"அக்னிமாந்த்யம்' என்று ஓர் உபாதை இருக்கிறது. அக்னி என்றால் பசி என்னும் நெருப்பு. மாந்த்யம் என்றால் மந்தமாகயிருத்தல் என்று அர்த்தம். குடல் அறுவைச் சிகிச்சையினால், பசியைத் தூண்டும் நெருப்பானது, குறைந்த அளவில் வேலை செய்தால், 8 வயதானாலும் 5 வயதுக்கான வளர்ச்சிதான் குழந்தைகளுக்குத் தென்படும். கொழுப்புச் சத்துள்ள ஆட்டுப் பால், பசுவின் பால், தயிர், வெண்ணெய், வெந்தயம் போன்றவற்றை உணவாகக் கொடுத்தால், அக்னிமாந்த்யம் நீங்கி பசி நன்றாக ஏற்படும். அதுபோலவே கொத்துமல்லி, கருவேப்பிலை முதலியவற்றைத் துவையலாக அரைத்து அதைக் கொண்டு சிறிதளவு அன்னம் சாப்பிட்டு,மேல் நன்கு கடைந்த மோர் கருவேப்பிலை போட்ட அன்னம் சாப்பிட உங்கள் மகனை நீங்கள் பழக்க வேண்டும். சாம்பார், ரசம், அதிக மசாலா உள்ள கறி கூட்டு, எண்ணெய்ப் பொரியல்கள் இவற்றைத் தவிர்க்கவும். உணவுச் சத்து உடலில் சேர உதவி செய்யும் கொத்துமல்லி, கறிவேப்பிலை, ஜீரண உறுப்புகளின் சக்தியையும் தூண்ட உதவுபவை. மேலும் புதினாத் துவையல், புளியாரைக் கீரைத் துவையல், நாரத்தை இலைப்பொடி இவற்றில் ஒன்றுடன் நெய் சேர்த்துச் சில கவளங்கள் சாப்பிடுவதும் நல்லதே. இதனால் என்ன நன்மை? செரித்த உணவு குடலில் வெகுவேகமாகச் சென்று உணவுச் சத்து உடலில் சேராமல் அப்படியே வெளியேறுவதை இந்த உணவுத் திட்டம் ஓரளவு தடுக்கும். எளிதில் செரிக்கக் கூடிய கறிகாய்களை வேக வைத்து, மசால் பொருட்கள் சேர்க்காமல் சிறிது மிளகு, சீரகக் தூள் சேர்த்துக் கூட்டாக்கி துணைப் பொருளாகக் கொள்வதும் நல்லது.