ஆயுர்வேதத்தின் அணுகுமுறை மற்ற மருத்துவமுறைகளிலிருந்து மாறுபடுகிறது. வாதம் எனும் தோஷம், வறட்சி, குளிர்ச்சி, சொரசொரப்பு, நுண்ணியது, நகருதல் எனும் குணங்களைக் கொண்டது. மழை மற்றும் குளிர்நாள்களில் இந்தக் குணங்களின் ஆதிக்கம் நம் உடலில் கூடுவதால், வாததோஷம் எழுச்சி அடைந்து முதுகு, இடுப்பு ஆகிய பகுதிகளிலுள்ள தசைநார்களின் உள்ளே நுழைந்து விடுவதால், அங்குள்ள நரம்புகளைச் சுண்டி இழுக்கக் கூடும். குளிர்ச்சியான பொருள்களின் மீது உடலின் தசைப் பகுதிகள் படும்போது, வலி கூடுவதன் ரகசியம், வாயு தோஷத்தின் குளிர்ச்சி எனும் குணத்தில்தான். குணத்தின் வளர்ச்சியினால்தான் நம் உடலில் செயல்கள் நடைபெறுகின்றன. வெளிப்புறக் குளிர்ச்சியும், தசைகளிலும் எலும்புகளிலும் குடி கொண்டுள்ள வாததோஷத்தின் குளிர்ச்சியும் ஒன்றாக ஒத்துப்போவதால், உங்களுக்கு முதுகு மற்றும் தசைப் பிடிப்பு ஏற்பட்டிருக்கிறது.