சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

ஆயுள்காக்கும் ஆயுர்வேதம்: வயதான காலத்தில் வாயு தடை!

எனக்கு வயது 82. காலையில் படுக்கையிலிருந்து எழும்போது உடலோடு கால்களை நிமிர்த்தி சோம்பல் முறிக்கும்போது, முழங்கால் பகுதிக்குக் கீழே சதைக்குள் கடுமையான வலி ஏற்படுகிறது. ஓரிரு நிமிடங்கள் வலி நிவாரணத் தைலங

News image
Updated On :2 ஜனவரி 2024, 7:00 pm

எஸ். சுவாமிநாதன்

எனக்கு வயது 82. காலையில் படுக்கையிலிருந்து எழும்போது உடலோடு கால்களை நிமிர்த்தி சோம்பல் முறிக்கும்போது, முழங்கால் பகுதிக்குக் கீழே சதைக்குள் கடுமையான வலி ஏற்படுகிறது. ஓரிரு நிமிடங்கள் வலி நிவாரணத் தைலங்களைத் தேய்த்தே பிறகே வலி குறைந்து சாதாரண நிலைக்கு வருகிறது. தாங்கிக் கொள்ள முடியாத வலிக்குக் காரணம் என்ன? ஆயுர்வேத சிகிச்சை முறை என்ன?

வி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி,

வரட்டணப்பள்ளி.

முதுமையில் உணவைக் கட்டுப்படுத்துவது அவசியம். மந்தமானதும் கனத்த பொருளும் ஜீரணமாகாது. ஜீரணமானாலும் உள்ளே சேராது. மலப் பொருளாக அதிகம் வெளியேறும். உடலைக் கனக்கச் செய்யும். வயிற்றில் காற்று, மலம், இவற்றின் அசைவைத் தடை செய்யும். முன்போல் உடல் உழைக்க மறுப்பதால், உழைப்பு குறையும். உழைப்பின்மையால் உணவின் அளவு அதிகமாகத் தேவை இராது. நாப் பழக்கம், சபலம் காரணமாக, அதிகமாக சாப்பிட்டால் உடல் கனத்து முதுமை நோய்கள் எளிதில் ஏற்படக் காரணமாகும். அதனால் எளிதில் செரிக்கக் கூடிய, வாயுத் தடை செய்யாத, மலச்சிக்கலை ஏற்படுத்தாத உணவை உண்பது நல்லது.

வயோதிகத்தால் வாயு தோஷத்தின் ஆதிக்கம் இயற்கையாகவே உடலில் கூடுகிறது. வாயு தோஷத்தின் ஆதிக்கக் குணங்களாகிய வறட்சி, லேசு, குளிர்ச்சி, நுண்ணியது, நகரும் தன்மை போன்றவை நரம்புகளில் வளர்ச்சியடைவதால்தான், தோல் சுருக்கம், எலும்புகள் துருத்திக் கொண்டு காணுதல், கூன் விழுதல், நடைத் தடுமாற்றம், மந்தமான பசி, புலன்களின் வலு குறைதல், தூக்கமின்மை போன்றவை ஏற்படுகின்றன. இவற்றுக்கு நேர் எதிரான நெய்ப்பு, கனம், சூடு போன்றவை மருந்தாகவும், உணவாகவும், செயலாகவும் கொண்டு வந்தால், வலி உங்களுக்குக் குறைந்துவிட வாய்ப்பிருக்கிறது. அந்தவகையில் க்ஷீரபலா 101 எனும் கேப்ஸ்யூல் மருந்து உங்களுக்குப் பயனளிக்கலாம். வெதுவெதுப்பான அரை டம்ளர் பாலில் 2 கேப்ஸ்யூல், காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிடவும்.

நரம்புகளின் வலுவைக் கூட்டும் தொடர்ந்து சாப்பிடக் கூடிய நல்ல ஒரு மருந்தாகும் இது. இதில் அடங்கியுள்ள நெய்ப்பும், கனமும், கால் நரம்புகளில் குடி கொண்டுள்ள வாயுவின் வறட்சியையும், லேசான தன்மையையும் மாற்றி நரம்புகளுக்கு வலுவூட்டுவதால், அவை சென்றடையும் தசைப் பகுதிகளிலுள்ள வலியைக் குறைத்து நாளடைவில் குணமாக்கிவிடும்.

உட்புறத்திலிருந்து நரம்புகளின் வலுவைக் கூட்டுவதைப் போல, வெளிப்புற மூலிகை எண்ணெய் தேய்ப்பு முறையாலும், வலுப்படுத்தலாம். மஹா மாஷ தைலம், பலா அஸ்வகந்தாதி, வாதமர்தனம் குழம்பு போன்றவற்றில் ஒன்றை வெதுவெதுப்பாக இடுப்பிலும், கால்களிலும் தேய்த்து நீவிவிட்டு, சுமார் 1/2 - 3/4 மணி நேரம் ஊறிய பிறகு, வெந்நீரில் குளித்து அன்றைய தினம் மிளகு ரசம், கருவேப்பிலைத் துவையல், சுட்ட அப்பளம், மோர் என்ற வகையில் சூடான சாதத்துடன் சாப்பிட, கால் நரம்புகள் வலுப்படும்.

அதிக நேரம் நின்று கொண்டே வேலை செய்வது, குளிர்ந்த தரையில் கால் பதித்து நிற்பது, குளிர்ந்த நீரில் நீராடுவது, உட்கார்ந்திருக்கும்போது தொடை கால்களை ஆட்டிக் கொண்டே பேசுவது, கால் மேல் கால் போட்டு அமர்வது, போதிய அளவு கால்களுக்கு ஓய்வு கொடுக்காமல் நடப்பது போன்ற செயல்களைத் தவிர்க்க வேண்டும்.

உணவில் காரம், கசப்பு, துவர்ப்புச் சுவையைக் குறைத்து இனிப்பு, புளிப்பு, உப்புச் சுவையை மிதமாகச் சேர்க்கலாம். வெதுவெதுப்பான நிலையில் உணவைச் சாப்பிட்டால் அதன் செரிமானம் குறித்த நேரத்தில் ஏற்பட்டு, உணவுச் சத்து உடலில் நன்றாகச் சேரும். உணவுக்குப் பிறகு சிறிது வெந்நீர் அருந்துவதும் நலமே. மாதமிருமுறை லகுவான பேதிக்கு விளக்கெண்ணெய் சுமார் 10 - 15 மி.லி. காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால், குடல் பகுதியில் தேவையில்லாத வாயுவின் சேர்க்கையை பேதி மூலமாக நீக்கிவிடலாம். கந்தர்வஹஸ்தாதி ஆமணக்கு எண்ணெய் மருந்தை இதற்குப் பயன்படுத்தலாம். ஆயுர்வேத மருந்துக் கடைகளில் கிடைக்கும்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.