திரைக்கதிர்: ஆட்டைப் பிடிச்சு பாலைக் கறந்து...
தூத்துக்குடி', "மதுரை சம்பவம்' படங்களை அடுத்து ஹரிகுமார் நடிக்கும் படம் "போடி நாயக்கனூர் கணேசன்'. தேனி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. படம் குறித்து ஹரிகுமாரிடம்


தூத்துக்குடி', "மதுரை சம்பவம்' படங்களை அடுத்து ஹரிகுமார் நடிக்கும் படம் "போடி நாயக்கனூர் கணேசன்'. தேனி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. படம் குறித்து ஹரிகுமாரிடம் பேசியபோது, ""என் முந்தைய படங்களைப் போல இந்தப் படத்திலும் வலுவான திரைக்கதை உள்ளது. முரட்டுத்தனமாக சுற்றித் திரியும் எனக்கு, ஹீரோயின் அருந்ததி மீது காதல் பிறக்கிறது.
"தூத்துக்குடி' படத்தில் பாடல்களுக்கு முக்கியத்துவம் தரப்பட்டது போல் இந்தப் படத்தின் பாடல்களுக்கும் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. ""முரட்டு மச்சான்...'' என்ற பாடல் சமீபத்தில் படமாக்கப்பட்டது. இதற்காக 150 ஆடுகளை வாங்கி, வயல் வெளியில் மேயவைத்து படம்பிடித்தோம். புளியம்பழத்தில் ஆட்டுப்பாலை கலந்து அதை அருந்ததிக்குக் கொடுப்பது போலவும், அதை அவர் குடிக்கும் காட்சியும் படமாக்கப்பட்டது.
இதற்காக நிஜமாகவே ஆட்டைப் பிடித்து பால் கறக்க முடிவு செய்தோம். ஆனால் ஆடு மிரண்டு ஓடியது. இதனால் இந்த காட்சியைப் படமெடுப்பதற்குப் பல மணிநேரம் ஆனது. கடைசியாக ஆட்டை பிடித்து காட்சியைப் படமாக்கினோம்'' என்றார்
ஹரிகுமார்.
குரு காணிக்கை!
"பசங்க' படம் தேசிய விருது பெற்ற செய்தியைத் தன் குருவான அமீரிடம் சசிகுமார் பகிர்ந்து கொள்ளவில்லை. முதலில் இருந்த மதிப்பு அமீர் மீது இப்போது இல்லை என அமீர், சசிகுமார் பற்றிய தகவல்களுக்குப் பஞ்சமில்லை. இவற்றுக்கெல்லாம் தன்னுடைய "ஈசன்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் முற்றுப்புள்ளி வைத்தார் சசிகுமார். ""அமீரை நான் மதிக்கவில்லை எனச் சிலர் சொல்லுகிறார்கள்.
அவரிடம் சிலர் கேட்ட போதும் ""தேசிய விருது பெற்றதை சசிகுமார் என்னிடம் சொல்லவில்லை'' என்றார். "ஈசன்' படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கான அழைப்பிதழை அவரிடம் கொடுக்க செல்லும்போது கூட தேசிய விருது பற்றிய மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளவில்லை. இதை எதற்கு அவரிடம் சொல்லவேண்டும். நிச்சயம் சொல்ல வேண்டியதில்லை. தில்லியில் தேசிய விருது பெற்று வெளியில் வந்ததும் என்னிடம் பேட்டி எடுத்தார்கள்.
""இந்த விருதை என் குருநாதர்கள் பாலாவுக்கும், அமீருக்கும் காணிக்கை ஆக்குகிறேன்'' என்று சொன்னேன். காணிக்கை ஆக்கிய விருதை நான் வாங்கியதாக எப்படி அவரிடம் சொல்லுவது? அதுதான் இதுவரை எந்த விஷயத்தையும் அவரிடம் சொல்லவில்லை'' என்றார்.
உடலும் உள்ளமும் நலம்பெற!
மும்பையில் "ஸ்பா' என்ற உடல் நல சிகிச்சை மையக் கிளையை தொடங்கி இருக்கிறார் ஸ்ரேயா. ""டெல்லியில் படித்தபோதே அருகில் இருந்த பார்வையற்றோர் பள்ளிக்குச் செல்வேன். அப்போது என்னால் முடிந்த உதவிகளைச் செய்வேன். அவர்களின் தன்னம்பிக்கை என்னை பிரமிக்க வைக்கும். இப்போது அவர்களுக்கு என்னால் எப்படி உதவ முடியும் என யோசித்தேன்.
அதன் பலனாகத்தான் மும்பையில் "ஸ்பா' உடல் நல சிகிச்சை மையக் கிளையைத் தொடங்கினேன். இதில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் வேலைக்கு அமர்த்தப்படுகின்றனர். உடல் உபாதைகள் நீங்குவதற்கான சிகிச்சைக்கு இங்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
இதற்காக மாற்றுத் திறனாளிகளுக்குச் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கான கருவிகளை பயன்படுத்துவதற்கான பயிற்சிகளும் அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே என் அம்மா நடத்தி வரும் சேவை அமைப்பு மூலமாகவும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிகள் செய்து வருகிறேன்'' என்றார் ஸ்ரேயா.
உண்மையான பாலாவின் வார்த்தைகள்!
"மைனா' படம் பார்த்த அனைவராலும் மறக்க முடியாத கேரக்டர் ஜெயிலர் பாஸ்கர். காதல் கதையாக, காதலர்களின் கதையாக தொடங்கும் மைனாவை கடைசி வரை இழுத்து செல்கிற முக்கிய பாத்திரம் ஜெயிலர் பாஸ்கர். ""பாலா, ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரது பாராட்டுகள் முதல் படத்திலேயே எனக்குக் கிடைத்தது மிகவும் பாக்கியம்.
இதற்கெல்லாம் காரணம் இயக்குநர் பிரபு சாலமன்தான். என் சினிமா தாகம் உணர்ந்து இந்த கேரக்டரை வழங்கினார். படத்தின் 80 சதவீத காட்சிகளில் நான் வருகிறேன். ஹீரோ, ஹீரோயின் அல்லாமல் முதல் படத்திலேயே இந்த அளவுக்கு எந்த நடிகரும் இத்தனை காட்சிகளில் வந்திருக்க மாட்டார்கள். போலீஸ் இன்ஸ்பெக்டர் கேரக்டர்தானே கொஞ்சம் மிடுக்கு காட்டி நடிக்கலாம் என்ற ஆசையில் இருந்தேன். குடும்பப் பிரச்னை, தலை தீபாவளியை இழந்த சோகம், மனைவின் அடுத்தடுத்த தொலைபேசி அழைப்புகள், காவல்துறை மேல் அதிகாரிகளின் எச்சரிக்கைகள் இவற்றையெல்லாம் முக பாவனைகளில்தான் நீ காட்ட வேண்டும். உனக்கென பெரிதாக நடிப்பு இல்லை. ஆனால் எல்லா காட்சிகளிலும் உன் முகம் மட்டும் நடிக்க வேண்டும் என்றார்.
அந்த வார்த்தைகளை கடைசி வரை கடைப்பிடித்து நடித்தேன். "நல்ல சினிமாவை எப்போதும் ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள். இந்தப் படத்தின் வெற்றியை இப்போதே கொண்டாடுங்கள்' என்றார் ரிலீசுக்கு முன்பே படம் பார்த்த இயக்குநர் பாலா. அந்த வார்த்தைகள் அப்படியே உண்மையானது'' என்றார் ஜெயிலர் பாஸ்கராக நடித்துள்ள சேது.
பாட்டியின் பாசப் போராட்டம்!
மகேஷ் மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் "பேராண்டி'. சின்னத்திரை நடிகர் சஞ்சீவி கதாநாயகனாக நடிக்கிறார். முக்கிய வேடத்தில் மனோரமா நடிக்கிறார். இவர்களுடன் ரேகா, கஞ்சா கருப்பு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை இயக்குகிறார் புதுமுக இயக்குநர் தங்கமணி. படம் குறித்து அவரிடம் பேசியபோது, ""கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு நான் பார்த்த ஒரு உண்மைச் சம்பவத்தைதான் இதில் திரைக்கதையாக மாற்றியிருக்கிறேன். பாட்டிக்கும் அவளது பேரனுக்கும் இடையில் நடந்த பாசப் போராட்டத்தை மையமாகக் கொண்டு கதை அமைந்துள்ளது. முதல் பாதி முழுமையும் நகைச்சுவையான திரைக்கதையாகவும், பின்பாதி செண்டிமென்ட் கலந்தும் இருக்கும். கதாநாயகியாக நடிக்க சரண்யா மோகனிடம் பேச்சுவார்த்தை நடக்கிறது. ஏற்கனவே சில காமெடி படங்களில் சரண்யா மோகன் நடித்திருப்பதால் இந்தப் படத்தில் அவரையே நடிக்க வைக்கலாம் எனத் தோன்றியது. பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்தில் இருக்கிறது. இதுவரை 3400-க்கும் மேற்பட்ட படங்களில் மனோரமா நடித்திருந்தாலும், இப்படம் அவருக்கு சிறந்ததொரு பெயரை வாங்கித் தரும். பாசம், நேசம், வீரம் நிறைந்த பாட்டியாக மனோரமா இதில் நடிக்கிறார்'' என்றார் தங்கமணி.
புல்லும் ஆயுதம்தான்!
வலிமையானவன் என உலகில் ஒருவரும் இல்லை. பலம் இல்லாதவன் ஆனாலும் அவன் நினைத்தால் அவன் கையில் எதுவும் ஆயுதமாகலாம். வல்லவனுக்கு மட்டுமல்ல மென்மையானவனுக்கும் புல் ஆயுதம்தான் என்பதை மையமாக வைத்து "விராதம்' என்ற படத்தை இயக்கியுள்ளார் புதுமுக இயக்குநர் அஜித் எம். கோபிநாத். ""என்னுடைய பாட்டி பங்கஜவல்லி அந்த காலப் படங்களில் மாமியார் வேடத்தில் புகழ் பெற்றவர். என் தாய் மாமா மாவேலிக்கரை கோவிந்தன் தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர்.
அவர்களின் வழியில் நான் சினிமாவுக்கு வந்திருக்கிறேன். நான்கு உயிர் நண்பர்களுக்குள் ஒரு தற்கொலை, ஒரு கொலை, ஒரு விபத்து என மூன்று மரணங்கள் நிகழ்கின்றன. அதற்கான காரணங்களைத் துப்பறியும் நாயகிக்கு தொடர்ந்து அதிர்ச்சிகள் காத்திருக்கின்றன. தற்கொலைக்குக் காரணம் என்ன? யார் கொலை செய்தார்கள்? அதை விட அடுத்து யார் பலியாகப் போகிறார்கள்? இதற்குக் காரணமான வில்லன் யார்? இப்புதிர்களுக்கான முடிச்சுகளை வித்தியாசமான முறையில் அவிழ்ப்பதுதான் இந்த திரைக்கதை. கதை சொல்லும் விதம் தமிழ் சினிமாவுக்கு புதிதாக இருக்கும். ஜிஜோல், மிதுன், சமர்த்தியா, கிருஷ்ணா ஆகிய புதுமுகங்கள் நடித்துள்ளார்கள்'' என்றார் அஜித் எம்.கோபிநாத்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...