உடலின் உட்புறப் பகுதிகளில் வறட்சியும், வெளிப்புறத்தோல் பகுதியிலிருந்து அதிக வியர்வையும் ஏற்பட்டால் நெய்ப்பு என்னும் எண்ணைப் பசை உடலில் குறைந்துவிடும். வறட்சி மற்றும் வியர்வைப் பெருக்கு ஏற்படக் காரணமாக இருப்பது, உணவு மற்றும் செயல்களில் நெருப்பு - வாயு - ஆகாயம் போன்ற மகாபூதங்களின் சேர்க்கைதான். இவற்றின் வரத்து அதிக அளவில் உள்ள நிலையில் நிலம் மற்றும் நீரின் அம்சம் குறையும்போது, உடல் வேகமாக இளைக்கத் தொடங்கி, நீங்கள் குறிப்பிடும் உபாதைகளும் தோன்றக் கூடும். உட்புற வறட்சி, வெளிப்புற வியர்வை யாருக்கு அதிகரிக்கக் கூடும் என்று ஒரு பட்டியலை ஆயுர்வேதம் தயாரித்திருக்கிறது. நோய்களின் தாக்குதலால் உடல் மெலிந்தவர், மருந்துகளைத் தொடர்ந்து சாப்பிட வேண்டிய நிர்பந்தமுள்ளவர், மதுபானம் செய்பவர், மனதில் மகிழ்ச்சி இல்லாமல் சோகமாகவே இருப்பவர், கனமான சாமான்களைத் தூக்குவதால் சோர்வடைந்தவர், அதிக தூரம் நடந்து செல்பவர், இருமலால் மார்புக் கூடு பலவீனமடைந்தவர், இயற்கையாகவே உடல் வறட்சியாயிருப்பவர் போன்றவர்களுக்கு, நீங்கள் கூறும் உபாதைகள் நன்றாகத் தென்படும்.