மேலும், ஆயுர்வேதம் உயர் இரத்த அழுத்த காரணங்களை விளக்குகையில், வியானன் எனும் இதயத்தைச் சார்ந்த வாயுவினுடைய சீற்றமானது உயர் இரத்த அழுத்தத்திற்குக் காரணமாகலாம் என்று கூறுகிறது. சுஸ்ருதர் எனும் முனிவர் தான் இயற்றிய "சுஸ்ருத ஸம்ஹிதை'யில் உடலில் வாயுவை அதிகரிக்கக் கூடிய காரணங்களை கீழ்காணும் வகையில் குறிப்பிடுகிறார் - தன்னைவிட வலுவானவர்களுடன் வலுக்கட்டாயமாக சண்டை போடுதல், சக்திக்கு மீறி உடற்பயிற்சி செய்தல், உடலில் காயம் ஏற்படுத்திக் கொள்ளுதல், பட்டினி இருத்தல், அதிகமாக நீந்துதல், இரவில் உறங்காமல் கண்விழித்தல், அளவுக்கதிகமாக சுமைகளைத் தலையில் சுமத்தல், வாகனங்களில் அதிக தூரம் சவாரி செய்தல், நீர்ப்பசையற்ற காய்கறிகளை வறண்ட நிலையில் உண்ணுதல், பச்சைப்பயறு, கொண்டைக்கடலை போன்றவற்றை சூடு ஆறிய நிலையில் உட்கொள்தல், குடல் வாயு, சிறுநீர், மலம், விந்து, வாந்தி, தும்மல், ஏப்பம், கண்ணீர் போன்றவற்றை வலுக்கட்டாயமாக அடக்குதல் ஆகியவை - வியான வாயுவினுடைய சஞ்சாரமானது இரத்தக் குழாய்களின் உட்புற சவ்வுகளில் வேகமாக இரத்தத்தை எடுத்துச் செல்லும் நிலையில் அதனுடைய இயற்கைத் தன்மையாகிய குழாய்களின் இரப்பர் போன்ற தன்மையைக் குறைத்து வறட்சியை ஏற்படுத்தி அவற்றை விரைப்புறச் செய்வதால் அதுவே இரத்த அழுத்த உபாதைக்கு ஒரு முக்கிய காரணமாக அமைகிறது.