ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: இதயத்தைச் சீராக்க... எல்லாம் சீராகும்!
வயோதிகத்தில் ஏற்படும் ரத்த நாள விரைப்புத்தன்மை, அங்குள்ள ரப்பர் போன்ற தன்மையின் குறைபாடு, ரத்த அழுத்த மந்தம் போன்ற சில காரணங்களால்


என் வயது 81. கால்கள் இரண்டும் பெரிதாக இருப்பது போன்ற உணர்வு உள்ளது. மத மதப்பாகவும் உள்ளது. நடப்பதற்குச் சிரமமாக உள்ளது. இது எதனால்? எப்படி குணப்படுத்துவது?
- கே. வேலுச்சாமி, தாராபுரம்.
வயோதிகத்தில் ஏற்படும் ரத்த நாள விரைப்புத்தன்மை, அங்குள்ள ரப்பர் போன்ற தன்மையின் குறைபாடு, ரத்த அழுத்த மந்தம் போன்ற சில காரணங்களால் நீங்கள் குறிப்பிடும் வகையில் கால்கள் பெரிதானது போன்ற உணர்வும், மதமதப்பும், நடப்பதற்குச் சிரமமாக இருப்பது போன்ற நிலை ஏற்படும்.
இதயத்தின் சுருங்கி விரியும் தன்மைக்கேற்ப ரத்த நாளங்கள் சுறுசுறுப்பாக வேலை செய்வதும், செய்யாததும் நடக்கின்றன.
உட்கார்ந்த நிலையிலேயே கால்களை நீட்டிமடக்குதல், கால் விரல்களை ஒன்றாகக் குவியும் வண்ணம் செய்து மடக்கி நீட்டுதல், நின்ற வாக்கில் கால்களை அகட்டி வைத்து மெதுவாக மடக்கி பின் நிமிர்தல் போன்றவை நலம் தரலாம்.
ஒரு சில ஆயுர்வேத மருந்துகள் உங்களுக்கு உள்ளும் புறமுமாக பயன்படுத்த குணம்பெற முயற்சிக்கலாம். பசி சுமாராக இருக்கும் பட்சத்தில், இந்துகாந்தம் எனும் நெய் மருந்தை உருக்கி சுமார் 10 - 15 மி.லி. காலையிலும், விதார்யாதி எனும் நெய் மருந்தை உருக்கி, மாலையில் வெறும் வயிற்றிலும் சாப்பிடவும். ரத்த நாளங்களுக்குத் தேவையான வலுவை அவற்றின் உட்புறச் சுவர்களுக்கு ஏற்படுத்தவும், ரப்பர் போன்ற தன்மையும் அமைத்துக் கொடுக்கவும் இவை உதவிடக் கூடும்.
பசிக் குறைவு, மலச்சிக்கல், வாயு உபாதை போன்ற இயற்கையான வயோதிகப்
பிரச்னைகளில் இருந்தால், கந்தர்வஹஸ்தாதி எனும் விளக்கெண்ணெய் மருந்தை சுமார் 10 மி.லி. காலை, மதியம், மாலை என மூன்று வேளையாகப் பிரித்து உணவிற்கு ஒரு மணி நேரம் முன் நக்கிச் சாப்பிட, குடல் மிருதுவான தன்மையை அடைந்து இப்பிரச்னைகளிலிருந்து விடுபட்ட பின்னர், முன் குறிப்பிட்ட நெய் மருந்துகளை அருந்தலாம். விளக்கெண்ணெய் மருந்தை தொடர வேண்டிய அவசியமுமிருக்காது.
இதயச் சுருக்க விரிவாக்கங்களை சீராக வைத்திருக்கும் வியான வாயுவும், இடுப்பிற்கு கீழ் ஆதிக்கம் செலுத்தும் அபான வாயுவும் சீராக செயல்படும் நிலையில், நீங்கள் குறிப்பிடும் கால் உபாதைகள் குணமடைய வாய்ப்பிருக்கிறது.
இரண்டு தான்வந்திரம் எனும் குளிகை மருந்தை, சீரகம் காய்ச்சிய வெந்நீருடன் காலை உணவிற்குப் பிறகும், ஹிங்குவசாதி எனும் சூரண மருந்தை 1/5 ஸ்பூன் எடுத்து (5கிராம்), ணீ கிளாஸ் (150 மிலி) வெந்நீருடன் கரைத்து, காலை இரவு உணவிற்கு ணீ மணி முன் சுமார் 15 - 21 நாட்கள் சாப்பிடச் செய்தால், வியான - அபான வாயுக்களின் செயல் மேம்பாடு அதிகரிக்கும்.
அதன் பிறகு எந்த மருந்தையும் சாப்பிட, அவற்றின் சக்தியை உட்கிரகிக்க, உடலைத் தயார் நிலையில் வைத்திருக்கவும் உதவும்.
பசி நன்கு எடுத்து, மலம் சிறு நீர், குடல் காற்று ஆகியவை தங்கு தடையின்றி வெளியேறும் நிலையிலும், இரவில் நல்ல உறக்கத்தையும் நீங்கள் அடைந்துவிட்டால், பிறகு ஆயுர்வேத ஆஸ்பத்திரியில் செய்யப்படும் உடலெங்கும் மூலிகைத் தைலம் ஊற்றுதல், நீராவிக் குளியல், நவரக்கிழி போன்ற சிகிச்சை முறைகளால் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.
வாயுவை அதிகரிக்கும் உணவுப் பொருட்களைத் தவிர்க்கவும். ரத்த நாள உள்விட்டங்களின் சுருக்கத்தை அதிகரிக்கச் செய்யும் வறட்சி, லேசு, குளிர்ச்சி, சொர சொரப்பு ஆகியவை ஏற்படுத்தும் வாயுப் பொருட்களை உண்பதும், அவற்றை அதிகரிக்கச் செய்யும் செயல்களாகிய குளிர்ந்த நீரைக் குடிப்பதும், வறட்சியாக உடலை எண்ணெய் தேய்த்துக் குளிக்காதிருப்பதையும், வெயிலில் செல்வதையும் தவிர்க்கவும்.
(தொடரும்)
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,
நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)
செல் : 94444 41771
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...