறக்கி, அதில் சிறிது எள்ளுத் தூளும், பசு நெய்யை உருக்கிச் சேர்த்து, ருசிக்காக சிறிது இந்துப்பும் கலந்து, காலையில் பசி உள்ள வகையில் வெதுவெதுப்பாகக் குடிக்கவும். வீட்டிலேயே செய்து சாப்பிடக் கூடிய எளிய மருத்துவ முறைகளில் இதுவும் ஒன்றாகும்.

ஆமணக்கு எண்ணெய் குடலில் வழுவழுப்பை ஏற்படுத்தி, குடல் வாயுவையும் மலத்தை நெகிழ்த்தி வெளியேற்றும் செயலை திறம்படச் செய்யும் தனித்துவம் பெற்றிருந்தாலும், அதில் சிட்டிகை பெருங்காயம் கலந்து, காலை இரவு என இரு வேளையாக சுமார் பத்து மில்லி லிட்டர், உணவிற்கு அரை மணி முன் நக்கிச் சாப்பிட, குடல் சுத்தமடைவதுடன், மூட்டு ஜவ்வுகளுக்கு கிரீஸ் போடும் வேலையும் செய்து தரும். இதையும் நீங்கள் வீட்டிலிருந்த செய்து கொள்ளலாம்.

விளக்கெண்ணெய்யையும் நல்லெண்ணெய்யையும் சம அளவு எடுத்து, சிட்டிகை உப்பு கலந்து, இரும்புக் கரண்டியில் சூடாக்கி, மூட்டின் மீது விட்டு, உருட்டி உருட்டித் தடவி அரை முக்கால் மணி நேரம்  ஊறிய பிறகு, வென்னீர் ஒத்தடம் கொடுத்து, அதன் வீரியமானது தோல் வழியாக உறிஞ்சப்பட்டு, ஜவ்வுகளின் மீது உட்புறமும் பரவி, நெய்ப்பு எனும் வழுவழுப்பை ஏற்படுத்தக் கூடிய முயற்சியை நீங்கள் வீட்டிலிருந்து கொண்டே செய்ய வேண்டிய நல்லதொரு வெளிப்புறச் சிகிச்சையமாகும்.

ஜவ்வுகள் பலப்படவும், எலும்புகள் நலம் பெறவும் பிரண்டைத் துவையல் சாதம் உங்களுக்கு உதவும். வீட்டிலுள்ள பெண்கள் இந்தத் துவையலை நன்கு செய்வார்கள். அதில், சிறிது நல்லெண்ணெய் கலந்து சாப்பிட மிகவும் நல்லது.

ஆயுர்வேத மருத்துவமனைகளில் மூட்டு ஜவ்வுகளை நேரடியாகவும் உடனடியாகவும் வலுப்படுத்த முடியாது என்பதை நன்கு அறிந்திருப்பதால், முதலில் சில நாட்களுக்கு மூலிகைப் பற்று இடுவதையும், அதன்பிறகு மூட்டுகளின் மீது தொடர்ந்து மூலிகைத் தைலங்களை மேலிருந்து ஊற்றி, அதன் பிறகு மூலிகை இலைகளைக் கொண்டு, நீராவியை உருவாக்கிக் காண்பிப்பதையும் செய்வார்கள். இதனால் மூட்டுகளின் அசைவுகள் எளிதாவதுடன், உட்புற ஜவ்வுகளும் எலும்புகளும் வலுப்படவும் செய்கின்றன.

மஹாராஸ்னாதி கஷாயம், க்ஷீரபலா 101 கேப்ஸ்யூஸ், யோகராஜ் குக்குலு மாத்திரை மற்றும் மஹாமாஷ தைலம் எனும் வெளிப்பறப் பூச்சு போன்றவற்றின் வாயிலாகவும், ஜவ்வுகளின் உறுதித் தன்மையை மேம்படுத்தலாம்.

நொச்சி, குப்பை மேனி, பருத்திக் கொட்டை, சித்தரத்தைத் தூள் ஆகியவற்றைக் கொண்டு காண்பிக்கப்படும். வேது பிடித்தல் முறையாலும் நீங்கள் நன்கு பயனடையலாம்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.