/

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: தேனில் ஊறிய நெல்லிக்கனியும் உயர் ரத்த அழுத்தமும்!

என் வயது 68. உயர் ரத்த அழுத்தம் உள்ளது. இரத்த அழுத்தத்தை நார்மலில் வைத்திருக்க அலோபதி மாத்திரைகள் தவறாமல் உட்கொள்ள வேண்டியுள்ளது.

News image
Updated On :24 ஜனவரி 2024, 4:27 pm

எஸ். சுவாமிநாதன்

என் வயது 68. உயர் ரத்த அழுத்தம் உள்ளது. இரத்த அழுத்தத்தை நார்மலில் வைத்திருக்க அலோபதி மாத்திரைகள் தவறாமல் உட்கொள்ள வேண்டியுள்ளது. உயர் இரத்த அழுத்தத்தைக் குறைத்து கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளத் தவறினால் சிறுநீரகங்கள் பாதிக்கப்படக்கூடும் என்று சொல்கிறார்கள். உடலின் இரத்த அழுத்தத்தைச் சீராக வைத்திருக்கவும், சிறுநீரகங்கள் பாதிப்படையாமல் இருக்கவும் என்னென்ன உணவுப் பழக்கங்களைக் கடைப்பிடிக்கவேண்டும்? உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் ஆயுர்வேத சிகிச்சைமுறைகள் எவை?

- எஸ்.பாலாம்பாள், விருகம்பாக்கம்.

தேனில் ஊறிய நெல்லிக்காயைச் சாப்பிடுவதால் உயர் இரத்த அழுத்தம் மட்டுப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இதை நீங்கள் வீட்டிலேயே தயாரித்துச் சாப்பிடலாம். நெல்லிக்காய்களை அலம்பி மேல் ஈரத்தை உலர்த்தித் துடைத்து ஒரு வெள்ளிக்கம்பி அல்லது எவர்சில்வர் கம்பி இவற்றில் ஒன்றில் நெல்லிக்காய்களில் குத்தி சிறிய பொத்தல்கள் ஏற்படுத்தி ஜாடியிலிடவும். பிறகு நெல்லிக்காய்கள் மூழ்குமளவிற்கு தேன் நிரப்பி மூடி வைக்கவும். தினம் ஓரிரு மணிநேரம் அந்த ஜாடிகளின் வாயில் நல்ல மெல்லிய சுத்தமான வெள்ளைத்துணியால் கட்டி வெயிலில் வைத்திருக்கவும். இவ்விதம் பதினைந்து நாட்கள் செய்ததும் ஜாடியை நன்கு மூடி ஈரக் கசிவு இல்லாததும் ஈ, எறும்பு தீண்ட முடியாததுமான இடத்தில் பத்திரமாக்கிக் கொள்ளவும். நெல்லிக்காய் நன்கு ஊறியதும் ஈரமில்லாத சுத்தமான சிறிய ஸ்பூன்களின் உதவி கொண்டு கொட்டைகளை அகற்றியும் விடலாம். இயற்கையில் ஆண்டில் மூன்று மாத காலமே கிடைக்கக் கூடிய நெல்லிக்காய்களை ஆண்டு முழுவதும் பசுமையும், குணமும், மணமும் குன்றாதபடி பாதுகாத்து வைத்துக் கொள்ள இது மிகச் சிறந்த வழி.

பித்தத்தினால் ஏற்படக்கூடிய உயர் இரத்த அழுத்தத்தைக் குணப்படுத்தும் சிறப்பு இந்த தேனில் ஊறிய நெல்லிக்காய்க்கு உண்டு. லேசான ஒரு மலமிளக்கியாகவும் இந்த தேனில் ஊறிய நெல்லிக்காய் பயன்படும். கண்களுக்கும், கேசத்திற்கும் நல்லது. நல்ல ஜீரணசக்தி ஏற்படும். கொதிப்பு ஏற்பட்டு தலையிலும் மார்பிலும் வலியுடன் மயக்கம், தலை சுற்றுதல் உள்ள நிலைகளில் தேனில் ஊறிய நெல்லிக்கனியை ஒன்றிரண்டை காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிடலாம். குடலில் உள்ள புண்ணை ஆற்றவல்லது. ஆயுளை நீட்டிக்கச் செய்யவும், நோய்கள் வராமல் பாதுகாக்கவும், தினசரி கையாளத்தக்க இயற்கை உணவு மருந்துப்பண்டம் இந்த நெல்லிக்காய்.

இனிப்புச் சுவையுள்ள ஆல்மாண்ட் எனப்படும் பாதாம்பருப்பை ஊற வைத்து மேல்தோல் நீக்கி நெய்விட்டு லேசாக மணக்க வறுத்து, தனித்து சர்க்கரைத்தூள் சேர்த்து சாப்பிடலாம். பருப்பை ஊற வைத்து நன்றாக அரைத்து சிறிது பால் கலந்து குழப்பி சுட வைத்து கொஞ்சம் சர்க்கரை சேர்த்து பாதாம்பாலாக்கிச் சாப்பிட்டால் நல்ல புஷ்டி தரும் உணவுப்பண்டம் இது. உடல் காங்கையாலும், வெட்டைச் சூட்டாலும், இரத்தக் கொதிப்பாலும் உடல் மெலிந்து வருபவர்களுக்கு உடல் புஷ்டியடைந்து பருக்க ஏற்றது. இதைச் சாப்பிட உடல் தளதளவென்று வளர்ச்சியடையும்.

மூன்று பாதாம் பருப்புடன் அமுக்கராக்கிழங்குத் தூள் ஒரு கிராம், அரிசி திப்பிலி ஒன்றிரண்டையும் சேர்த்து அரைத்து பாலில் குழப்பி ஒரு கொதி வரும் வரை சுட வைத்து, சர்க்கரையும் நெய்யும் விட்டுச் சாப்பிடுவது அதிக இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும். பெண்களுக்கு ஏற்படும் அதிக வெட்டைப்படுவதை நிறுத்த இது ஒரு சிறந்த உணவு. அதிக உதிரப்போக்கால் ஏற்படும் இடுப்பு விட்டுப்போவது போன்ற வலியும் நிற்கும். தாய்ப்பால் நன்கு ஊறும். உயர் இரத்த அழுத்தத்தால் ஏற்படும் களைப்பு, நுரையீரல், ஜனன உறுப்புகள், சிறுநீர் உறுப்புகள், மூளை நரம்பு இவற்றில் ஏற்படும் பலவீனம் போன்ற பிரச்னைகளிலும் இதைப் பயன்படுத்திக் குணம் பெறலாம். குடல் வாயு மிகுந்தவர்களும், பசியின்மையால் துன்புறுபவர்களும், தாய்ப்பால் இல்லாத பெண்களும், வறண்ட இருமல் உள்ளவர்களும் உயர் இரத்த அழுத்த உபாதையால் பாதிக்கப்பட்டிருக்கும் தறுவாயில் இந்த பாதாம்பருப்பை மேற்குறிப்பிட்டவகையில் பயன்படுத்தி நல்ல பயனை பெறலாம். ஆல்மாண்ட் ஆயில் எனப்படும் பாதாம் எண்ணெய்யை தலைக்குத் தேய்த்து குளிக்க கண்களுக்குக் குளிர்ச்சி, மூளை நரம்புகளுக்கு பலம், தோலுக்கு பதம் மற்றும் உடலுக்கு பலமளித்து இரத்த அழுத்தத்தைச் சீராக்கும். சர்ப்பகந்தா குலிகை, மானசமித்ரம் குலிகை, வாயு குலிகை போன்ற ஆயுர்வேத மருந்துகள் உயர் இரத்த அழுத்ததைக் குறைக்க பயன்படுத்தப்படும் நல்ல குலிகைகளாகும்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.