சீரகம் மற்றும் வெந்தயத்தால் நீரிழிவு உபாதையும் இரத்த அழுத்தமும் சீராகிவிடும் என்பதற்கான ஆதாரங்களை ஆயுர்வேதம் எங்கும் குறிப்பிட்டுள்ளதாகத் தெரியவில்லை. இவை இரண்டும் வாதம் மற்றும் கப தோஷங்களின் சீற்றத்தால் ஏற்படக்கூடிய உடல் உபாதைகளை நீக்கக் கூடியவை. அந்த வகையில் கபத்தின் சீற்றத்தால் ஏற்படக்கூடிய நீரிழிவு உபத்திரவங்களாகிய பசிக்குறைவு, நாக்கில் ருசியின்மை, வாந்தி, அதிக அளவில் தூக்கம் வருதல், இருமல், மூக்கிலிருந்து நீர் வடிதல் போன்ற நிலைகளில், சீரகத்தை வறுத்தோ, வறுக்காமலோ அல்லது எலுமிச்சம் பழச்சாறு, கசப்பு நார்த்தைச் சாறு ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் ஊற வைத்து, உலர்த்திப் பொடித்தோ, காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட, இந்த உபாதைகள் நீங்கி, பசி நன்றாக எடுக்கும். இதனுடன் வெந்தயப் பொடியைச் சேர்க்க வேண்டிய கட்டாயம் கிடையாது. மேலும் வெந்தயம் ஒரு கசப்பான பொருளாக இருப்பதால் அதைக் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதைப் பலரும் விரும்புவதில்லை. வெந்தயம், கடுகு, பெருங்காயம், கறி மஞ்சள், இந்துப்பு இவற்றைச் சம அளவில் எடுத்து நெய்விட்டு வறுத்துப் பொடி செய்து சாதத்துடன் கலந்து பிசைந்து சாப்பிட்டு வர வாத தோஷத்தின் சீற்றத்தினால் ஏற்படும் நீரிழிவு உபாதைகளான வயிற்றுவலி, வயிற்றுப் பொருமல், நரம்பு வலி போன்றவை குணமாகிவிடும்.