எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

திரைக்கதிர்: 71 சீன்கள்... 71சிறுகதைகள்!

திருவாரூர் பாபு என்ற பெயரில் 700}க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதிய பத்திரிகையாளர், பாபு கே.விசுவநாத் என்ற பெயரில் "கந்தா' படத்தை இயக்குகிறார். இதில் கரண் கதாநாயகனாக நடிக்கிறார். படத்தின் இறுதிக் கட்டப

News image
Updated On :27 டிசம்பர் 2023, 2:08 pm

மனோஜ் கிருஷ்ணா

திருவாரூர் பாபு என்ற பெயரில் 700}க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதிய பத்திரிகையாளர், பாபு கே.விசுவநாத் என்ற பெயரில் "கந்தா' படத்தை இயக்குகிறார். இதில் கரண் கதாநாயகனாக நடிக்கிறார். படத்தின் இறுதிக் கட்டப் பணியில் இருந்த இயக்குநரிடம் பேசியபோது...

""இது ஓர் ஆசிரியருக்கும் அவரது மாணவனுக்குமான கதை. தன்னை வளர்த்து ஆளாக்கிய ஆசிரியரைச் சந்திக்க முயற்சிக்கும் மாணவன் எதிர்கொள்ளும் சம்பவங்களை யதார்த்தமாகவும் உணர்வுப்பூர்வமாகவும் கூறியிருக்கிறேன். ஆசிரியராக ராஜேஷ் நடித்துள்ளார்.

ஓவியர் அரஸ், போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். முழு படத்தையும் தஞ்சையில் படமாக்கியிருக்கிறோம்.  ஏ.ஆர்.ரஹ்மான், தேவா ஆகியோரிடம் பணியாற்றிய சக்தி ஆர்.செல்வா படத்துக்கு இசையமைத்துள்ளார்.

படத்தில் 71 சீன்கள். ஒவ்வொரு சீனையும் ஒரு சிறுகதையைப் போல கவனமாகச் செதுக்கியிருக்கிறோம். இன்றைய சூழலில் சமுதாயத்துக்குத் தேவையான நல்ல மெúஸஜைத் திகட்டாத ஜனரஞ்சக அம்சங்களுடன் கலந்து சொல்லியிருக்கிறோம்'' என்றார்.

"ஒரே ஃபார்முலா ஒதவாது.... ஒதவாது!'

"அஞ்சாதே', "நாணயம்', "கோவா' படங்களில் வித்தியாசமான வேடமேற்று ரசிகர்களைக் கவர்ந்த பிரசன்னாவுக்கு ஒரு புதிய பிரச்னை. அவரைத் தேடி பல்வேறு வாய்ப்புகள் வந்தாலும் எதைத் தேர்ந்தெடுப்பது என குழப்பத்தில் இருக்கிறாராம். இதுகுறித்து பிரசன்னாவிடம் கேட்டபோது...

""இப்போதுள்ள புதிய இயக்குநர்கள் பலர் வித்தியாசமான கதைக் கருவோடு என்னைச் சந்தித்து கதை சொல்லுகிறார்கள். எல்லா கதைகளும் சிறப்பாக இருந்தாலும் எதைத் தேர்ந்தெடுப்பது என்பதில் ஒரு பயமும் தயக்கமும் இருக்கத்தான் செய்கிறது.

என்னுடைய படங்கள் ஒரே ஃபார்முலாவில் அமைந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். உதாரணமாக, "கோவா' படத்தில் ஒரு கெüரவ வேடத்தில் நடித்தேன். உடனே பத்துக்கும் மேற்பட்ட கம்பெனிகளிலிருந்து அதே போன்ற வேடத்தில் நடிக்க அழைப்பு வருகிறது.

அதனால்தான் கதைத் தேர்வில் கவனமாக இருக்கிறேன். மிஷ்கின் உதவியாளர் இயக்கத்தில் நான் நடிக்கவுள்ள "முரண்' படம் என்னுடைய சினிமா வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தும். இதில் வித்தியாசமான "கெட்}அப்'பில் நடிப்பதால் இந்தப் படம் முடியும்வரை வேறு படங்களில் நடிக்க மாட்டேன்'' என்றார்.

முதல் இந்திய படமும்; முதல் ஆசிய படமும்!

அமெரிக்காவைச் சேர்ந்த என்ஜினீயர் ஜி.அருண், முழுக்க முழுக்க உயர் தொழில்நுட்பத்தின் உதவி கொண்டு "எதிர்மறை' என்ற புலனாய்வுத் திரைப்படத்தை உருவாக்கியுள்ளார். படத்தின் ஒளிப்பதிவுப் பொறுப்பை ஏற்றிருப்பவரும் இவரே. புதுமுகங்கள் நடித்துள்ள இந்தப் படத்தைப் பற்றி கேட்டபோது...

""இது, தமிழ் சினிமாவில் இதுவரை சொல்லப்படாத ஓர் உளவியல் பிரச்னையை மையமாகக் கொண்ட கதை. படத்தின் ஒவ்வொரு காட்சியும் ஒரு பிரமாண்டமான வெற்றிப் படத்தின் க்ளைமாக்ஸýக்குச் சமமாக இருக்கும். "ரெட் ஒன்' கேமிராவைப் பயன்படுத்திய முதல் இந்தியப் படம், ஃபேன்டம் கேமிராவைப் பயன்படுத்தி உருவான முதல் ஆசியப் படம் போன்ற பெருமைகள் "எதிர்மறை' தமிழ்ப் படத்துக்கு உண்டு.

இது போன்ற படத்துக்குப் பாடல்களே தேவையில்லை என்றாலும் ரசிகர்களை மகிழ்விக்கவும் ஓர் அழகுணர்ச்சிக்காகவும் வைரமுத்துவிடம் பாடல்களைக் கேட்டுப் பெற்றிருக்கிறோம். முருகன் மோகனின் பின்னணி இசை ஹாலிவுட்டையும் மிரட்டும். ரசிகர்களின் வரவேற்புக்காகக் காத்திருக்கிறோம்'' என்றார் இயக்குநர் ஜி.அருண்.

"தாண்டவக்கோனே'  அனுபவம்!

சீமானிடம் உதவியாளராகப் பணியாற்றிய சுப்புசுஜாதா "தாண்டவக்கோனே' படத்தின் மூலம் இயக்குநர் ஆகிறார். புதுமுகம் சஞ்சய்குமார், "அவள் பெயர் தமிழரசி' நந்தகி, சம்பத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். தேனி, பெரியகுளம், கம்பம் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து 40 நாள்கள் படப்பிடிப்பை முடித்துவிட்டு திரும்பிய இயக்குநரிடம் பேசியபோது...

""தாய் தந்தை யாரென்று தெரியாமல், வாழ்க்கையில் எந்தப் பிடிப்பும் இல்லாமல் தன் மனம்போன போக்கில் வாழ்ந்துகொண்டிருக்கும் ஓர் இளைஞனை ஒரு சம்பவம் பாதிக்கிறது. அதையடுத்து அவனுடைய வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களும் ஏற்றங்களும்தான் கதை. படத்துக்கு இளையராஜாவின் இசைதான் பெரிய பலம்.

விஜய் டி.வி. நடத்திய "கமல் 50' பொன்விழா நிகழ்ச்சியில் கமல்ஹாசனைப் பாராட்டி மேடையிலேயே ஒரு கவிதையை வாசித்தார் இளையராஜா. அதே மெட்டில் சினேகன் எழுதிய "என்னைப் போல ஒருத்தன் இங்கே இருக்கானா? என்னுடைய பொழப்பு இதுவும் சரிதானா...' என்ற தத்துவப் பாடல் பார்ப்பவர்களை நெகிழச் செய்யும்.

மேலும் கதையில் லயித்துப்போன இளையராஜா, "காட்டுவழி துன்பம் இல்லே, கல்லுமுள்ளு தொல்லையில்லே, சுமைகளெல்லாம் சுமையே இல்லே, காலந்தோறும் பயமே இல்லே...' என்ற பாடலையும் இந்தப் படத்துக்காக எழுதியிருக்கிறார். ஒரே ஃபார்முலா படங்களால் சலிப்புற்ற ரசிகர்களுக்கு "தாண்டவக்கோனே' ஒரு புதிய அனுபவத்தைத் தரும்'' என்றார்.

வெளிப்படையான ரகசியம்!

"சிரிச்சு சிரிச்சு வந்த சீனா தானா...' நடிகை ரகசியா, இனி ஒரு படத்தில் நடனமாடுவதில்லை என முடிவெடுத்திருக்கிறார். இதுபற்றி கேட்டபோது...

""ஒரு பாடலுக்கு நடனமாடுபவர்தானே என பலரும் தவறாக நினைத்துவிடுகிறார்கள். மேலும் சிறு பட்ஜெட் படங்களில் நடித்தால் பாதிப் பணத்தை மட்டும் தந்துவிட்டு மீதிப் பணத்தைத் தராமல் ஏமாற்றிவிடுகிறார்கள்.

அதனால் இனி, பெரிய பட்ஜெட் படமானாலும் சரி, சிறிய பட்ஜெட் படமானாலும் சரி... முழுப் பணத்தையும் ஒரே பேமெண்ட்டில் தருபவர்களின் படங்களில் மட்டுமே நடனமாடுவார். ஒரு பாடலுக்கு மட்டும் கோடிகோடியாக செலவழிக்கும் தயாரிப்பாளர்கள் அந்தப் பாடலுக்கு நடனமாடும் நடிகைக்கு முழு சம்பளத்தையும் தர யோசிப்பதால்தான் இந்தப் புதிய முடிவு'' என வெளிப்படையாகக் காரணம் கற்பிக்கிறது ரகசியா வட்டாரம்.

தமிழில் பேச ஆசை!

ஆர்யாவுடன் நடிக்கும் "பாஸ் என்கிற பாஸ்கரன்' படம் மட்டுமே தற்போது நயன்தாரா வசம் உள்ளது. காதல், ரகசிய திருமணம் போன்ற செய்திகளால் வாய்ப்புகள் குறைந்துவிட்டனவா என்று கேட்டால்...

""தமிழை வைத்து மட்டும் அப்படி நினைத்துவிடக் கூடாது. தெலுங்கில் "சிம்ஹா', மலையாளத்தில் "எலெக்ட்ரா', கன்னடத்தில் உபேந்திராவுடன் ஒரு படம் என என்னுடைய "கிராஃப்' சரியாகத்தான் உள்ளது.

தமிழில் சில படங்களில் நடிக்க முடியாமல் போனது. அந்தப் படங்கள் பெரிய வெற்றியையும் பெற்றுள்ளன. அதற்காக நான் கவலைப்படவில்லை. நமக்கு எது கிடைக்குமோ அதுதான் கிடைக்கும். "எலெக்ட்ரா' மலையாளப் படத்தில் நானே டப்பிங் பேசவுள்ளேன். என்னுடைய ஆசையெல்லாம் ஒரு தமிழ்ப் படத்தில் சொந்தக் குரலில் பேசி நடிக்க வேண்டும் என்பதுதான். அது இந்த ஆண்டு நிறைவேறிவிடும்'' என்கிறார் நயன்தாரா.

கருப்பம்பட்டினாலும் பிரான்சில்தான் எல்லாமும்!

ஷங்கரிடம் உதவியாளராகப் பணியாற்றிய பிரபுராஜசோழன் "கருப்பம்பட்டி' என்ற படத்தை இயக்குகிறார். இதில் அஜ்மல் அப்பா}மகன் என மாறுபட்ட இரு வேடங்களில் நடிக்கிறார். இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்க வைக்க பலரையும் பரிசீலித்து இறுதியில் சோனம் கபூரைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் இயக்குநர். சோனம்கபூர், பிரபல ஹிந்தி நடிகரின் மகள்.

சில ஹிந்திப் படங்களில் நடித்து வரும் சோனம்கபூரை "கருப்பம்பட்டி' கதை வெகுவாகக் கவர்ந்துள்ளது. "கருப்பம்பட்டி' என்று டைட்டில் வைத்திருந்தாலும் படத்தின் பெரும்பாலான காட்சிகள் பிரான்சில் படமாக்கப்படுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.