பொம்பளை என்றால் தப்பா? - பிழையற்ற தமிழ் அறிவோம்! - 62
வாபஸ், விரதம், நோன்பு, கடைப்பிடிக்க, கடைபிடிக்க பற்றி...


வாபஸ் - இதற்கு தமிழ்ச் சொல் என்ன?
'உண்ணாவிரதம் வாபஸ்' என்று செய்தித்தாளில் படிக்கிறோம். இது சரிதானா? வாபஸ் என்பது திரும்பப் பெறுதல். ஒருவர் ஒரு விண்ணப்பம் அளிக்கிறார். பின் வேண்டாம் என்று அதனைத் திரும்பப் பெறுகிறார். இது வாபஸ். உண்ணாவிரதத்தை - பட்டினி கிடந்ததைத் திரும்பப் பெற முடியுமா? இனி உண்ணாவிரதம் இல்லை என்பதுதானே நிலை! ஆதலின் உண்ணாவிரதம் நிறுத்தப்பட்டது அல்லது நிறுத்தம் என்று எழுதுதல் பொருந்தும். விரதம், தமிழ்ச் சொல் அன்று. அதனால் உண்ணாநிலை என்று சிலர் சொல்கிறார்கள். நோன்பு தூய தமிழ்ச் சொல்லாயிற்றே. உண்ணா நோன்பு என்று உரைக்கலாமே! நோன்பு, நோற்றல் - தமிழ்ச் சொற்கள்.
சொல்லாட்சிக் குறைபாடுகள்
சில நாட்களுக்கு முன் காலமான 'அறிஞர் அண்ணாவின் வளர்ப்பு மகன் பரிமளம்...' என்று ஒரு தொடர் சிற்றிதழ் ஒன்றில் பார்த்தோம். இச்சொற்றொடரில் சொற்கள் ஆளப்பட்டுள்ள முறைமை சரியா?
சில நாட்களுக்கு முன் காலமானவர் பரிமளம்; இவர் அறிஞர் அண்ணாவின் வளர்ப்பு மகன். ஆனால் அறிஞர் அண்ணா சிலநாட்கள் முன் காலமானவர் என்பது போன்ற செய்தியைத் தரும் இத் தொடரமைப்பு பிழை. பின்னர் எப்படி இவ்வாக்கியத்தை அமைக்கலாம்?
"அறிஞர் அண்ணாவின் வளர்ப்பு மகனும் சில நாட்கள் முன்னர் காலமானவரும் ஆன பரிமளம்...'' என்று தெளிவாக எழுதலாமே!
பேச்சு வழக்கிலுள்ள சில சொற்களை நாம் இந்நாளில் பிழையாக - கொச்சையாகக் கருதுகிறோம். எடுத்துக்காட்டாக 'அந்தப் பொம்பளை செய்த வேலை' எனும் தொடரில் பொம்பளை என்னும் சொல் ஒருவரை அவமதிப்பதாகக் கருதுகிறோம். அந்த அம்மா என்றோ, அந்தப் பெண்மணி என்றோ சொன்னால், யாரும் சினம் கொள்வதில்லை (யாரய்யா பெண்மணி, அம்மா என்றெல்லாம் சொல்லுகிறார்கள். எல்லாரும் மேடம்தான். அதுவும் போய் 'மேம்'). பொம்பளை என்றால் திட்டுவதாகக் கொள்ளுகிறார்கள்.
பெண் பிள்ளை என்னும் சொல்தான் பொம்பளை என்று மருவிற்று. ஆண்பிள்ளை ஆம்பளை ஆயிற்று. ஆண்பிள்ளை, பெண்பிள்ளை என்றுரைத்தால் யாரும் சினம் கொள்ளார். 'பொம்பளே' என்று சொன்னால் போதும், 'அது எப்படி என்னை அந்தப் பொம்பளைன்னு சொல்லலாம்' என்று எவரும் வம்புக்கு வருவார்கள். ஆனால், 'அவன் ஆம்பளைடா' என்றால் யாரும் சினம் கொள்ளுவது இல்லை. மாறாக, ஆம்பளை என்று குறிப்பிட்டால் பெருமையாகவே கருதுகிறார்கள் (சரியான ஆம்பளைடா அவன்!).
ஒரு நிகழ்ச்சிக்கு வருதல் குறித்தோ, ஒரு செயலைச் செய்து முடிப்பது குறித்தோ பேசும்போது, பலர் கண்டிப்பாக எனும் சொல்லை ஆளுகிறார்கள். இது 'ஷியூர்' என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு நிகரானது என்று கருதிச் சொல்லப்படுகிறது.
ஒருமை,பன்மை மயக்கங்கள்
'காலாண்டுத் தேர்வுகள் தொடங்கியது' இப்படி ஒரு செய்தி. அது எப்படி இப்படி ஒரு தவறு அடிக்கடி நிகழ்கிறது? ஆங்கிலச் செய்தி இப்படி வருமா? தேர்வுகள் தொடங்கின என்றுதானே சொல்ல வேண்டும்?
'சிக்கிமில் பூகம்பத்தால் ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்தது' என்று செய்தி படிக்கிறார்கள். வீடுகள் இடிந்து விழுந்தன என்று சொல்ல வேண்டும் என்ற எண்ணமே இல்லை. சிறிய சிறிய தவறுகள்தாம்; இவற்றைக்கூட திருத்திக் கொள்ள மனமில்லையே.
"என் வாழ்க்கையில் எனக்குக் கிடைத்த வெற்றி, திருப்புமுனைகள் எல்லாமே அவரால்தான் கிடைத்தது'
இப்படி ஒரு வாக்கியத்தைப் படிக்க நேர்ந்தது. எல்லாமே என்ற பன்மைக்கேற்ப, கிடைத்தன என்று பன்மையில் முடிக்க வேண்டும். அவரால்தாம் கிடைத்தன என்று எழுதினால் இன்னம் சரி (அவர்தாம் - அவன்தான்).
ஒருமை பன்மை மாறிவர வாக்கியம் அமைப்பதுபோல் மற்றொரு பிழை ஒற்றெழுத்து விட்டுவிடுதலாகும்.
'சத்தியம் என்பது இவ்வுலகில் கடைப்பிடிக்க வேண்டியது' இத்தொடரில் கடைப்பிடிக்க வேண்டியது என்று வல்லொற்று (ப்) வர வேண்டும். கடைப் பிடிக்க என்றால் ஒரு கடையை குடிக்கூலிக்கு (வாடகைக்குப்) பிடிக்க என்று பொருள்.
வாக்கிய அமைப்பில் தெளிவு இருத்தல் வேண்டும். ஓரிதழில் நாம் படித்ததொரு வாக்கியம்:
"நமக்கு எதையெல்லாம் பிறர் செய்யக் கூடாது என்று நினைக்கிறோமோ அதையெல்லாம் நாம் பிறருக்கும் செய்யக் கூடாது'.'
இச்சொற்றொடரை 'எவையெல்லாம் பிறர் நமக்குச் செய்யக் கூடாது என்று நினைக்கிறோமோ அவையெல்லாம் பிறர்க்கு நாம் செய்யக் கூடாது' என்று மாற்றிப் பாருங்கள். ஒரு தெளிவு இருக்கும். (எவற்றையெல்லாம் - அவற்றையெல்லாம் என்று எழுதினால் இலக்கணம் பிறழாது; ஆனால் கடினமாகத் தோன்றும்).
(தமிழ் வளரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...