சோற்றுக் கற்றாழை வீர்யத்தில் குளிர்ச்சியானது. கசப்பும் இனிப்பும் கலந்து சுவை கொண்ட அதனை உள்ளுக்குச் சாப்பிட்டால் நல்ல ஒரு மலமிளக்கியாகச் செயல்படும். சளித் தொல்லையால் ஏற்படும் காய்ச்சலுக்கு காற்றாழைச் சோறு சாப்பிட விரைவில் காய்ச்சல் குணமாகும். பித்த ரத்தங்களால் ஏற்படும் தோல் எரிச்சல், புகைச்சல், சூடு, சிவப்புக் கொப்பளங்களில் வெளிப்பூச்சாகப் பூச, நல்ல ஒரு கிருமி நாசினியாகவும், சூட்டைத் தணிக்கும் மருந்தாகவும் பயன்படும். அதிலிருந்து தயாரிக்கப்படும் மூலிகைத் தைலத்தைத் தலையில் தேய்த்துக் குளித்தால், கண்களுக்கு மிகவும் நல்லது. விஷங்களை முறிக்கும் சக்தி கொண்டது. உடல் நரம்பு வலியைப் போக்கும். கற்றாழையை முக்கிய மருந்தாகக் கொண்டு தயாரிக்கப்படும் குமார்யாஸவம் காலை, இரவு உணவுக்குப் பிறகு சாப்பிட, உடல் புஷ்டி, இளமையான தோற்றம், உடல் வலு, நிறம், பசி ஆகியவை மேம்படும். ஆண்களுக்கு போக சக்தியை வளர்க்கும் என்று கைய தேவ நிகண்டுவில் காணப்படுகிறது.