/

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: எப்படி வாழ வேண்டும்?

புது வருடம் பிறந்துள்ள இத்தருணத்தில் என்னை நெறிமுறைப்படுத்தி வாழவிரும்புகிறேன். அதற்கான உபதேசங்களை ஆயுர்வேதம் கூறுகிறதா?

News image
Updated On :9 ஜனவரி 2024, 4:20 am

எஸ். சுவாமிநாதன்

புது வருடம் பிறந்துள்ள இத்தருணத்தில் என்னை நெறிமுறைப்படுத்தி வாழவிரும்புகிறேன். அதற்கான உபதேசங்களை ஆயுர்வேதம் கூறுகிறதா?

-கண்ணன், தஞ்சாவூர்.

 அஷ்டாங்க சங்கிரகம் எனும் ஆயுர்வேத நூல் நன்னடத்தை எனும் ஒரு பகுதியில், மனிதர்கள் வாழ வேண்டிய முறைகளைப் பற்றி விரிவாக எடுத்துக் கூறுகிறது. அவை பற்றிய ஒரு சில குறிப்புகள் உங்களுக்கு உதவிடக்கூடும். அதன் விவரம்:

தினமும் இரண்டு வேளைகளிலும் ஸ்நானம் (குளித்தல்) செய். ஸ்நானம் செய்ததும் முன் உடுத்திய ஆடையை மறுபடி கட்டிக் கொள்ளாதே. நாக்கு, மூக்கு, காது, கண், வாய், ஆசனவாய், சிறுநீர்வாய் போன்ற பகுதிகள் அழுக்கு சேருமிடங்கள். நடையால் கால்களிலும் அழுக்கு சேரும். இவற்றை அடிக்கடி சுத்தப்படுத்திக் கொள். கேசம், மீசை, ரோமங்கள், நகங்கள் இவையும் அழுக்கு சேருமிடங்களே. இவற்றையும் நன்றாகப் பராமரித்துக் கொள். அழுக்கற்ற ஆடைகளை அணி. உடல் நாற்றமகல நறுமணப்பொருளைப் பூசிக்கொள். தோற்றத்தை அழகாக வைத்துக் கொள். சிகையை நன்கு சீவி அழகுபடுத்திக் கொள்.

பிறர் தம்முடன் பேசுவதை எதிர்பாராமல் தானே முதலில் பேச்சைத் தொடங்குவாய். இனிய முகத்துடன் உரிய நேரத்தில் இதமாயும் அளவுடனும் இனியதாயும் பேசுவாய். செய்யத் தகாததைச் செய்வதில் கூச்சமும், எதனையும் ஆழ்ந்து சிந்திப்பதும் சிறப்பு தரும்.

எல்லா உயிரினத்திடமும் அன்பாகப் பழகு. ஆபத்தான சூழ்நிலையில் வருந்துபவர்களுக்கு உதவு. கோபவசப்பட்டுக் குமுறுபவர்களைச் சமாதானப்படுத்து.

பயந்தவர்களுக்கு ஆறுதல் கூறு. சொன்ன சொல்லைக் காப்பாற்று. சாந்தத்தை முக்கியமாக்கிக் கொள். பிறரது கொடுஞ்சொல்லைப் பொறுத்துக் கொள்.

பொறுமையின்மையைத் தவிர்த்து விடு. அமைதியில் நன்மையைக் காண்பாய்.

தன்னிடம்  உதவி எதிர்பார்த்து வருபவரை வெறுங்கையுடன் அனுப்பாதே. எவரையும் பூர்ணமாக நம்புவதோ, சிறிது கூட நம்பாதிருப்பதோ நல்லதல்ல.

எவரையும் தனக்கு எதிரி என்றோ, எவருக்கும் தான் எதிரி என்றோ பிரகடனப்படுத்தாதே. தனக்கு ஏற்பட்ட அவமதிப்பை வெளிப்படுத்தாதே.

மக்களின் கருத்தறிந்து அவர்களை திருப்திப்படுத்துவதில் தேர்ந்தவனாக எவர் எவர் எப்படி எப்படி மகிழ்வரோ அப்படி அவர்களுக்கு அனுகூலமாகப் பழகு.

காது, கண் முதலிய பொறிகளை அவற்றுக்குத் தேவையானவற்றை மிகவும் குறைத்தளித்து அடக்குவதோ, அளவிற்கு மீறி அளித்து அதிகமாக வாதனை செய்வதோ தவறு.

அறம், பொருள், இன்பம் என்ற மூன்றுக்கும் பயன்படாத எந்தச் செயலையும் தொடங்காதே. இம்மூன்றில் எதனையும் புறக்கணிக்காதே. எல்லா நடைமுறைகளிலும் நடுநிலையைப் பின்பற்று. அதிக ஈடுபாட்டையோ வெறுப்பையோ காட்டாதே.

உடற்பயிற்சி,  சிரிப்பு, பேச்சு, வழிநடப்பு, உடலுறவு, கண்விழிப்பு முதலியவற்றில் எத்தனை பழக்கப்பட்டிருந்தாலும் அறிவாளி அவ்வப்போதுள்ள உடல்நிலையை நன்கு கவனித்து, அவற்றை அளவுக்கு மீறிக் கையாளக் கூடாது. இவற்றையும் இவற்றை ஒத்தவற்றவையும் அளவுக்கு மீறிக் கையாள்பவன் பெரிய யானையை சண்டைக்கு இழுக்கும் சிங்கம் போல வலுவிழந்து திடீரென அழிவிற்கு உட்படுவான்.

உடல், பேச்சு, மனம் இவை களைத்துப் போகும் முன்னரே இவற்றின் பணிகளை நிறுத்திக் கொள்ள வேண்டும். இறைவனை வழிபடும்போது வேறொரு பணியில் மனத்தைச் செலுத்தாதே.

செய்ய வேண்டியதைச் சோம்பலால் தள்ளிப் போடாதே. முன்னதாகப் பரீட்சை செய்யாமல் எதிலும் ஆழ்ந்து இறங்காதே. பொறிகள் இழுக்கும் வழி செல்லாதே.

சஞ்சலமான மனத்தை மேலும் குழப்பாதே. அறிவையும் பொறிகளையும் மேலும் மேலும் சுமைகளால் அழுத்தாதே. ஒவ்வொன்றிற்கும் ஆயிரம் வழிகளைத் திட்டமிட்டு ஒருவழியிலும் செயல்படாமல் இருக்காதே. கோபமோ, மகிழ்ச்சியோ, உச்சகட்டத்திலிருந்தால், சற்று நிதானித்து அந்த சூழ்நிலையிலிருந்து

மனத்தளவில் அகன்று நின்று சிந்தித்துப் பின் செயல் புரிவாயாக. பலன் ஏற்படும் வரை முயற்சியைக் கைவிடாதே. உடல் மனவலிவைத் தளரவிடாதே.

உடலால் செய்யக்கூடிய பாவங்களாகிய இம்சை, களவு, தகாத இடத்திற்குச் செல்லுதல் என மூன்றையும், வாக்கால் செய்யக்கூடிய பாவங்களாகிய கோள் சொல்லுதல், கடினமான பேச்சு, பொய் மற்றும் முன்பின் முரணாகப் பேசுதல் எனும் நான்கையும், மனத்தால் செய்யக்கூடிய பாவங்களாகிய பிறரைப் பகைத்தல்,

பிறர் செல்வத்தைக் களவாடும் எண்ணம், படிக்கும் படிப்பைத் தவறாக அறிதல் எனும் மூன்றையும், ஆக பத்து வகையான பாவங்களையும் செய்யாதிருக்க வேண்டும்.

உண்மையே பேசுதல், கோபமடையாதிருத்தல், ஆத்ம சாதனையில் முனைவு, அமைதியான வாழ்க்கை முறை, நற்பண்பு மிளிரும் நன்னடத்தை இவைகளே சிறந்த

ரசாயனங்களாகி ஆயுளையும் ஆரோக்கியத்தையும் உடல் மனவளர்ச்சியையும் அளிக்கின்றன.

இரவு படுக்கும் முன் தினமும் சிறிது சிந்திப்போம். இன்று பகல் பொழுதையும் நேற்றிரவையும் கழித்தவிதம், இந்த நேரம் வரையில் நேரான வழியில் செய்திட்ட

பணிகள், நேர்மையற்ற வழியில் ஏற்பட்ட எண்ணங்கள், இவற்றால் ஏற்பட்ட நன்மை தீமை, உடல் மனப்பாதிப்பு இவற்றைச் சீர்தூக்கிப் பார்த்து நாளது வாழ்க்கை

முறையை இந்த அனுபவத்தின் அடிப்படையில் எவ்வகையில் அமைத்துக் கொண்டால் நன்கு அமையும் என்று சிறிது சிந்திப்போம். இந்த சிந்தனை செயல்

முறையில் தொடரட்டும். இப்படி தினம் சிந்தித்துத் திட்டமிட்டு வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்பவன் என்றும் துக்கமடையமாட்டான். இவையே சிறந்த

நெறிமுறையாகும்'' என்கிறார் இந்த நூலை இயற்றிய வாக்படர் எனும் முனிவர்.

(தொடரும்)

எஸ். சுவாமிநாதன், டீன்
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,
நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)
செல் : 94444 41771

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.