வயோதிகத்தால் வாயு தோஷத்தின் ஆதிக்கம் இயற்கையாகவே உடலில் கூடுகிறது. வாயு தோஷத்தின் ஆதிக்கக் குணங்களாகிய வறட்சி, லேசு, குளிர்ச்சி, நுண்ணியது, நகரும் தன்மை போன்றவை நரம்புகளில் வளர்ச்சியடைவதால்தான், தோல் சுருக்கம், எலும்புகள் துருத்திக் கொண்டு காணுதல், கூன் விழுதல், நடைத் தடுமாற்றம், மந்தமான பசி, புலன்களின் வலு குறைதல், தூக்கமின்மை போன்றவை ஏற்படுகின்றன. இவற்றுக்கு நேர் எதிரான நெய்ப்பு, கனம், சூடு போன்றவை மருந்தாகவும், உணவாகவும், செயலாகவும் கொண்டு வந்தால், வலி உங்களுக்குக் குறைந்துவிட வாய்ப்பிருக்கிறது. அந்தவகையில் க்ஷீரபலா 101 எனும் கேப்ஸ்யூல் மருந்து உங்களுக்குப் பயனளிக்கலாம். வெதுவெதுப்பான அரை டம்ளர் பாலில் 2 கேப்ஸ்யூல், காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிடவும்.