பால் தரும் தாயின் மார்புக் காம்பு வெடித்துப் புண் உள்ள நிலையில் குழந்தை வாய் வைத்துக் குடிக்கும்போது புண் வரலாம். மார்புக் காம்பு ரணம் ஆறுவதற்குக் கடுக்காய்த் தோல், மஞ்சள் கிழங்கு இரண்டையும் சேர்த்துக் காய்ச்சிய தண்ணீரால் புண்ணை அலம்ப வேண்டும். இதைச் சூடாய் வைத்துக் கொண்டு, நனைத்துப் பிழிந்த பஞ்சினால் சில நிமிடங்கள் ஒத்தடம் கொடுப்பது நல்லது. மார்புக் காம்பிலிருந்து கெட்ட ஊன் நீர் கசிந்து கொண்டிருந்தால், திரிபலா எனப்படும் கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் தோல்களின் சூரணம், வெள்ளை சந்தனத்தின் சூரணம், பொடித்த படிகாரத்தின் சூரணம், மஞ்சளின் சூரணம் இவற்றைக் கலந்து புண்ணின் மேல் தூவிவிட்டு, பஞ்சை அதன்மீது வைத்துக் கட்டிக் கொள்ள வேண்டும். ஊன் நீர்க் கசிவு நின்ற பிறகு, இந்தச் சூரணங்களையே முதலில் இரண்டு நாட்கள் தேனில் குழைத்துப் பூசவும். பிறகு தேங்காய் எண்ணெய்யில் குழைத்துப் பூசவும். புண்கள் ஆறிவிடும். மஞ்சள் சேர்த்துக் காய்ச்சிய தேங்காய் எண்ணெய்யை மார்புக் காம்பில் தடவிக் கொண்டிருந்தால் வெடிப்பு மறுபடியும் வராமல் பார்த்துக் கொள்ளலாம்.