ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: மூக்கில் வாசனை... நாக்கில் ருசி!
என் வயது 29. ரயில்வே ஊழியர். கரோனா தொற்று ஏற்பட்டு, தற்சமயம் குணமாகிவிட்டேன்.


என் வயது 29. ரயில்வே ஊழியர். கரோனா தொற்று ஏற்பட்டு, தற்சமயம் குணமாகிவிட்டேன். ஆனால் இன்னும் மூக்கில் வாசனையோ, நாக்கில் ருசியோ ஏற்படவில்லை. தொடையில் சதை கரைந்துபோய் இளைத்துவிட்டது. டூ வீலர் ஓட்டக் கூடிய வலுவும் இல்லை. இது எதனால்? எப்படிக் குணப்படுத்துவது?
ரமணி, சென்னை.
மூளையிலிருந்து கீழிறங்கும் நரம்புகளில் ஏற்படும் தாக்கத்தின் விளைவே நீங்கள் குறிப்பிடும் வாசனையை அறிய முடியாத நிலையும், ருசியின்மையும். இந்த வைரஸ் தாக்கத்தின் காரணமாக, தலையைச் சார்ந்த "தர்ப்பகம்' எனும் கபதோஷமானது, தன்னகத்துள் அடங்கிய நெய்ப்பு - குளிர்ச்சி - கனம் - மந்தம் - வழுவழுப்பு- கொச கொசப்பு - நிலைப்பு ஆகிய குணங்களின் நெகிழ்வினை, மூளையின் நரம்புகளில் பரப்பி விடுவதால், மூக்கு மற்றும் நாக்கின் உணர்வுகளைச் வெளிப்படுத்தும் நரம்புகளின் செயலாற்றும் தன்மையை இழக்கச் செய்கிறது.
இக்குணங்களை வேகமாக அகற்றக் கூடிய வழியினை மூக்கினுள் செலுத்தப்படும் மூலிகைப் புகையினாலும், மூலிகைத் திரவங்களைக் கொண்டு வாய் கொப்பளிப்பதன் மூலமாகவும் நீங்கள் செய்து கொள்ள வேண்டும்.
வால் மிளகை ஊசி முனையில் குத்தி அனலில் காட்டி அதன் புகையை மூக்கினுள் செலுத்தி உறிஞ்ச, நரம்புகளில் பற்றிப் பரவியுள்ள கபத்தின் குணங்கள் வறண்டு, மீண்டும் வாசனையை உணரலாம். மூக்குச் சதை அடைப்பு, கட்டிச் சளி அடைப்பு, மூக்கின் உள்ளே வேக்காளம், நீர்க்கோர்வை, தலைவலி போன்ற உபாதைகளையும் இந்த எளிய சிகிச்சையின் மூலம் குணப்படுத்தலாம்.
நாக்கிலுள்ள ருசி கோளங்களைத் திறக்க, புளியை நீரில் கரைத்து அதில் மிளகு, கிராம்பு, ஏலம் இம்மூன்றையும் சிறிது தூளாக்கிக் கலந்து சர்க்கரை, பச்சைக்கற்பூரம் சேர்த்துச் சாப்பிடலாம். வெறும் புளியைத் தண்ணீரில் கரைத்து வாய் கொப்பளிக்க, அது உமிழ்நீரை அதிகம் சுரக்கச் செய்கிறது. ருசியூட்டி, நாக்கினுள் படர்ந்துள்ள நரம்புகளின் உணர்ச்சியைத் தூண்டி திகட்டாமல் உணவை ஏற்கச் செய்கிறது.
ஊற வைத்த மூன்று வாதுமைப் பருப்புடன், அஸ்வகந்தா தூள் ஒரு கிராம், அரிசித் திப்பிலி ஒன்று இவற்றை அரைத்துப் பாலில் குழப்பி ஒரு கொதி வரும் வரை சுட வைத்துச் சர்க்கரையும், நெய்யும் விட்டுச் சாப்பிட , நல்ல புஷ்டி தரும். தொடை சதை மெலிந்து வரும் தங்களுக்கு உடல் புஷ்டியடைந்து பருக்கும். இதைச் சாப்பிட உடல் தளதளவென வளர்ச்சியடையும்.
அஜஅஸ்வகந்தாதி லேகியம் எனும் ஆயுர்வேத மருந்தை நீங்கள் காலை, மாலை வெறும் வயிற்றில் 10 கிராம் சாப்பிட்டு மேலே சுமார் 150 மி.லி. பாலை வெதுவெதுப்பாகச் சாப்பிட, உடல் சோர்வு நீங்கி, சுறுசுறுப்பு ஏற்படும். இதில் அசைவ கொழுப்பு கலந்திருப்பதால், சைவ உணவை மட்டுமே சாப்பிடுபவர்கள், சாப்பிடக் கூடாது. காலை, இரவு உணவிற்குப் பிறகு 30 மி.லி. தசமூலாரிஷ்டம் சாப்பிடலாம்.
காலை உணவாக, அதிகம் பயற்றம் பருப்பு கலந்த பருப்பு சாதத்தில் இந்து காந்தம் எனும் நெய்மருந்தை விட்டு, சூடாக, மிளகு, சீரகம், பூண்டு போட்ட ரசம் சாதம், நன்கு வேக வைத்த கறிகாய்களுடன் சாப்பிட நல்லது.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...