ஒருநாள் ரஜினி என்னைச் சந்திக்க வந்தார். ரொம்ப நேரம் பேசிக் கொண்டு இருந்தோம். அப்போது திடீரென்று கமலும் என்னைப் பார்க்க அங்கே வந்தார். திட்டம் இல்லாமல் எதேச்சையாக நடந்த சந்திப்பு அது. ""என் பயணத்தில் நான் தியாகராஜ பாகவதர், பி.யூ.சின்னப்பா, சிவாஜி, எம்.ஜி.ஆர். என பலரிடம் பழகி இருக்கிறேன். ஆனால், அவர்களிடம் இல்லாத ஒரு பண்பு உங்களிடம் இருக்கிறது. உங்களிடம் போட்டி உண்டு. பொறாமை இல்லை...'' என அவர்களிடம் சொன்னேன். ""அதற்குக் காரணம் பாலசந்தராக இருக்கலாம்...'' என்றார் கமல். ""நான் சினிமாவுக்கு வந்தபோதே, கமல் பெரிய ஹீரோ. அவரை நான் நண்பனாக ஏற்றுக் கொள்வதற்கு முன்பே, அவர் என்னை நண்பனாக ஏற்றுக்கொண்டு விட்டார்'' என்று இருவரும் பழைய சம்பவங்களை நினைவு கூர்ந்தனர். அப்போது திடீரென்று ரஜினி ""கமல்... நாம ரெண்டு பேரும் ஒரு படம் சேர்ந்து நடிக்கலாம்...'' என்றார். மௌனமாக இருந்த கமல் ""கண்டிப்பாக நடிக்கலாம். அந்தப் படத்தை சரவணன் சாரே தயாரிக்கட்டும்...'' என்றார்.