/

அணைப்பு

எட்டாவது நிறுவனத்திலிருந்து அம்மினி நேற்றுதான் விலகினாள். விலகினாள் என்றால் அந்தக் கணினி நிறுவனத்திலிருந்து தூக்கி எறியப்பட்டாள்.

News image
Updated On :9 ஜனவரி 2024, 5:44 am

சு. ராமையா

எட்டாவது நிறுவனத்திலிருந்து அம்மினி நேற்றுதான் விலகினாள். விலகினாள் என்றால் அந்தக் கணினி நிறுவனத்திலிருந்து தூக்கி எறியப்பட்டாள்.

நேற்று ஒரு மோசமான நாளாக இருக்கும் என்று அம்மினி காலையிலேயே நினைத்திருந்தாள். அது எப்படி மோசம் என்று அவளுக்குத் தெரியவில்லை. சமிக்ஞை சொல்லும் எந்தக் கனவும் அவள் காணவில்லை. பள்ளிக்குடம் ஏதோ கனவில் வந்து போயிருந்தது. காலையில் எழுந்தபோது முன்வாசலுக்கு வந்த போது அப்படியெதுவும் அபசகுணம் தென்படவில்லை. குறி சொல்பவன் அந்த வீதியில் அலைந்து கொண்டிருந்தான், ஆனால் அவன் ஏதாவது சொல்லி விட்டுப்போனானா தெரியவில்லை. அதையெல்லாம் அவள் மனதில் கொள்வதில்லை.

மாலையில் அந்தக்கடிதம் அவளுக்குத் தரப்பட்டு விட்டது. "உங்கள் சேவைக்கு நிறுவனம் மிக்க மகிழ்ச்சி கொள்கிறது. பொருளாதாரச் சிரமங்கள், மற்றும் தொழில்நுட்பத்துறையில் தென்படும் சிரமதிசை காரணமாக ஆள் குறைப்பு செய்கிறோம்.

தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி' எந்த நிலையிலும் வீட்டிற்கு அவள் தகவல் தரப்போவதில்லை.

அப்புச்சியின் சாவுக்குப் போனபோது, ""இது எத்தனாவது கம்பினி அம்மினி?'' என்று பலரும் கேட்டார்கள். அம்மினியின் அப்பா தபால் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். ஒரே துறையில் 35 வருடம் பணி

புரிந்த தியாகி அவர். முதல் நிறுவனத்திலிருந்து அடுத்த நிறுவனத்தில் சேர அம்மினி முடிவெடுத்த போது அவர் அதிர்ச்சியுற்றிருந்தார்.

""ஒரே கம்பனியில இருக்கறதுதானே அம்மினி பெருமை?''

""என்னப்பா.. காலம் ரொம்பத்தான் மாறி போச்சு. இப்பவெல்லா நல்ல கம்பனி, நல்ல கம்பனின்னு மாறிட்டு இருக்கறதுதா பேஷன். வருமானத்துக்கு வழி. மூளையே மூலதனம் ஒவ்வொரு கம்பனி மாறுறப்பவும் சம்பளம் அஞ்சாயிரமாவது ஏறுமே அப்பா''.

""என்ன இருந்தாலும் ஒரே கம்பனி நல்லதில்லையா?''

""ஒரே புருசன்கிட்ட வாழ்ற மாதிரி நெனக்கறீங்களா? புருசன், கம்பனி இதெல்லாம் சம்பந்தமில்லையப்பா?''

எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் இருந்த பணத்தைப் பொட்டல் காட்டில் ஓர் இடம் சகாயமாய் கிடைக்கிறதென்று எல்லாவற்றையும் சுருட்டி அப்பாவிற்கு அனுப்பி விட்டாள். இனி என்ன செய்வது? என்பது யோசனையாக இருந்தது. நாளைக்கு தகவல் தெரிந்தால் புஷ்பா முதல் ரத்திகா வரை எல்லாரும் விசாரித்து விட்டு வங்கிக் கணக்கில் பணம் போட ஆரம்பித்து விடுவார்கள். இது அவர்கள் மத்தியில் சாதாரணம்.

வேலையிழப்பு என்று தெரிந்தால் பணம் வங்கிக் கணக்கிற்கு வந்து விடும். பிறகு முடிகிற போது தந்துவிடலாம். புஷ்பா முதல் ரத்திகா வரை எல்லோருக்கும் அவளும் செய்திருக்கிறாள். வேலையிழப்பு என்று வந்து விட்டால் பரஸ்பரம் உதவி என்பது அவர்களின் நட்பில் சாதாரண விதி.

அடுத்து தான் சேரவிருக்கும் நிறுவனம் எதுவாக இருக்கும் என மெத்தையில் சாய்ந்து கொண்டே யோசித்தாள். வானம் வெளிறிப் போய் நீலத்தைக் காட்டிக் கொண்டிருந்தது, கொஞ்ச நேரத்தில் நட்சத்திரங்களும் மினுங்க ஆரம்பித்து விடும்..

தூக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டாம் என்று தோன்றியது அவளுக்கு.

பதினைந்தாவது திருமணத்திற்கு சென்ற வாரம் அம்மினி சென்றது ஞாபகம் வந்தது. இந்த நகரத்திற்கு வந்த பின் பதினைந்தாவது திருமணம். எட்டு நிறுவனங்களில் மாறியிருக்காவிட்டால் பதினைந்தை எட்டியிருக்க முடியாது. தொட்டு பார்க்க முயன்றவர்களில் எத்தனை பேர், முயற்சியில் தோல்வி கண்டு தூற்றியவர்கள் எவ்வளவு பேர் என்பதையும் அம்மினி யோசித்துப் பார்த்திருக்கிறாள். திருமணமான பதினைந்து பேரும் அந்தப் பட்டியலில் இருந்தார்கள். இதெல்லாம் எனக்குத் தேவையில்லை என்பதை இந்த பதினைந்து பேரிடம் தெரிவித்திருக்கிறாள். இன்னும் சிலரிடமும். ஒரே நிறுவனத்தில் இருந்திருந்தால் இந்த மறுப்பு வார்த்தைகள் விரோதத்தைக் கொண்டு வந்திருக்கும். அதுவே அங்கிருந்து துரத்தியிருக்கும் சிலசமயம் உடம்பு காயம் பட்டிருக்கும். மனசு எவ்வளவோ காயப்பட்டிருக்கிறது அம்மினிக்கு.

சந்திரமுகி தொலைபேசி செய்திருந்தாள்.

""ஒரே நாள்லே ரொம்ப போர் அடிக்குதா? வெளியில போலாமா? எந்தச் சிக்கலும் இல்லை, ஜாக்கிரையாக டாக்சியில் அறைக்குத் திரும்பி விடலாம்.. தெரிஞ்ச அண்ணன்மார் டாக்சி டிரைவர்கள் இருக்கிறார்கள். தெரியுமே உனக்கு?''

""எதுவுமில்லாமே ஒரு கிராமத்துப்பொண்ணா இருக்கற காலம்ன்னு தோணுதடி?''

""செரிடி ..ஒரு நாள்ல வர்ற ஞானோதயம் சீக்கிரம் மாறிரும். அம்மினி..''

""ஜாக்கரதை தேவைதான்''

எதிரில் இருந்த வால் போஸ்டரைப் பார்த்துக் கொண்டாள்.

அதில் சன்னலுக்கு அப்பால் இருந்த வானத்தின் நீலம் அச்சாக பிரதிபலிப்பாகிக் கொண்டிருந்தது. நீண்டதொரு ஏரி இன்னும் நீலமாய் அறையின் அகலத்திற்கு விரிந்து கிடந்தது. தூரத்தில் மலைகள் நீலப்பச்சையுடன் நின்றிருந்தன.

இந்த தனி அறை அடுத்த நிறுவனத்தில் சேருகிற வரைக்கும் தேவையா? என்ற எண்ணம் வந்தது. எங்காவது கூட்டு அறைக்குச் சென்றால் செலவு குறையும். மற்றவர்களின் கஷ்டமும் புரியும்.

செகடந்தாளி ஆரம்பப் பள்ளி இந்த வாரம் இரண்டு நாள் கனவில் வந்து விட்டது.

அங்கு தெரிந்தவர் என்று யாரும் இருக்கப் போவதில்லை. போனால் வா என்று அடையாளம் காண யாருமில்லை. ஏன் இந்தப்பள்ளிக்கூடம் கனவில் வந்து இப்போது பயமுறுத்துகிறது. அப்பா பல ஆண்டுகள் வேலை செய்த எளச்சிபாளையம் தபால் நிலையமும் அந்தப் பள்ளிக் கட்டிடம் போலத்தான் இருக்கும்.. இரண்டிற்குமிடையில் கட்டிட வேறுபாடு இல்லாமை அவளை அவ்வப்போது அங்கு கொண்டு போய் நிறுத்தியிருக்கிறது. ஒரு நடை போய் அந்த இரண்டு கட்டிடங்களையும் பார்த்து விட்டு வரலாம் என்று தோன்றியது. சன்னலுக்கு வெளியே மின்னல் கீற்று பட்டது. மகிழ்ச்சியாக இருந்தது. அவளுக்கு. ரொம்பநாள் கழித்து மழைச்சாரல் படுவது மாதிரி உடம்பை பால்கனியில் கிடத்தலாம் என்று தோன்றியது அவளுக்கு.

இருபத்தொன்றாம் புலி. அது அவளின் படுக்கையில் பொம்மையாய் சாய்ந்து கிடந்தது. ஏகதேசம் ஒரு வருடக் குழந்தையின் எடையிருந்தது. அவள் அறை மாற்றும் போதெல்லாம் புலி பழையதாகி விடுவது போல் அங்கேயே விட்டுச் சென்று விடுவாள்.

அடுத்த அறைக்குச் செல்லும் போது புலியும் மாறியிருக்கும்.

""என்ன புலிக்கட்சிகாரியா நீ?'' என்று பலரும் கேள்வி கேட்டிருக்கிறார்கள். புலிகள் இந்தியாவில் இவ்வாண்டில் 30 அதிகமாகியிருப்பது அவளுக்கு மகிழ்ச்சியே தந்திருக்கிறது. புலிகள் காப்பகம் என்ற கோஷம் அங்கிருந்த பழங்குடிகளைத் துரத்தியிருக்குமா? அதனால் அவர்கள் எண்ணிக்கையில் உயர்ந்து விட்டார்களா?

""என்னடி இது? கட்டிப் புடிச்சு தூங்கறதுக்கு உனக்கு வேற எதுவும் கெடைக்கலியா?''

""இருக்கட்டுமடி''

""பேஷனா டிராகானாச்சும் வாங்கிப் போடு''

""அது திறந்த வாயும் செவப்பு நாக்குமா கெடக்குமே. அதுக்கு இது மேல்தான்''

""பட்டிக்காட்டுக்காரிங்கற வகையில பசு மாடு பொம்மை ஒண்ணும் வாங்கிப் போட்டுக்க மாட்டியே?''

அவள் இருபத்தொன்றாம் புலி பொம்மையை அணைத்து அதன் உடம்பு மயிர்கள் தரும் அருவருப்பை மீறி மெல்ல கண்ணயர ஆரம்பித்தாள்.

அடுத்த நிறுவனம் பதினெட்டு மாடியாய் கனவில் வந்து போனது. சிங்கிள் டவராக இருந்தது அது. டுவின் டவ்ரில் விமானம் மோதி செத்துப் போன கிரிஜாவின் ஞாபகம் வந்து அப்போதைய தூக்கத்தையும் குலைத்தார்கள்.

ரொம்ப நேரம் ஆகும் என்று தோன்றியது தூக்கம் வர. வானம் இருட்டாகி எதையெதையோ சொல்லிப் பயமுறுத்திக் கொண்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.