ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்
உடல்நிலைக்கு ஒவ்வாத உணவை உட்கொண்டாலும், மனதிற்கு இதமற்ற சூழ்நிலையில் ஆகாரத்தை உட்கொண்டாலும் வாந்தி


அலுவலகத்தில் அதிகாரிகளின் முன் எனக்கு ஏற்படும் சோர்வின்பொழுது கொட்டாவியை விடமுடியாமல் அடக்க வேண்டிய நிர்பந்தம். அவர்களிடம் ஏய்ச்சும், பேச்சும் கேட்கும்பொழுது வரும் கண்ணீரை அடக்க வேண்டிய கட்டாயமும் ஏற்படுவதால் மிகுந்த துன்பத்திற்கு ஆளாகிறேன். மேலும், அலுவலக நிமித்தமாக உணவகங்களில் சாப்பிட நேரும்பொழுது ஏற்படும் குமட்டல், வாந்தியையும் கட்டுப்படுத்த வேண்டியுள்ளது. இவை நீங்கி பாதுகாப்பான உடல்நிலையைப் பெற என்ன செய்யவேண்டும்?
-எம்.ஜெயலட்சுமி, சென்னை.
கொட்டாவி ஓர் இயற்கை வேகம். மனிதன் சுறுசுறுப்பாக இல்லாமல், மனதில் சோர்வுடனும், சோம்பலுடனும் இருக்கும் சமயத்தில் சோம்பலாக இருக்கும்பொழுது இரத்த ஓட்டம் குறைகிறது. உடல் உறுப்புகளுக்கு போதுமான பிராண வாயு கிடைக்காததால் சுறுசுறுப்பு குறைந்து சோர்வு உண்டாகிறது. அப்போது சோர்வு நீங்கி சுறுசுறுப்பு உண்டாக்க வேண்டிய நிலை ஏற்படுவதால், பிராணவாயு அதிகம் தேவைப்படுகிறது. இயற்கையாக நாசியின் துவாரங்கள் வழியே உட்செல்லும் பிராண வாயு அப்போது போதுமானதாக இல்லை. ஆகவே வாயாலும் பிராண வாயுவை உள்ளிழுத்து வெளியிட வேண்டியிருக்கிறது. ஆகவே பிராண வாயுவின் தேவையைப் பூர்த்தி செய்வதற்கே இந்தக் கொட்டாவி ஏற்படுகிறது.
கொட்டாவியைத் தடுத்தால் தலைவலி, முகம், காது, மூக்கு முதலிய உறுப்புகளின் பலக்குறைவு, மென்னியில் பிடிப்பு, முகத்தின் ஒரு பாகமே வாயுவினால் இழுக்கப்பட்டு கோணலாகி அப்பாகம் உணர்விழந்து போதல் முதலிய முக நோய்கள் ஏற்படுகின்றன. ஆகவே கொட்டாவியைத் தடைசெய்து நோய்கள் ஏற்பட்டால் மார்பு, கழுத்து, முகம் முதலிய பகுதிகளை நன்கு இதமளிக்கும்வகையில் தடவி விட்டும், வாதநோய்களைப் போக்கவல்ல தான்வந்தர தைலம் முதலியவற்றைத் தடவி ஒத்தடம் கொடுத்தும், சூடான நெய்ப்புள்ள இனிப்பான பானங்களைப் பருகியும் அந்த வாத வேகத்தைச் சமனப்படுத்திக்கொள்ள வேண்டும்.
கண்களின் இமைகளில் மிகவும் நுண்ணிய பல கண்ணீர் சுரப்பிகள் அமைந்துள்ளன. கண்களின் பாதுகாப்பிற்காகவும், கண்களின் அசைவிற்கு இதமாக இருக்கவும் இச்சுரப்பிகளிலிருந்து எப்போதும் நீர் கசிந்து கொண்டேயிருக்கிறது. கண்களில் தூசி முதலியவை விழுந்தால் அவற்றை உடனே அகற்ற கண்ணீர் அதிமாகக் கசிகிறது. துக்கமோ, ஆனந்தமோ அதிகமாகும்பொழுது இது அதிகமாகப் பெருகுகிறது. இப்படி அதிகமாகப் பெருகும் கண்ணீர், கண்களின் இமைகளில் தங்கி வெளியே சிந்தியும், மூக்கின் அருகிலுள்ள துவாரங்கள் வழியே மூக்கினுள் சென்றும் வெளியாகிறது. ஆக கண்களை நேரடியாகப் பாதிக்கும் தூசி முதலியவையும், மனதைப் பாதிக்கும் ஆனந்தமும், துக்கமும் கண்ணீரை வரவழைக்கின்றன. தூசி முதலியவை படுவதால் ஏற்படும் கண்ணீரைத் தடுக்க முடியாது. ஆனந்தமும் துக்கமும் காரணமாக ஏற்படும் கண்ணீரைத் தடுக்கலாம். உங்களுடைய மனதினுள் சோகமிருந்தாலும், அதை வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளக்கூடாது என்ற மனோபாவத்தால் கண்ணீரை அடக்குவது நோய்களுக்குக் காரணமாகிறது. பீனஸம் என்ற விடாத ஜலதோஷம் கண்ணிமைச் சுரப்பி நோய்கள், தலைநோய் மனோவேகத்தை அடக்குவதால் இதயநோய், கழுத்துப்பிடிப்பு, ருசியின்மை, தலைசுற்றுதல் முதலியவை ஏற்படுகின்றன. அதனால் நீங்கள் முடிந்தவரை இயற்கை உந்துதல்களை அடக்காமல் அவற்றின் போக்கிலேயே விடுவது நல்லது. கண்ணீரைத் தடுத்து முன்கூறிய நோய்கள் ஏற்பட்டால் வீட்டில் நல்ல அமைதியுடன் தூங்குவது, மனதிற்கு இன்பமான இசையைக் கேட்பது மனதிற்கு அமைதி தரும் மருந்துகளைச் சாப்பிடுவதும் நல்ல சிகிச்சையாகும்.
உடல்நிலைக்கு ஒவ்வாத உணவை உட்கொண்டாலும், மனதிற்கு இதமற்ற சூழ்நிலையில் ஆகாரத்தை உட்கொண்டாலும் வாந்தி ஏற்படலாம். அதைத் தடுத்தால் வாந்தி எடுக்கக் காரணமாயிருந்த தோஷம் உடல் முழுவதும் பரவி காணாக்கடி போன்ற தோல் நோய்களை ஏற்படுத்தலாம். கண் நோய், காய்ச்சல், இருமல், இழுப்பு, படபடப்பு, வீக்கம் முதலியவற்றை உண்டாக்கும். இதைச் சமாளிக்க துவர்ப்புச் சுவையுள்ள கடுக்காய் போன்ற காய்ச்சிய நீரால் வாய் கொப்பளிக்க வேண்டும். அடக்கிய வாந்தியைத் தூண்டி மீண்டும் எடுத்துவிடுவது நல்லது. அதற்கு சூடான தண்ணீரில் உப்பைப் போட்டு வயிறு நிறையச் சாப்பிட தானே குமட்டல் ஏற்பட்டு வாந்தி எடுக்கும். அப்படி வராவிட்டால் தொண்டையில் விரல் விட்டு வாந்தி எடுக்கலாம். வயிற்றில் தங்கியிருக்கும் உணவை ஜீரணிக்கத் தக்கபடி உடற்பயிற்சி செய்யவேண்டும். வார இறுதி நாட்களில் உடல்நிலையையொட்டி கடுக்காய் கஷாயம், சூரத்து நிலாவாரை கஷாயம் முதலிய எண்ணெய்ப் பசையற்ற மலமிளக்கிகளைக் கொண்டு மலத்தை இளக்கி வெளியாக்க வேண்டும். மிளகு, சீரகம் முதலியவற்றைப் போட்டுக் காய்ச்சிய எண்ணெய்யை உடலில் பூசிக் குளிக்கலாம்.
(தொடரும்)
எஸ். சுவாமிநாதன், டீன்
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,
நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)
செல் : 94444 41771
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...