இதுபோன்ற மப்பு நிலையில் மருந்து சாப்பிட்டால் அதுவும் பட்சணத்துடன் கலந்து சீரணமாகாமல் கிடக்கும். எப்படிச் சாம்பலின் உள்ளே உள்ள நெருப்பினால், அண்டாவில் உள்ள தண்ணீர் சூடாகாதோ, அதுபோல கெட்டுப் போன பட்சணத்தால் பதனழிந்து போன கப பித்தங்களால் மறைக்கப்பட்டுள்ள பசித் தீயால், அவற்றையே செரிக்க முடியாமல் கிடக்கும்போது, அதன் மேலே மருந்தைப் போட்டால் எப்படிச் செரிக்கும்? சாம்பலை ஊதி, அதன் மேல் சிராத்துள், வரட்டி, மண்ணெண்ணெய் விட்டுத் தீயை வளர்த்த பிறகு, விறகு போட்டு நெருப்பைப் பெரிதாக்கி, அதன் மேல் அண்டாவை வைத்து தண்ணீர் ஊற்றி வெந்நீர் போடுவதை நீங்கள் கிராமங்களில் பார்த்திருக்கலாம். அதுபோல, பசித்தீயின் மீது படர்ந்திருக்கும் சாம்பல் போன்ற படிவங்களாகிய தோஷங்களையும், கெட்டுப் போன பட்சணங்களையும் நீக்கினால்தான், அடியிலுள்ள பசித்தீ வெளிப்படும்.