இந்த உபாதைக்கு "குல்மம்' என்று ஆயுர்வேதம் பெயரிட்டுள்ளது. காய்ச்சல், பேதி முதலிய உபாதைகளால் உடல் வாட்டமடைந்து அதனால் உடல் பலம் அதிலும் முக்கியமாக பசி எடுக்கும் தன்மை மிகவும் குறைந்திருக்கும் நிலையில், அதை உதாசீனப்படுத்தி, அதற்கு ஏற்றபடி உணவைச் சாப்பிடாமல், வாயுவை அதிகரிக்கச் செய்யும் வேர்க்கடலை, கொண்டைக் கடலை, மிக்ஸர், வறுத்த பருப்பு வகைகளைச் சாப்பிடுதல், நல்ல பசியுள்ள சமயத்தில் வெறும் வயிற்றில் குளிர்ந்த தண்ணீரை நிறையக் குடித்தல், உணவைச் சாப்பிட்டதும் ஓய்வின்றி உடலை வருத்தும்படியான அளவில் வேலை செய்தல், தானாகவே வெளியே வரும் ஏப்பம், வாந்தி, மலம், சிறுநீர், குடல்காற்று போன்றவற்றை வலுக்கட்டாயமாக அடக்குதல், ஆசிரியரிடம் பயிற்சி பெறாமல், வெறும் புத்தகம் அல்லது தொலைக்காட்சி பார்த்து பிராணாயாமம், மூச்சை அடக்கும் பயிற்சிகளைச் செய்தல், கொலஸ்ட்ரால் வந்துவிடும் என்று பயந்து கொண்டு நெய், பால் முதலியவை சேர்க்காமல் தனி வறட்சியான உணவுவகைகளைச் சாப்பிடுதல் போன்ற காரணங்களால் தாதுக்கள் வறட்சி அடைந்து குடலில் வாத தோஷம் சீற்றம் அடைகிறது. இது போதாதென்று பித்த கபங்களைத் தூண்டும் பேல்பூரி, சமோஸô, காரமான பொருட்கள், உளுந்து சேரும் இட்லி, தோசை போன்றவை அதிகம் சாப்பிடுதல் போன்றவற்றால் கப பித்தங்களும் வளர்ந்து குடலில் குறிப்பிட்ட இடத்தில் இரு பக்கத்திலும் அடைத்துத் தாங்குகின்றன. இதனால் வாயு நகர முடியாமல் ஒரு குறிப்பிட்ட சிறு இடத்தில் ஒடுக்கப்படுகிறது. அதுதான் உங்களுக்கு காற்றடைத்த பந்துருண்டை போல ஒரு சிறு கொத்தான உருவமாகத் தென்படுகிறது. நடுவில் வாயு தங்கி, சுற்றியும் கப, பித்தங்கள் அடைத்துக் கொண்டிருப்பதால், திடீரென்று சூலக்குத்து வலியை உண்டாக்குகிறது.