நெய்ப்புக்கு எதிரான வறட்சி, குளிர்ச்சிக்கு எதிரான சூடு, கனத்திற்கு எதிரான லேசு, மந்தத்திற்கு எதிரான கூர்மை, மழமழப்புக்கு எதிரான முறமுறப்பு, கொழகொழப்புக்கு எதிரான சுரசுரப்பு ஆகிய குணங்களை மருந்தின் மூலமாகவும், வேகமான நடைப் பயிற்சி, இனிப்புச் சுவையை உணவில் நிறுத்துதல், கொடிக்காய்களை அதிகம் சேர்த்தல், பகல் தூக்கம் தவிர்த்தல்போன்றவற்றின் மூலமாக நாம் பெரும் முயற்சி செய்யும்போது சர்க்கரையின் அளவு உடலில் குறைகிறது. ஆனால் இந்தக் குணங்களின் ஆதிக்க தோஷங்களாகிய வாத - பித்தங்கள் கூடுவதை நம்மால் கணிக்க முடிவதில்லை. இந்த இருதோஷங்களின் வளர்ச்சியால் உடல் எடை குறைதல், எலும்புகளின் வலு குறைதல், வயிற்றில் புண் ஏற்படுதல், எந்நேரமும் உடல் சோர்வாகவே இருத்தல், ஒருவிதமான மயக்கநிலை, சிந்தனைச் சோர்வு, குடலில் வாயு அதிகமாகி மலச்சிக்கல் ஏற்படுதல், சிறுநீர் தேன் போன்ற நிறத்தில் வெளியேறுதல், உடல் அசதி போன்ற பல உபாதைகளால் பாதிக்கப்படுகிறோம்.