சாப்பிட்ட பிறகு தூக்கம் வருவது இயல்பு. ஆனால் அதன் செரிமானத்தின் இறுதியில் உற்சாகம் சுறுசுறுப்பு போன்றவை வளர வேண்டும். உங்களுடைய விஷயத்தில் பிராணவாயு -க்லேதகபம்-பாசகபித்தம்-ஸமான வாயு போன்றவை அவசர வாழ்க்கையின் விளைவாக திறம்பட வேலை செய்யவில்லை என்றே தோன்றுகிறது. அதிலும், முதல் நிலை செரிமானத்தில் ஏற்படும் நுரை மற்றும் இனிப்புச்சுவை, உங்களை மந்தமான நிலைக்குத் தள்ளுகிறது. அதை சரிசெய்ய, உங்களுடைய கைப்பையில் ஒரு சிறிய டப்பாவில் அரை ஸ்பூன் சீரகம், ஓமம்,சோம்பு,4-6 ஏலக்காய் விதை, 2-4 கிராம்பு, ஒரு சிறிய லவங்கப்பட்டை, சுண்ணாம்பு தடவி காம்பும், இலையின் அடிப்பகுதியும் நீக்கப்பட்ட இரண்டு கொழுந்து வெற்றிலை ஆகியவற்றை அலுவலகத்திற்கு எடுத்துச் செல்லவும். மதிய உணவிற்குப்பிறகு, வெற்றிலையில் மற்றவை அனைத்தையும் சிட்டிகை பாக்கும் சுருட்டி, வாயில் போட்டு மெல்லவும். அதிலிருந்து வரும் சாற்றை, எச்சிலுடன் விழுங்கி, சக்கை இருந்தால் துப்பிவிடவும்.