/

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: நோயாளிகளைக் கவனிக்க...

பக்கவாதம் ஏற்பட்டு படுக்கையில் கிடக்கும் என் கணவருக்கு அருகில் இருந்து அவருடைய தேவைகளை நிறைவேற்ற வேண்டிய கட்டாய நிலையில் நான் இருக்கிறேன். மலம், சிறுநீர் ஆகியவற்றை அப்புறப்படுத்துவது, உடலைத் தண்ணீரால்

News image
Updated On :28 டிசம்பர் 2023, 5:28 pm

எஸ். சுவாமிநாதன்

பக்கவாதம் ஏற்பட்டு படுக்கையில் கிடக்கும் என் கணவருக்கு அருகில் இருந்து அவருடைய தேவைகளை நிறைவேற்ற வேண்டிய கட்டாய நிலையில் நான் இருக்கிறேன். மலம், சிறுநீர் ஆகியவற்றை அப்புறப்படுத்துவது, உடலைத் தண்ணீரால் துடைத்துச் சுத்தம் செய்வது, தூக்கி உட்கார வைத்து உணவை ஊட்டுவது போன்ற வேலைகளைச் செய்வதால் என் உடல் பலவித உபாதைகளால் பாதிக்கப்படுகிறது. நான் திடகாத்திரத்துடன் இருந்து அவரைப் பாதுகாக்க வழிகள் எவை?

 -விமலா, சென்னை.

 இதுபோன்ற ஒரு நிலையை ஸýச்ருதர் எனும் முனிவர், தான் இயற்றிய ஸýச்ருத சம்ஹிதை எனும் ஆயுர்வேத நூலில் குறிப்பிட்டிருக்கிறார். அவர் கூறும் கருத்து-

 ப்ரஸங்காத் காத்ரசம்ஸ்பர்ஸôத்- நோய்வாய்ப்பட்டவரின் உடலை அடிக்கடி தொட நேர்வது,

 நிஷ்வாஸôத்- அவர் விடும் மூச்சுக் காற்றை சுவாசிக்க நேர்வது,

 ஸஹபோஜனாத்- அவருடைய இருப்பிடத்தின் அருகிலேயே அமர்ந்து உணவைச் சாப்பிட வேண்டிய நிலை,

 ஸஹசய்யாஸனாத்- அவர் அருகிலேயே படுத்துக் கொள்வது, அமர்ந்து கொள்வது

 வஸ்த்ராமால்யானுலேபனாத்- அவர் அணிந்துள்ள துணி, கழுத்திலுள்ள செயின், உடலில் பூசப்படும் மருத்துப் பூச்சுகள் ஆகியவற்றைத் தொட நேர்வது,

 போன்ற செயல்களால், உதவியாளருக்குத் தோல் உபாதைகள், காய்ச்சல், காசநோய்,கண்நோய் மற்றும் வேறு பல ஒட்டுவாரொட்டிகளாகிய நோய்கள் தாக்கக்கூடும்.

 ஸýச்ருதர் கூறும் இந்தக் கருத்தை நாம் மறுக்க இயலாது. இதுபோன்ற நிர்பந்தங்களுக்கு ஆளாகக் கூடியவர்கள், நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொள்வதில் முனைப்புடன் செயல்படவேண்டும்.

 அடிக்கடி நோயாளியைத் தொட வேண்டிய கட்டாயம் உங்களுக்கு இருப்பதால், கைகளிலிருந்து கிருமித் தொற்று அவரிடமிருந்து உங்களுக்கோ, உங்களிடமிருந்து அவருக்கோ வராமலிருக்க, தற்சமயம் விற்பனைக்கு வந்துள்ள கைகளைக் கழுவும் கிருமிநாசினியான திரவங்களில் ஒன்றை நீங்கள் பயன்படுத்துவது மிகவும் நல்லது.

 மூச்சுக் காற்றின் வழியாக அவரிடமிருந்து உங்களுக்குக் கிருமித் தொற்று ஏற்படாமலிருக்க, மூக்கின் வழியாக உறிஞ்சி, வாய் வழியாகக் காறித் துப்பிவிடும் ஆயுர்வேத மூலிகை மருந்தாகிய குங்குமாதி தைலத்தையோ, அணு தைலத்தையோ காலை இரவு பல் தேய்த்த பிறகு விட்டுக் கொள்ளவும். நோய் எதிர்ப்பு சக்தி இந்த மூலிகைத் தைலங்களால் உங்களுக்கு ஏற்படக் கூடும்.

 தெற்குப் பகுதியில் அமைந்துள்ள ஜன்னல்களின் வழியாக காற்று உள்ளே வந்து, வடக்குப் பகுதியிலுள்ள வீட்டு வாசல் வழியாக வெளியேறும்படியான வகையில் அவர் தங்கியிருக்கும் அறையானது அமைந்திருப்பது மிகவும் நல்லது. இதனால் அறையினுள்ளே கெட்ட காற்று, துர்வாடை போன்றவை தவிர்க்கப்படலாம். தலையைச் சுத்தப்படுத்தும் கிருமிநாசினித் திரவங்களில் ஒன்றை அளவோடு தண்ணீரில் கலந்து ஒரு நாளில் 3-4 முறை துடைத்து விடுவதும் நல்லதே. இதனால் சாப்பிடுவது, அமர்வது, உறங்குவது போன்ற செயல்களை நீங்கள் தைரியத்துடன் கடைப்பிடிக்கலாம்.

 ஏலாதி தைலம் அல்லது நால்பாமராதி தைலம் ஆகியவற்றில் ஒன்றை வாரம் இருமுறை உடலெங்கும் தேய்த்து சுமார் 3/4 - 1 மணி நேரம் ஊறிக் குளித்து வர, தோலின் வழியாக ஏற்படும் கிருமித் தொற்றுகளின் பாதிப்புகளைத் தவிர்க்கலாம். தோலின் வலிவு, நிறம், நோய் எதிர்ப்பு சக்திகள் நன்றாக வளரும். இந்தத் தைலத்தின் பிசுக்கை அகற்ற ஏலாதி சூரணத்தைப் பச்சைப் பயறு மாவுடன் கலந்து, தண்ணீர் விட்டுக் குழப்பித் தளர்த்தி உடலெங்கும் பூசிக் குளிக்கலாம். நோய் எதிர்ப்பு சக்தியை இந்தச் சூரணமும் வளர்த்துத் தரும்.

 மேலும் கருணை, ஈகை, நல்லொழுக்கத்தில் ஈடுபாடு, பொறுமை, மகான்களின் சரிதம் கேட்டல், புலனடக்கமுள்ள தேவர்கள், முனிவர்களின் வழிபாடு, இயற்கை மாறாத சூழ்நிலை, நல்லோரிணக்கம், தெய்வ வழிபாடு, நற்செய்கைகள் ஆகியவை இந்நிலையில் உங்களுடைய வாழ்க்கைக்கு இன்றியமையாத சாதனங்களாகும்.

 (தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.