நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: பித்தம் உடலின் அக்னி!

எனக்குச் சிறுவயது முதலே உடல் சூடாகவும், உள்ளங்கை, உள்ளங்கால்களில் வியர்வை அதிகமாகவும் சுரக்கிறது. என்னதான் குளிர்ச்சியாகச் சாப்பிட்டாலும் உடல் சூடு குறையவில்லை. இதற்கு ஆயுர்வேத சிகிச்சை முறைகள் என்ன?

News image
Updated On :25 டிசம்பர் 2023, 2:35 pm

எஸ். சுவாமிநாதன்

எனக்குச் சிறுவயது முதலே உடல் சூடாகவும், உள்ளங்கை, உள்ளங்கால்களில் வியர்வை அதிகமாகவும் சுரக்கிறது. என்னதான் குளிர்ச்சியாகச் சாப்பிட்டாலும் உடல் சூடு குறையவில்லை. இதற்கு ஆயுர்வேத சிகிச்சை முறைகள் என்ன?

கணேசன், மதுரை.

உங்களைக் கருவாக அம்மா தன் வயிற்றில் சுமந்தபோது, அவருக்கு ஏற்பட்டிருந்த மனம் மற்றும் உடல்நிலை மாற்றங்களால் இன்று உங்களுக்கு இவ்வாறு நேர்ந்திருக்கலாம். மனதில் அம்மாவிற்குச் சினம், வெறுப்பு, அமைதியற்ற தன்மை, படபடப்பு, எரிச்சல், வீட்டில் அடிக்கடி சண்டையினால் வருத்தம் ஆகியவை கருவுற்றநிலையில் ஏற்பட்டிருந்தாலும், உணவில் அதிக காரம், புளி, உப்பு, மாமிச உணவுகளைச் சாப்பிட்டிருந்தாலும், உடல்நிலை பாதிக்கப்பட்டு மருந்துகளைச் சாப்பிட நேர்ந்திருந்தாலும், செப்டம்பர் முதல் நவம்பர் வரை உள்ள மாதங்களில் நீங்கள் பிறந்திருந்தாலும் உங்களுக்கு உடற்சூடும் நீங்கள் குறிப்பிடும் உபாதைகளும் என்றென்றும் நிலைத்திருக்கும். இதற்கு ப்ரக்ருதி அதாவது உடல்வாகு இயற்கையாக இப்படித்தான் அமையும். நீங்கள் பித்த ப்ரக்ருதியைச் சார்ந்தவராக இருக்கிறீர்கள். இதில் அப்பாவும் தன் பங்கை அளித்திருக்கலாம். பித்த ப்ருக்ருதியைக் கொண்டவர்களுக்கு மேலும் சில குணாதிசயங்களை ஆயுர்வேதம் கூறுகிறது.

பித்தம் உடலின் அக்னி எனப்படுகிறது அல்லது அக்னியிலிருந்து பித்தம் உண்டாவதாகவும் கருதப்படுகிறது. ஆகையால் பித்தம் உடலில் அதிகமாக இருப்பதால், அதிகமான தண்ணீர் தாகம், பசியும் உண்டாகும். உடல் மஞ்சளாகவும், சூடாகவும் இருப்பதுடன் கைகள், கால்கள், முகம் ஆகியவை செந்நிறமுடையனவாக இருக்கும். சூரனாகவும், தன்மானம் உள்ளவராகவும், செந்நிறமான (செம்பட்டை) தலைமுடியும், குறைந்த ரோமம் உள்ளவராகவும் இருப்பர்.

புஷ்பங்கள், மலர்மாலை, பூச்சுக்கள், அலங்காரம் ஆகியவற்றை விரும்புபவராகவும், நன்னடத்தை, பரிசுத்தம் ஆகியவை உடையவராகவும், தன்னை நம்பி இருப்பவரிடம் அன்பு உள்ளவராகவும், செல்வம், சாகஸம், புத்தி, பலம், ஆகியவை உடையவராகவும், பயம் உண்டான காலத்தில் எதிராளியையும் காப்பாற்றுபவராகவும் இருப்பர்.

மேதாவியாகவும், மூட்டுகள், மாமிசப் பகுதிகள் ஆகியவை தளர்ச்சியடைந்தவராகவும், பெண்களுக்கு விருப்பமில்லாதவராகவும் இருப்பர். குறைந்த அளவில் விந்துவும், பெண்ணாசை குறைந்தவராகவும் இருப்பர்.

நரை, சதைச் சுருக்கம், கருந்திட்டுகள் ஆகியவற்றை உடையவராக இருப்பர். இனிப்பு, துவர்ப்பு, கசப்பு ஆகிய சுவையுள்ளவற்றையும், குளிர்ச்சியான உணவையும் விரும்பிச் சாப்பிடுவார்கள். வெயிலை வெறுப்பார்கள். வியர்வை அதிகமுண்டாகும். கெட்ட நாற்றமுடையவராயிருப்பர். அதிக அளவில் மலம், கோபம், பானம் குடித்தல், பொறாமை ஆகியவை உடையவராயிருப்பர். தூக்கத்தில் கொன்றை, புரசு ஆகிய மரங்களையும், திசைகள் எரிவதையும், கொள்ளிக்கட்டை, மின்னல், சூரியன், அக்னி ஆகியவற்றையும் காண்பர்.

கண்கள் சிறியவையாகவும், பொன்னிறமாகவும், நிலையற்றவனாகவும், மெல்லியதும், குறைவான இமையுடனும் இருக்கும். கண்களுக்கு குளிர்ச்சியான பொருட்களில் விருப்பம் உண்டாகும். கோபம், மது, சூரிய வெளிச்சம் ஆகியவற்றால் விரைவில் கண்கள் சிவப்பாகிவிடும்.

இவர்கள் நடுத்தரமான ஆயுளும், பலமும் உள்ளவராகவும் இருப்பர். அறிவுடையவர்கள். கஷ்டங்களைக் கண்டு நடுங்குவர்.

பித்தப் ப்ரக்ருதியை உடல்வாகாக ஏற்றிருக்கும் உங்களுக்கு அதன் மூலம் ஏற்படும் இயற்கையான உடல் பிரச்னைகளை மருந்துகளால் மாற்ற இயலாது. ஆனால் பித்தம் சீற்றமடையாமல் கட்டுக்குள் வைத்திருக்கத் தங்களால் முடியும். உணவில் துவர்ப்பும், கசப்பும், இனிப்பும் அதிகம் சேர்க்கவும். உப்பும், புளிப்பும் மிதமாயிருத்தல் நலம். கரும்புச் சாறு, கடைந்த மோரில் சர்க்கரை கலந்த இனிப்பான பானம் நல்லது.

நெல்லிக்காய்ச் சாறுடன் சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்துச் சாப்பிடவும். லஸ்ஸி, இனிக்கும் பழங்கள், நெய், வெண்ணெய் நல்லவை. சுண்டைக்காய் வற்றல், மணத்தக்காளி வத்தல், நார்த்தை, எலுமிச்சை, இஞ்சி, மாவடு, மிளகு முதலியவை சேர்த்துத் தயாரிக்கப்பட்ட ஊறுகாய்கள் சாப்பிடலாம். பொன்னாங்கண்ணி, மணத்தக்காளிக் கீரை, வல்லாரை, முருங்கைக் கீரை, சிறுகீரை, பூசணி, பரங்கிக்காய், புடலை, பீர்க்கு, வெள்ளரிப் பிஞ்சு, வெங்காயம், சக்கரை வள்ளி, வாழைத்தண்டு, வாழைப்பூ, பாகற்காய் ஆகியவை சாப்பிட நல்லது.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.