ஏழு வகையான தாதுக்களில் ஒன்றாகிய ரத்தம் ஒரு போதும் தானாகவே கெடுவதில்லை. பித்த தோஷத்தின் சீற்றத்துக்கு எவை காரணமாகிறதோ அவை ரத்தத்தையும் உடனடியாகக் கெடுத்துவிடும் தன்மையுடையவை. அதிக கோபம், வருத்தம், பயம், உழைப்பினால் சோர்வு, பட்டினி, சீரணத்தில் எரிச்சலை உருவாக்கும் உணவுகள் (ஊறுகாய், கரம் மசாலா போன்றவை), காரம், புளி, உப்பு, ஊடுருவும் தன்மை, சூடான வீர்யம் கொண்ட உணவு, நெஞ்செரிச்சலை ஏற்படுத்தும் மிளகாய்ப் பொடி, மிளகு, பட்டை போன்றவை நல்லெண்ணெய், புண்ணாக்கு, கொள்ளு, கடுகு, மீன், ஆடு, தயிர், மோர், சீஸ், தயிர் மேல் நிற்கும் தண்ணீர், ஆறிய கஞ்சி, பீர், மதுபானம், புளிப்பான பழங்கள், ஆடை நீக்கிய புளித்த தயிர் ஆகியவை பித்த சீற்றத்தை ஏற்படுத்தி, ரத்தத்தையும் கெடுத்துவிடும். நீர்த்த உணவு, நெய்ப்பு, செரிப்பதில் கடினமானவை, பகல் தூக்கம், நெருப்பின் அருகில் நெடுநேரம் இருத்தல், கடும் வெயிலில் வெளியே சுற்றித் திரிதல், அஜீரணம், ஒவ்வாமை உணவுகள் ஆகியவை ரத்தத்தை நேரடியாகவே கெடுத்துவிடும் ஆபத்தான விஷயங்களாகும்.